(1224)

(1224)

தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத் தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,

இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல் அடிவைத்த அம்மா னிடம்,மாமதியம்

திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று,மூன்றில்

வளைக்கை நுளை ப்பாவை யர்மாறு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

 

பதவுரை

தளை (தாமரை)

கட்டுவிரியாமல் மொக்காயிருக்கிற (தாமரைப் பூக்களும்)

கட்டு அவிழ் தாமரை

கட்டு நெகிழ்ந்து அலர்ந்த தாமரைப் பூக்களும்

வைகு

தங்கி யிருக்கப்பெற்ற

பொய்கைத் தடம் புக்கு

பொய்கையிலே புகுந்து,

அடங்காவிடம் கால் அரவம் இளைக்க திளைத்திட்டு

(அப்பொய்கையினுள்) அடங்காமல் கிளர்ந்தெழுந்தாய் விஷத்தைக் கக்குகின்ற காளிய நாகம் இளைத்துப்போம்படி விளையாடி

அதன் உச்சி தன்மேல் அடி வைத்த அம்மான்

அதன் தலைமேலே திருவடியை நாட்டியருளின் பெருமானுடைய

இடம்

இருப்பிடமாய்;-

வளை கை நுளைப்பாவையர்

வளையணிந்த கையையுடைய குறத்திகள்,

மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்

சந்திரன் விளையாடும்படி ஓங்கின, கொடிகளணிந்த மாளிகைகள் நிறைந்த வீதியிலே

செழு முத்து

சிறந்த முத்துக்களை

வெண் நெற்கு என

வெளுத்த நெல்லுகளுக்குத் தருகிறோமென்று சொல்லிக்கொண்டு

முன்றில் சென்று மாறும்

ஒவ்வொரு வீட்டுவாசலிலும் போய் விற்பனை செய்யப்பெற்ற

நாங்கூர்

திருநாங்கூரிலே

மணிமாடக்கோயில் என் மனனே ! வணங்கு–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தளைக் கட்டவிழ் தாமரை = ‘தளைத்தாமரை, கட்டவிழ் தாமரை’  என்று இரண்டு படியாக யோஜிப்பது. தளையாவது கட்டு; நெகிழாமல் முகுளமாகவே யிருக்கிற தாமரைகளும், கட்டவிழ்ந்து மலர்ந்துள்ள தாமரைகளும் தங்கியிருக்கிற பொய்கை என்றவாறு.

விடம் கால் = ‘கால்’  என்பது வினைப்பகுதி. (‘காற்று’ என்னுஞ் சொல் இப்பகுதி யடியாகவே பிறந்தது,) காலுதல்-வீகதல். காலரவம்-வினைத்தொகை. அதனுச்சிதன் மேலடிவைத்த = “அடிச்சி யோந்தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்” 3694. என்று அன்பர் சென்னிக் கணியாகத் திருவடிகளை வைத்திடாயென்று எத்தனையேனும் வேண்டியனாலும் கிடைக்கமாட்டாத திருவடிகள் பாபியான காளியன் தலையிலே வைக்கப்பட்டனவே! என்ற பரிதாபம் தோற்றம். ஆழ்வானும் ஸூந்தரபாஹூ ஸ்தவத்திலே ‘ஐயோ! நான் காளியம் தலையாகப் பிறவாதொழிந்தேனே!’ என்று ஒரு ச்லோகத்தால் கதறுகின்றார் -“ இத்தாதி.

(மாமதியந்திருஹக்கும் இத்தாதி.) திருநாங்கூரில் வாழ்பவர்களனைவரும் பெருஞ்செல்வம் பொலிந்தவர்களென்பது விளங்க “மாமதியந்திருஹக்குங் கொடிமாளிகை சூழ்தெரு” எனப்பட்டது. மாளிகைகளிலே கொடி நாட்டப்பட்டிருக்கும்; அவை சந்திரமண்டலத்தை எட்டிருயிருக்கையாலே, கடமையாக ஸஞ்சரிக்கவேண்டிய சந்திரன் அக்கொடிகளிலே துவக்குண்டு அப்பால் செல்லப்பெறாமல்  அவற்றோடே விளையாடுகிறபடி. இப்படிப்பட்ட மாளிகைகள் நிறைந்த வீதிகளிலே குறத்திகள் தங்களுக்கு அவலீலையாகக் கிடைக்கிற நன்முத்துக்களைக் கூடை கூடையாகக் கொணர்ந்து நாழி நெல்லுக்கு விற்பனை செய்கிறார்களாம்.

 

English Translation

Then in the yore the Lord entered the lake of lotus buds and opened blossoms, then placed his feet on the hoods of the venom-spitting snake. He resides in Nangur where pennons atop mansion: play with the Moon and bangled coastal women roam the streets peddling rice pearls for pearl rice. Offer worship in Manimadakkoyil, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top