(1480)

(1480)

கொங்கார் குழலார் கூடி யிருந்து, சிரித்து, எம்மை

எங்கோலம் ஐயா என்னினிக் காண்பதென் னாதமுன்

செங்கோல் வலவன் தான்பணிந் தேத்தித் திகழுமூர்,

நங்கோன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.

 

பதவுரை

கொங்கு ஆர் குழலார்

(தலைப் பூக்களில் நின்றும் பெருகின) தேன்நிறைந்த கூந்தலையுடைய மாதர்

கூடி இருந்து

திரளாக இருந்து

சிரித்து

பரிஹாஸம்பண்ணி

ஐயா

‘கிழவனாரே!

இனி

இப்படி நீர் கிழத்தன மடைந்த பின்பு

எம்மை

எங்களையும்

எம் கோலம்

எங்களுடைய அலங்காரத்தையும்

என் காண்பது

எதுக்காகப் பார்ப்பது?’

என்னாத முன்

என்று திரஸ்தரிப்பதற்கு முன்னே,

செங்கோல் வலவன் தான்

அரசாட்சி புரிந்த சோழராஜன்

பணிந்து

ஆக்ரமித்து

ஏத்தி

துதித்து

திகழும் ஊர்

விளங்கப் பெற்ற திவ்யதேசமாய்

நம் கோன்

எம்பெருமானுடையதான

நறையூர்

திருநறையூரை

நாம் தொழுதும் நெஞ்சமே! எழு-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒன்றுக்கும் உதவாதபடி உடல் மெலிந்து தளர்ந்தொழிந்தாலும் நப்பாசையாலே அங்குச் சென்று அவர்களது இயற்கையழகிலே கண்வைப்பதும் ஆபரணதிகளாலுண்டான செயற்கையழகிலே கண்வைப்பதுமாயிருப்பர்களே; அப்போது அவர்கள் *பீளைசோரக் கண்ணிடுங்கிப்பித்தெழ மூத்திருமத்தாள்கள்நோவத் தம்மில் முட்டித் தள்ளிநடக்கு மிப்பருவத்திலே நீர் எங்களுடம்பையும் எங்களழகையும் நோக்குவது ஏதுக்கு?’ என்று ஏசுவர்கள்; அப்படிப்பட்ட நிலைமை நேருவதற்கு முன்னமே திருநறையூரைத் தொழுவது நன்று.

செங்கோல் வலவன் தான்பணிந்தேத்தித் திகழுமூர் = திருவல்லிக்கேணியில் தொண்டையர்கோன் போலவும், பரமேச்சுரு விண்ணகரத்தில் பல்லவன்  மல்லையர்கோன் போலவும், அட்டபுயகரத்தில் வயிரமேகன் போலவும், நந்திபுரா வி்ண்ணகரத்தில் நந்திவருமன் போலவும் இத்திருப்பதியில் செங்கணான் கோச்சோழன் அபிமாநியாயிருப்பனென்ப.  மேல் “அம்பரமும் பெருநிலனும்” என்ற திருமொழியில் ஒவ்வொரு பாசுரத்திலும் இது அருளிச்செய்யப்படுவது காண்க.  நாட்டை ஆண்டுகொண்டு அஹங்காரியாய்ப் போதுபோக்க வேண்டியவனும் இத்தலத்திற் பணிந்து உய்வு பெற்றமை விளங்கச் செங்கோல் வலவன்தான் என்றார்.

 

English Translation

O Heart! Before fragrant tressed dames gather and laughingly ask, “Sire, now why do you look at us and our dresses?’ let us go to the Lord worshipped by sceptred kings who offer service and praise, -he resides in Naraiyur, -and offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top