ஒன்பதாந் திருமொழி
(1932)
புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த பூதனை மாள, இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்க மதனை நினைந்தோ,
கள்ளவிழ் கோதை காதலு மெங்கள் காரிகை மாதர் கருத்தும்,
பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப் பேசுவ தெந்தை பிரானே.
(1933)
மன்றில் மலிந்து கூத்துவந் தாடி மால்விடை யேழும டர்த்து, ஆயர்
அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மைகொ லோவறி யேன் நான்,
நின்ற பிரானே நீள்கடல் வண்ணா. நீயிவள் தன்னை நின் கோயில்,
முன்றி லெழுந்த முருங்கையில் தேனா முன்கை வளைகவர்ந் தாயே.
(1934)
ஆர்மலி யாழி சங்கொடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்துக்,
கார்முகில் வண்ணா. கன்சனை முன்னம் கடந்தநின் கடுந்திறல் தானோ,
நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை,
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவளெனக் கருதுகின் றாயே.
(1935)
மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே.
(1936)
செருவழி யாத மன்னர்கள் மாளத் தேர்வலங் கொண்டவர் செல்லும்,
அருவழி வானம் அதர்படக் கண்ட ஆண்மைகொ லோவறி யேன்நான்,
திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ,
பெருவழி நாவற் கனியினு மெளியள் இவளெனப் பேசுகின் றாயே.
(1937)
அரக்கிய ராகம் புல்லென வில்லால் அணிமதி ளிலங்கையர் கோனை,
செருக்கழித் தமரர் பணியமுன் னின்ற சேவக மோசெய்த தின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம் கொண்டுமுன் னேநின்று போகாய்,
எருக்கிலைக் காக எறிமழு வோச்சல் என்செய்வ தெந்தை பிரானே.
(1938)
ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச அலைகடல் உலகம்முன் ஆண்ட,
பாழியந் தோளோ ராயிரம் வீழப் படைமழுப் பற்றிய வலியோ?
மாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,
கோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா.
(1939)
பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேற வள்ளுகி ரால்பிளந்து, அன்று
பெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த பெருமைகொ லோசெய்த தின்று,
பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்,
கருங்கடல் வண்ணா கவுள்கொண்ட நீராம் இவளெனக் கருதுகின் றாயே.
(1940)
நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் நின்றநின் நீர்மையை நினைந்தோ?
சீர்க்கெழு கோதை யென்னல திலளென் றன்னதோர் தேற்றன்மை தானோ?
பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய பாவையைப் பாவம்செய் தேனுக்கு,
ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட மாகநின் மனத்துவைத் தாயே.
(1941)
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மைநின் றெம்பெரு மானை,
வாட்டிறல் தானை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப் பழமொழி யால்பணிந் துரைத்த,
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே வெண்டுறை.
