(1498)
அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு,
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
பதவுரை
|
அம்பரமும் |
– |
ஆகாசத்தையும் |
|
பெரு நிலனும் |
– |
பரந்த பூமியையும் |
|
திசைகள் எட்டும் |
– |
எட்டுத்திக்குகளையும் |
|
அலை கடலும் |
– |
அலையெறிகின்ற கடல்களையும் |
|
குலம் வரையும் |
– |
குலபர்வதங்களையும் |
|
உண்ட |
– |
உட்கொண்ட |
|
கண்டன் |
– |
திருக்கழுத்தையுடையவனும் |
|
கொம்பு அமரும் |
– |
கிளைகள் பொருந்திய |
|
வட மரத்தின் |
– |
ஆலமரத்தினுடைய |
|
இலை மேல் |
– |
தளிரின் மீது |
|
பள்ளி கூடினான் |
– |
சயனித்துக்கொண்டவனுமான ஸர்வேச்வரனுடைய |
|
திரு அடியே |
– |
திருவடிகளையே |
|
கூட கிற்பீர் |
– |
அடையவேணுமென்றிருப்பவர்களே!, |
|
மணி வண்டு |
– |
அழகிய வண்டுகள் |
|
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு |
– |
அப்போதலர்கின்ற செண்பகப் பூவின் பரிமளத்தைப் புஜித்து (பின்பு) |
|
வகுளத்தின் மலர் மேல் வைகு |
– |
மகிழம்பூவின் மீது தங்கி யிருக்கப்பெற்றதும். |
|
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் |
– |
‘செம்பியன் கோச்செய்கணான்’ என்னும் சோழராஜன் பணிசெய்யப்பெற்ற கோயிலுமான |
|
திருநறையூர் மணிமாடம் |
– |
திரநறையூரிலுள்ள திவ்ய ஸந்நிதியை |
|
சேர்மின்கள் |
– |
போய்ச்சேங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (செம்பியன் கோச செங்கணான் சேர்ந்த கோயில்) திருவல்லிக்கேணியின் தொண்டையர் கோன், போலவும், பரமேச்சுர விண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும், நந்திபுரவிண்ணகரத்தில் நந்திவருமன் போலவும் இத்திருப்பதியில் செம்பியன்கோச் செங்கணான் னென்னுமோரரசன் தொண்டுபூண்டு உய்ந்து போனானென்றுணர்க. இத்திருப்பதிகத்தின் வியாக்யான அவதாரிகையில் பெரியவாச்சான் பிள்ளை – “துர்மானியுமாய் ஸ்நேஹமின்றிக்கே யிருக்கிற ராஜாதான் ஸ்ரீமார்க்கண்டேய பகவானைப்போலே தேவதாந்தர பஜநம்பண்ணி அங்குத் தன்னுடைய அபிமதம் தலைக்கட்டிக்கொள்ளப் பெறாமையாலே இங்கே பக்நாபிமாநனாய்த் திருவடிகளிலே விழுந்து ஆச்ரயித்து ஐஹிகாமுஷ்மிகங்களிரண்டையும் பெற்றப்போனான்” என்றும், “நம்பி ஒரு வாள்கொடுத்தருள அத்தைக்கொண்டு பூமியையடையத் தன காலின்கீழே இட்டுக்கொண்டானென்றொரு பிரஸித்தியுண்டாய்த்து” என்று மருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் அறியத்தக்கன.
திருநறையூர் மணிமாடம் = இவ்வாழ்வார்தாம் பெரியதிருமடலில் அருளிச்செய்யும் போது “இரும்பொழில்சூழ் மன்னுமறையோர் திருறையூர் மாமலைபோல் பொன்னியலுமாடம்” என்றும் “தென்னறையூர் மன்னுமணிமாடக் கோயில் மணாளனை” என்றும் அருளிச்செய்திருத்தலால் திருநறையூரிலுள்ள நம்பிஸந்நிதிக்கு ‘மணிமாடக்கோயில்’ எனத் திருநாமம் வழங்கிவந்ததென்பது தெரிகின்றது. (திருநாங்கூர் மணிமாடக்கோயில் வேறு.)
அம்பரம், வடம், வகுளம் – வடசொற்கள்.
English Translation
O Devotees, if you wish to see the Lord who swallowed the sky, Earth, quarters, ocean, mountains and all else, then slept as a child on a floating fig leaf, go now to Naraiyur Manimadakkoyil, where bumble bees take the fragrance of Senbakam flowers then go and sit on Vakula flowers, and where sembianko-chenganan comes to offer worship.
