(1155)

(1155)

விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு,

நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார்,

வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி,

திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே.

 

பதவுரை

விரை கமழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில் இறுத்து

பரிமளம் வீசுகின்ற மெல்லிய கறுத்த கூந்தலையுடையளான பிராட்டிக்காக வில்லை முறித்தவனும்,

அடல் மழைக்கு நிறை கலங்கிட

அஸஹ்யமான பெருமழை வந்தபோது ஆநிரைகள் பரிதபித்து நிற்க

வரை குடை எடுத்தவன்

கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துக் காத்தவன்

நிலவிய இடம்

மகிழ்ந்து உறையும் இடமாவது;

தடம் ஆர்வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு

தடாகங்கள் நிறைந்த மலைக்கு அழகுசெய்து விளங்குகின்ற மதயானைகளையுடைய

மருப்பொடு

தந்தங்களையும்

திரை உந்தி கொணர்ந்து அணை

அலைகளினாலே தள்ளிக் கொண்டுவந்து சேருகிற

செழு நதி

அழகிய ஆறு

வயல் புகு

கழனிகளில் பாயப்பெற்ற

திரு அயிந்திரபுரம்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தடமார்வரைவள மித்யாதி) ஆறுகள் பெரு வெள்ளமாய்ப் பெருகும்போது யானைத் தந்தங்களையும் அகில் மரங்களையும் மற்றும் பலப்பல மணிமாணிக்கங்களையும் கொழித்துக்கொண்டு வருகிற வழக்கமாகையாலும் அங்ஙனமே கவிகளும் கவிபாடுகிற வழக்கமையாலும், இங்கே கருடநதி ப்ரவஹிக்கும்படியை வருணிக்கிறாராயிற்று.

 

English Translation

The Lord who broke a bow for the sake of the dark tressed Sita, and who lifted the mountain to protect the cows against a storm resides in Tiruvayindirapuram where rivers flowing through the mountains and forest, bring elephant tusk and fragrant Agil wood as offering, then irrigate the fields.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top