(9)
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
பதவுரை
| உடுத்து |
– |
தேவரீர் அரையில் சாத்திக்கொண்டு |
| களைந்த |
– |
கழித்துவிட்ட |
| நின் பீதகவாடை |
– |
தேவரீருடைய பீதாம்பரத்தை |
| உடுத்து |
– |
உடுத்துக்கொண்டும் |
| கலத்தது |
– |
தேவர் அமுதுசெய்த பாத்திரத்தில் மிகுந்திருப்பதை |
| உண்டு |
– |
புஜித்தும் |
| சூடி களைந்தன |
– |
தேவர் சாத்திக்கொண்டு களைந்தவைகளான |
| தொடுத்த |
– |
தொடுக்கப்பட்டுள்ள |
| துழாய் மலர் |
– |
திருத்துழாய் மலர் -மாலைகளை |
| சூடும் |
– |
சூட்டிக் கொள்ளுகிறவர்களான |
| இத்தொண்டர்களோம் |
– |
இப்படிப்பட்ட தாஸர்களான நாங்கள் |
| விடுத்த திசை கருமம் திருத்தி |
– |
தேவரீர் ஏவியனுப்பிய திக்கிலே ஆகவேண்டிய காரியங்களை ஒழுங்காகச் செய்து, |
| படுத்த |
– |
கீழே பரப்பிய |
| பை நாகம் அணை |
– |
படத்தையுடைய பாம்பாகிற படுக்கையில் |
| பள்ளி கொண்டானுக்கு |
– |
சயனித்திருக்கிற தேவரீருக்கு |
| திருஓணம் திருவிழவில் |
– |
ச்ரவணத் திருநாளிலே |
| பல்லாண்டு கூறுதும் |
– |
மங்களாசாஸநம் செய்வோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – ‘‘வாழாட்பட்டு’’ என்னும் பாசுரத்தில் அழைக்கப்பட்டு ‘‘எந்தை தந்தை தந்தை’’ என்னும் பாசுரத்தால் தங்கள் வ்ருத்தியைச் சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்த அநந்யப்ரயோஜநர்கள் தாம் எம்பெருமானை நோக்கிப் பல்லாண்டு பாடும்படியை அருளிச்செய்வது இப்பாட்டு. ‘‘நின் பீதகவாடை’’ என்று முன்னிலையாகச் சொல்லியிருப்பதால் இந்தப் பாசுரம் எம்பெருமானையே நோக்கி அவர்கள் சொல்லுவதாக நன்கு விளங்கும். கீழே ஆழ்வாரால் அழைக்கப்பட்ட மூவகை அதிகாரிகளும் வரிசையாக ‘எந்தை தந்தை’ ‘தீயிற்பொலிகின்ற’ ‘நெய்யெடை நல்லது’ என்னும் பாசுரங்கள் சொன்னது ஆழ்வாரை நோக்கிச் சொன்னதாம். இனி, ‘உடுத்துக்களைந்த’ ‘எந்நாளெம்பெருமாள்’ ‘ அல்வழக்கொன்று மில்லா’ என்கிற மூன்று பாசுரங்களும் – அவர்கள் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக நோக்கிச் சொல்வதாம். மேலிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய விளி வ்யக்தமாகவுள்ளது; இப்பாசுரத்தில் அப்படி வ்யக்தமாக இல்லாவிடிலும் ‘‘மின் பீதகவாடை’’ என்கிற சொல்லாற்றலால் வ்யந்தமாகிறது.
எம்பெருமானே! நாங்கள் எங்களுக்கென்று அன்னம் வஸ்திரம் புஷ்பம் முதலானவற்றை விலைக்கு வாங்கி உபயோகிப்பதில்லை. தேவரீர் அனுபவித்துக் கழித்தவற்றை மஹாப்ரஸாதமாகக் கொண்டு அவற்றையே உடுப்பதும் உண்பதும் சூடுவதும், செய்வோம் நாங்கள்; அவ்வளவோடும் நில்லாமல், தேவரீருக்கு எந்த திக்கிலே எந்த காரியம் ஆக வேண்டியிருந்தாலும் அவற்றை ஒழுங்குபடச்செய்து முடிப்பதும் செய்வோம். அவ்வளவிலும் த்ருப்தி பெறாமல், ஒரு வெள்ளிமலையில் காளமேகம் சாய்ந்து கிடப்பதுபோல் ஆதிசேஷ சயனத்திலே தேவரீர் பள்ளிகொண்டிருக்கிற கிடையழகுக்குப் பல்லாண்டு பாடுவதும் செய்வோமென்கிறார்கள்.
பீதகவாடை – ‘பீதம்’ என்னும் வடசொல் சுப்ரத்யயம் பெற்றுப்பீதகமென்றாயிற்று. பொன்வர்ணமான ஆடை என்கை. எம்பெருமானுடைய திவ்ய பீதாம்பரத்தைப் பிறர் உடுத்துக் கொள்ளலாமோ? அஃது அப்பெருமானுக்கே அஸாதாரணமன்றோ? என்னில்; அவனுக்கு அஸாதாரணமான பீதாம்பரத்தை இங்கே விவக்ஷிக்கவில்லை. சில ஆஸனங்களில் ஸாதாரணத் திருப்பரிவட்டங்களும் சாத்திக் கொள்வதுண்டாகையால் அவற்றைச் சொல்லுகிறது. அவை பீதகவாடையாகுமோ வென்னில்; எம்பெருமான் திருவரையில் சாத்திக்கொள்ளும் வஸ்த்ரங்களெல்லாம் திவ்யபீதாம்பரத்தின் அம்சமேயாமென்பது சாஸ்த்ரம்.
பள்ளிகொண்டானுக்கு – பள்ளி கொண்டவுனக்கு என்கை. முன்னிலையில் படர்க்கைவந்த இடவழுமைதி ‘‘ஒருமையிற் பன்மையும் பன்மையிலொருமையும், ஓரிடம் பிறரிடம் தழுவலுமுளவே’’ என்பது நன்னூல்.
English Translation
O Lord reclining on the hooded snake, we wear the yellow vestments you wear and discard. We eat the food offered to you. We wear the woven Tulasi flowers you wear and discard, and rejoice. Keeping watch over the ways of the world, you appeared in the asterism of Saravanam. To you we sing Pallandu.
