(3484)
குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும்பல,
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளை யேயலற்றி,
இரவும் நன்பக லும்த விர்கிலம் என்ன குறைவெனக்கே?
(3485)
கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த தும்,கெண்டை யொண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும்பல,
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து,
நேயத் தோடு கழிந்த போதெனக் கெவ்வுல கம்நிகரே?
(3486)
நிகரில்மல்ல ரைச்செற்ற தும்நிரை மேய்த்ததும் நீணெடுங்கைச்,
சிகரமாகளி றட்டதும் இவை போல்வனவும் பிறவும்,
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி, என்றும்
நுகர் வைகல் வைகப்பெற் றேன் எனக்கு என்இனி நோவதுவே.
(3487)
நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்,
சாவப் பாலுண் டதும்ஊர் சகடம் இறச்சா டியதும்,
தேவக் கோல பிரான்தன் செய்கை நினைந்து மனம்குழைந்து,
மேவக் காலங்கள் கூடி னேன்எ னக்கு என்இனி வேண்டுவதே?
(3488)
வேண்டி தேவ ரிரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்,
பூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர் ஆய்க்குலம் புக்கதும்,
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்சவஞ் சம்செய்ததும்,
ஈண்டு நான்அலற் றப்பெற் றென்எ னக்கு என்ன இகலுளதே?
(3489)
இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில் ஏறுகள் செற்றதுவும்,
உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும் உட்பட மற்றும்பல,
அகல்கொள் வையம் அளந்த மாயனென் அப்பன்றன் மாயங்களே,
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்ப ரிப்பே?
(3490)
மனப்பரி போட ழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து,
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன சீற்றத்தினை முடிக்கும்,
புனத்து ழாய்முடி மாலை மார்பனென் அப்பன்தன் மாயங்களே,
நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி யார்நிகர் நீணிலத்தே?
(3491)
நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும் போர்கள் செய்து,
வாண னாயிரம் தோள்து ணித்ததும் உட்பட மற்றும்பல,
மாணி யாய்நிலம் கொண்ட மாயனென் அப்பன்றன் மாயங்களே,
காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென கலக்க முண்டே?
(3492)
கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே ழும்கழி யக்கடாய்,
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல,
வலக்கை யாழி யிடக்கை சங்கம் இவையுடை மால்வண்ணனை,
மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம் மண்ணின் மிசையே?
(3493)
மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத மாபெ ரும்போர்,
பண்ணி, மாயங்கள் செய்து, சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப்போய்,
விண்மி சைத்தன தாம மேபுக மேவிய சோதிதன்தாள்,
நண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக் கார்பிறர் நாயகரே?
(3494)
நாய கன்முழு வேழுல குக்குமாய் முழுவே ழுலகும்,தன்
வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய் அவையல் லனுமாம்,
கேசவன் அடியி ணைமிசைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தூய வாயிரத் திப்பத் தால் பத்தராவர் துவளின்றியே.
