(1432)

(1432)

வக்கரன் வாய்முன் கீண்ட மாயவனே என்று வானேர்

புக்கு, அரண் தந்த ருள்வாய், என்னப்பொன் னாகத் தானை,

நக்கரி யுருவ மாகி நகங்கிளர்ந் திடந்து கந்த,

சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன்தா ளடைந்துய்ந் தேனே,


பதவுரை

முன்

முன்பொருகால்

வானோர்

தேவதைகள்

வக்கரன் வாய் கீண்ட மாயனே என்று

‘தந்தவக்ரனடைய வாயைக் கிழித்துப் போட்ட மாயவனே’ என்று (துதித்துக்கொண்டு)

புக்கு

வந்து சேர்ந்து

அரண் தந்தருளாய் என்ன

‘(எங்களுக்கு) ரக்ஷை கொடுத்தருளவேணும்’ என்று பிரார்த்திக்க

பொன் ஆகத்தானை

இரணியாசுரனை,

அரி உருவம் ஆகி

நரஸிம்ஹரூபியாகி

நக்கு கிளர்ந்து நகம் இடந்து உகந்த

சிரித்து வளர்ச்சியடைந்து நகங்களினால் கிழித்துப்போட்டு திருவுள்ளம் மகிழ்ந்தவனும்

சக்கரம் செல்வன்

திருவாழியாலே அழகு பெற்றவனும்இ

தென் பேர் தலைவன்

தென் திருப்பேர் நகரிலெழுந்தருளி யிருப்பவனுமான பெருமானுடைய

தாள் அடைந்து உய்ந்தேன்

திருவடிகளை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கப்பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வக்கரன் – ‘தந்தவக்ரன்’ என்ற பெயாரின் ஏகதேசம்.  கண்ணபிரான் ருக்மிணிக் பிராட்டியை ஸ்வீகரித்தருளின போது எதிர்த்து வந்து போர்செய்து மாண்டொழிந்த அரசர்களில் இவனொருவன்.

நரஸிம்ஹாவதாரத்திற்கு மிகவும் பிற்பட்டதான க்ருஷ்ணாவதாரத்தில் கொல்லப்பட்ட  வக்ரனைப்பற்றி நரஸிம்ஹாவதாரத்திற்குமுன் வானோர் எடுத்துக்கூறினரென்றால் இது பொருந்துமோ? என்று சங்கிக்கவேண்டா; என்பெருமானுடைய திருவவதாரங்கள் பன்முறை நிகழ்ந்தனவாக நூல்கள் கூறும்.  அன்றியும், இரணியனால் தகர்ப்புண்ட தேவர்கள் ஏதோ சில வாக்கியங்களைச் சொல்லி எம்பெருமானைத் துதித்திருந்தாலும் ‘வக்கரன் வாய்முன் கீண்ட மாயனே!’ என்று ஆழ்வார் அருளிச்செய்யக் குறையில்லை. “தேனுகனும் முரனும் திண்டி றல் வெந்நரகனென்பவர்தாம் மடியச் செருவதிரச் செல்லும், ஆனை! எனக்கொருகாலாடுக சங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுகவாடுகவே” என்று கண்ணபிரானுடைய இளம்பிராயத்தில் யசோதைப்பிராட்டி கூறுவதாகப் பெரியாழ்வா ரருளிச்செய்த பாசுரமும் இது போன்ற மற்றும் பல பாசுரங்களும் இங்கு ஸ்மரிக்கத்தக்கன.

பொன்னாகத்தான் – பொன்னுடம்பினன்; இரணியன், ‘நக்கரி’ என்ற விடத்து, நக்கு + அரி, நக்கரி என்றுங் கொள்ளலாம்; வாய்திறந்துகொண்ட தோன்றின நரசிங்கம் என்கை.

சக்கரச்செல்வன் = விரோதிகளைக் கொலைபுரியம் விஷயம் வந்தால் திருவாழியாழ்வான் முன் முற்படுவது வழக்கம்; ஹிரண்யாஸுரவத ஸமயத்தில் அவ்வசுரனுடைய உடல் நரசிம்ஹ மூர்த்தியின் திருநகங்களுக்கே இரைபோதாமையாலே திருவாழியாழ்வான் வியாபக அங்கு அவகாசமே இல்லையாயிற்று; ஆகவே, தான் அழகுக்கு உடலாக அமைந்தானத்தன; அதைச்சொல்லுகிறதாம் சக்கரச்செல்வன் என்று.  செல்வு – அழகு.

 

English Translation

Gods in hordes came and worshipped the Lord saying, “O wonder Lord who ripped apart the jaws of Vakradantal protect us!”  The Lord then came as a man-lion gaping wide, and tore apart Hiranya’s chest with his claws.  He is the adorable descus-wielder, resident of Ten-Tirupper. How easily have I attained him through chanting his names!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top