(8)

(8)

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல

பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

 

பதவுரை

நெய் எடை

நெய்யோடு ஸமமான நிறையை யுடையதாய்
நல்லது

போக்யமாய்
ஓர்

விலக்ஷணமான
சோறும்

ப்ரஸாதத்தையும்
நியதமும் அத்தாணி சேவகமும்

எப்போதும் பிரியாமல் கூடவேயிருந்து செய்கிற ஸேவக வ்ருத்தியையும்
கை அடைக்காயும்

திருக்கையால் ப்ரஸாதிக்கும் தாம்பூலத்தையும்
கழுத்துக்கு பூணோடு

கழுத்தில் தரித்துக் கொள்ளவேண்டிய ஆபரணத்தையும்
காதுக்கு குண்டலமும்

காதில் இட்டுக் கொள்ளவேண்டிய குண்டலத்தையும்
மெய் இட

உடம்பில் பூசிக்கொள்ளும்படி
நல்லது ஓர் சாந்தமும்

சிறந்த சந்தனத்தையும்
தந்து

(ரஜஸ்தமோ குணங்களால் ஐச்வரியத்தை விரும்பின என்னுடைய விருப்பத்தின்படியே) கொடுத்து
என்னை

இப்படி ஸம்ஸாரியாயக் கிடந்த என்னை
வெள் உயிர் ஆக்கவல்ல

சுத்த ஸரத்விகனாகச் செய்தருளினவனாய்
பை உடை நாகம் பகை கொடியானுக்கு

படத்தையுடைய பாம்புக்கு விரோதியான கருடனைக் கொடியாக வுடையனான எம்பெருமானுக்கு
பல்லாண்டு கூறுவன்

மங்களாசாஸநம் பண்ணுவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – “அண்டக்குலத்துக்திபதியாகி’’ என்னும் பாசுரத்தில் ஐச்வர்யார்த்திகளை அழைத்தாரே; அவர்கள்தாம் எம்பெருமானிடத்தில் சில ஐச்வர்யங்களைப் பெற்றுக்கொண்டு திருந்தி மங்களாசாஸநத்துக்கு ஸித்தராக வந்தபடியைச் சொல்லிக் கொள்ளுகிறார்களாக அருளிச் செய்வது இந்தப் பாசுரம்.  கீழ்ப்பாசுரங்களிற் போல் இதில் பன்மையின்றியே ‘‘பல்லாண்டு கூறுவன்’’ என்று ஒருமையாகப் பிரயோகமிருப்பதற்குக் காரணம் கேண்மின்; –  உலகத்தில் அநந்ய ப்ரயோஜநர்களுடைய கூட்டமும் கைவல்யார்த்திகளுடைய கூட்டமும் மிகவும் ஸ்வல்பமா யிருக்குமாகையாலே அந்தக் கூட்டங்களிலுள்ள நாலைந்து பேர்கள் பேசினதாகக் கொண்டு அவர்களது பாசுரங்களில் ‘‘பல்லாண்டு பாடுதுமே’’ என்றும் ‘‘பல்லாண்டு கூறுதுமே’’என்றும் பஹுவசந ப்ரயோகம் பண்ணப்பட்டது.  ஐச்வர்யார்த்திகளான இவர்களுடைய கூட்டம் அப்படி ஸவல்பமாயிராமல் அளவற்றிக்குமாகையால், ஒரு பெரிய கூட்டத்துக்கெல்லாம் ஒருவன் பிரதாநனாய் நின்று பேசுவது வழக்கமாகையால் அப்படியே இருக்கும் ஒருவன் பேசுவதாகவைக்கப்பட்டது.  மேல் ‘‘அல்வழக்கொன்றுமில்லா’’ என்கிற பாட்டிலுள்ள ஏகவசநத்துக்கும் இதுவே ஸமாதாநம்.

உலகத்தார்க்கு வேண்டிய பதார்த்தங்கள் மூன்றுவிதம் –  தாரகம், போஷகம், போக்யம் என அன்னம் தாரகம், நெய் பால் தயிர் முதலானவை போஷகம், சந்தனம் புஷ்பம் தாம்பூலம் முதலியவை போக்யம்.  ஆக இந்தப் பதார்த்தங்கள் ஒருவனுக்குப் போதுமானவை கிடைத்தால் அவ்வளவில் த்ருப்திபெற ப்ராப்தம் ஊர்ப்பட்ட அண்டாதிபத்யமெல்லாம் வேணுமென்று விரும்புவது பகவத்மாகும்.  ஆகையால் ஸ்வரூபஜ்ஞாநமில்லாமல் அண்டாதிபத்யம் அளிக்கவேணுமென்று நாங்கள் எம்பெருமானைப் பிரார்த்தித்தாலும் அவன் பரமக்ருபாளுவாய் எங்களை உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி எங்களுக்கு உசிதமாய் வேண்டியவளவு தாரக –  போஷக –  போக்ய வஸ்துக்களைக்கொடுத்து இனிமேலாவது எங்களுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி குளிரக்கடாஷித்து ‘‘ஐச்வரியம் த்யாஜ்யம், பகவத்கைங்கர்யமே புருஷார்த்தம்’’ என்னும் அத்யவஸாயத்தைப் பிறப்பித்து எங்களை சுத்தஸ்வரூபராக ஆக்கினான்.  அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுவோம் நாங்கள் –  என்று ஐச்வர்யத்திகள் சொல்லுவதாக இந்தப் பாசுரம் உள்ளது.

‘‘நெய் எடை’’ என்றும் ‘‘நெய் இடை’’ என்றும் பாடபேதமுண்டு.  முந்தினபாடத்தில், நெய்பாதி சோறுபதியாய் இரண்டும் அளவொத்திருக்குமென்கை.  ஒருவீசைச்சோற்றுக்கு ஒருவீசை நெய் சேர்ப்பதென்றால், இதனில் விஞ்சிய நல்ல சோறு இல்லையன்றோ.  ‘‘நெய்யிடை’’ என்ற பாடத்தில், நெய்யின் நடுவே உள்ள சோறு என்று பொருளாய், நெய்யின் அளவு அதிகமாயும் ப்ரஸாதத்தினளவு அல்பமாயுமிருக்கு மென்கை.  நல்லது ஓர் சோறு இட்டவன் ‘நாம் இட்டோம்’ என்று அஹங்காரங் கொண்டாலும், உண்டவன், ‘இதற்கு நாம் என்ன கைம்மாறு செய்வோம்’ என்றிருந்தாலும் நல்ல சோறாகமாட்டாது; பெற்ற தாய் இட, புத்திரன் உண்ணுஞ் சோறுபோலே அன்புடன் இடப்பட்டு ருசியில் குறையில்லாத சோறு என்றபடி.

அத்தாணிச் சேவகமாவது –  ஆஸ்தாநஸேவகம்; எம்பெருமானிருக்கும் இடத்தில் கூடவேயிருந்துகொண்டு பிரியாமல் நின்று செய்கிற கைங்கரியம் ஐச்வர்யார்த்தியானவன் சொல்லுகிற இந்தப் பாசுரத்தில் ‘அத்தாணிச் சேவகமும் தந்து’’ என்று எங்ஙனே சொல்லலாம்? அநந்யப்ரயோஜநனுக்கன்றோ அத்தாணிச் சேவகமுள்ளது; சோறு அடைக்காய் பூண் குண்டலம் ஆகிய இவற்றைத் தந்து என்பது சேருமேயொழிய அத்தாணிச் சேவகமும் தந்ததாகச் சொல்லுகிறது சேராதேயென்னில்; ஐச்வர்யார்த்தியாயிருந்தாலும் பகவத் க்ருபையாலே திருந்தி அநந்ய்ப்ரயோஜநனாய் வந்தமை தோற்றும்படியாகச் சொல்லுகிற பாசுரமாகையாலே சேருமென்க.  நான் அபேக்ஷித்த ஜீவநத்தைமாத்திரம் கொடுத்துவிடாமல் உஜ்ஜீவநத்தையு முண்டாக்கி என்னைப் பரிசுத்தாத்மாவாகச் செய்தானே! என்று  ஸந்தோஷித்துச் சொல்லுகிற பேச்சு.

வெள்ளுயிர் – சுத்தமான ஆத்மா.  ஸத்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்களுண்டு.  அவற்றுள் ஸத்வகுணத்தை வெண்ணிறம் உள்ளதாகவும் ரஜோ குணத்தைச் சிவப்பு நிறமுள்ளதாகவும் தமோ குணத்தைக் கறுப்பு நிறமுள்ளதாகவும் கூறுவது கவிஸமயமாதலால் இங்கே ஸாத்விகளை வெள்ளுயிரென்றார்.

பையுடைநாகப் பகைக்கொடியானுக்கு என்கிறவிடத்தில், ‘‘பையுடை நாகத்தானுக்கு’’ என்றும் ‘‘(நாகப்) பகைக்கொடியானுக்கு’’ என்றும் பிரித்துக் கொள்வது நன்று.  ‘‘அநந்தசாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறேனென்கை’’ என்று வியாக்கியானமருளிச்செய்த பெரிய வாச்சான்பிள்ளையின் திருவுள்ளம் இதுவேயாம்.  நாகத்துக்கு ‘பையுடை’ என்று விசேஷணமிட்டபடியால் அது வீணாகாமைக்காக இப்படி அர்த்தம் செய்யவேண்டிய தாயிற்றென்ப.  ஸந்தோஷத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வான்மேலே சயனிப்பவனாயும், அந்த நாகஜாதிக்கு சத்ருவான கருடனை த்வஜமாகவுடையனாயும் இருக்கிற எம்பெருமானுக்கு என்றபடி.

நித்யம், குண்டலம், நாகம் – வடசொற்கள்.

 

English Translation

The Lord gives me good rice food with Ghee, and privileges of attendance, Betel leaf and Areca nut, ornaments for the neck and ears and fragrant Sandal paste to smear.  He purges my soul.  He has the Garuda bird,-foe of the hooded snakes, – on his banner; for him I sing Pallandu.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top