(2322)
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, – மின்னை
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்
குடையாக ஆகாத்த கோ.
(2323)
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.
(2324)
சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
புனமேய பூமி யதனை, – தனமாகப் பேரகலத்
துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
ஓரகலத் துள்ள துலகு.
(2325)
உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
பூரித்தென் நெஞ்சே புரி.
(2326)
புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,
திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு
முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை.
(2327)
மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரன்.
(2328)
நின்ற பெருமானே நீரேற்று, உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா, – அன்று
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ.
(2329)
நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் – நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று?
(2330)
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் – முற்றல்
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,
மூரிச்சுரியேறு சங்கினாய். சூழ்ந்து.
(2331)
சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
தாழ்ந்த அருவித் தடவரைவாய், – ஆழ்ந்த
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
அணிநீல வண்ணத் தவன்.
