(1083)

(1083)

பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்

காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்

பேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,

நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.


பதவுரை

ஆர் பார் உலகும்

விசாலமான பூலோகமும்

பனி மால் வரையும்

குளிர்ந்தபெரிய மலைகளும்

கடலும்

ஸமுத்ரங்களும்

சுடரும்

சந்திர ஸூரியர்களும்

இவை

ஆகிய இவற்றையடங்கலும்

உண்டும்

அமுது செய்தும்

எனக்கு ஆராது என நின்றவன்

எனக்கு வயிறு நிறை வில்லையே! என்று சொல்லிக்கொண்டே யிருந்தவனும்

எம்பெருமான்

எம்போலியர்க்கு ஸ்வாமியானவனும்

அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்பேரானை முனிந்த முனிக்கு அரையன்

கடல் சூழ்ந்த உலகத்துக்கு ராஜாக்களென்கிற அந்தப் பேரையுடைய க்ஷத்ரிய குலத்தைச் சீறிக்களைந்த பரசுராம முனிவரனாகத் தோன்றினவனும்

நுனக்கு பிறர் இல்லை எனும் எல்லையினான்

‘உனக்கு மேற்பட்டாரொருவருமில்லை‘ என்னும்படியாகப் பெருமையின் எல்லையிலே நிற்பவனும்

நீர் ஆர் பேரான்

நீர்வண்ணனென்னும் பேரான்

நீர்வண்ணனென்னும் திருநாமத்தை யுடையவனுமான

நெடு மால் அவனுக்கு

ஸர்வேச்வரனுக்கு

இடம் மா மலை ஆவது நீர்மலையே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பாராருலகும்) திருநீர்மலையிலுள்ள பெருமான் எப்படிப்பட்டவனெனில், “உலகமுண்ட பெருவாயன்“ என்றபடி உலகிலுள்ள பதார்த்தங்களெல்லாவற்றையும் வயிறுநிறைய அமுதுசெய்தும் இன்னமும் இப்படிப்பட்ட உலகங்கள் பல்லாயிரம் உள்ளே யடங்கும்படி இடமுடையவன், இருபத்தொரு தலைமுறையளவும் நிலவுலகில் க்ஷத்ரியப்பூண்டு வேரறும்படி களைந்தொழிந்த பரசுராம முனிவரனாக அவதரித்தவன், தனக்கு மேற்பட்டா ரொருவருமில்லையென்னும்படி பெருமையின் மேலெல்லையிலே நிற்குமவன், நீர்வண்ணனென்று திருநாமமுடையவன், இப்படிப்பட்ட ஸர்வேச்வரனுக்கு உறைவிடம் திருநீர்மலை.

உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையால் கொழுந்துத் திரிந்து கொடுமையற்றி வந்த க்ஷத்ரியவம்சங்கள் பலவற்றை நாசஞ்செய்நற்பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்நிமுனிவரது மனைவியான ரேணுகையினிடம் இராமனாய்த் திருவவதரித்துப் பரசு என்னும் கோடாலிப்படையை ஆயுதமாகக் கொண்டு அதனாற் பரசுராமனென வழங்கப்பெற்று, தனது தந்தையின் ஹோம தேனுவைக் கவர்ந்து அவனைக் கொன்றிட்டது காரணமாகக் கார்த்தவீர்யார் ஜுரனையும் அவனது குமாரர்களையும் கொன்று அதனாலேயே க்ஷத்ரியவம்சம் முழுவதன்மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டான். இப்பரசுராமன் ஏழு சிரஞ்ஜீவிகளில் ஒருவன். இவனது வலிமையும் வெற்றியும் அற்புதமானது. சிவபிரானது கைலாஸகிரியைப் பெயர்த்தெடுத்த இராவணன் மிக வலியவனென்றும், அவனிலும் கார்த்தவீரியன் வலியவனென்றும், அவனிலும் பரசுராமன் வலியவனென்றும் இதிஹாஸங்களால் விளங்கும். விஷத்தையுண்டு கங்கையைத்தரித்து மேரு வில்வளைத்துத் திரிபுரமெரித்து மன்மதனை நீறுபடுத்தி யமனையுதைத்து ஸம்ஹாரத் தொழில் நிகழ்த்தும் பேராற்றலையுடைய உக்ரமுர்த்தியாவான் ருத்ரன், அக்கடவுள் வீற்றிருக்கின்ற கைலாஸகிரியை ஒருகால் இராவணன் வேரோடு பெயர்த்தனன், அங்ஙனம் மிக வலியவனாய் திக்விஜயஞ்செய்து திக்கஜங்களையும் வென்ற இராவணனைக் கார்த்தவீர்யார்ஜு நன் கட்டிச்சிறையிலிட்டனன். அவனை பரசுராமபிரான் தோள் துணித்துத் தொலைத்திட்டனன் என்க. எம்பெருமானுடைய தசாவதாரங்களுள் ஆறாம் அவதாரமாயிருப்பன் இப்பரசுராமன்.

இப்படிப்பட்ட பரசுராமன் ஏழாம் அவதாரமான தசரதராமன் மீது கோபித்தலும், இவ்விரவரும் ஒருவரோடொருவர் போர்செய்தலும், ஒருவர் மற்றொருவரை வெல்லுதலும் பொருந்துமோ வெனின், நுஷ்டர்களாய்க் கொழுந்துத் திரிந்த அரசர்களைக் கொல்லும்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த விஷ்ணுசக்தி விசேஷம் அக்காரியம் முடிந்தபின்பு அவ்விஷ்ணுவின் அம்சாவதாரமான தசரதராமனாற் கவர்ந்து கொள்ளப்பட்ட தாகையால் பொருந்துமென்க. இதனால், ஆவேசவதாரத்திற்காட்டிலும் அம்சாவதாரத்திற்கு உள்ள ஏற்றம் விளங்கும்.

ஸ்ரீமந்நாராயணனது விபவாவதாரங்கள் அளவற்றவை! அவை முக்கியம் அமுக்கியம் என இருவகைப்படும். இவற்றில் முந்தியது சிறந்தது. பிந்தியது அதனிலும் தாழ்ந்தது. முக்கியமாவது ஸாக்ஷாதவதாரம். அமுக்கியமாவது ஆவேசாவதாரம். ஆவேசந்தான் ஸ்வரூபாவேச மென்றும் சக்தியாவேச மென்றும் இருவகையதாம். ஸ்வரூபாவேசமாவது – சேதநருடைய சரீரங்களில் எம்பெருமான் தன்னுடைய ரூபத்துடன் ஆவேசித்து நிற்பது. பரசுராமன், பலராமன் போல்வார் இத்திறத்தார்கள். சக்தியாவேசமாவது – சேதநர்பக்கல் காரியகாலத்திலு எம்பெருமான் சக்திமாத்திரத்தால் தோன்றி விளங்குதல். கார்த்தவீர்யார்ஜுநன், அர்ஜுநன், வ்யாஸர் போல்வார் இத்திறந்தார். இவற்றில் சக்தியாவேசத்தைவிட ஸ்வரூபாவேசம் பிரபலம் இவற்றின் உண்மை நிலையை விஷ்வக்ஸேநஸம்ஹிதை முதலிய ஸ்ரீ பாஞ்சராத்ரஸம் ஹிதைகளிலும் தத்வத்ரயத்திலும் அதன் வியாக்கியானத்திலும் பரக்கக் காணாலாம். பரசுராமாவதாரம் ஸ்வரூபாவேசாவதாரம்.

முழுக்ஷுக்களுக்குப் பரசுராமாவதாரம் உபாஸகைக்கு உரியதன்றாகிலும் விரோதிகளைக் களைந்தொழிந்த உபகாரத்துக்குத் தோற்றுத் துதிப்பதுமாத்திரமுண்டு. 1. “மன்னடங்க மழுவலங்கைக் கொண்ட இராமநம்பி“ என்றும் 2. “வென்றிமரமழுவேந்தி முன்மண்மிசை மன்னரை மூவெழுகால் கொண்ற தேவா!“ என்றும் ஆழ்வார்களருளிச்செய்வதும் விரோதிநிரஸநஸ்வபாவத்துக்குத் தோற்றுத் துதித்தமாத்திரமே யென்க.

மூன்றாமடியின் முதலில் “பேரானை“ என்றது ஜாத்யேகவசநம் என்று கொண்டால் ‘க்ஷத்ரியர்கள்‘ என்று பொருள்படும். அன்றி, கார்த்தவீர்யார் ஜுநனொருவனையே சொல்லிற்றாகவுமாம்.

“பிறரில்லைநுனக்கு“ என்றது – பக்தர்கள் சொல்லும் சொல்லின் அதுகாரமென்க.

நீரார்பேரான் – திருநீர்மலை யெம்பெருமானுக்கு நீர்வண்ணன் என்று திருநாமம். “நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்“ என்ற திருநெடுந்தாண்டகம் காண்க.

 

English Translation

After swallowing the Earth, mountains, oceans, the orbs and all else, the Lord stood saying, “I am hungry”, He is the ascetic king who destroyed the twenty one crowned kings and became the one without a second. He is the ocean-hued Lord, the first-cause Lord. Tirunirmalai is His great hill abode.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top