(2774)-(2777)

………     ……………     ……………   வல்லவாழ்

 

பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,

தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,

என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,

மன்னும் கடன்மல்லை மாயவனை, – வானவர்தம்         (2774)

 

சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,

தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,

அன்னத்தை மீனை அரியை அருமறையை,

முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, – கோவலூர்          (2775)

 

மன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப்,

பின்னும் முலையுண்ட பிள்ளையை, – அள்ளல்வாய்       (2776)

 

அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,

தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை,              (2777)

 

மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை,

 

பதவுரை

வல்லவாழ்

திருவல்லவாழிலே எழுந்தருளியிருக்கிற

பின்னை மணாளனை

நப்பின்னை நாயகனாய்

பேரில் பிறப்பு இலியை

திருப்பேர் நகரிலெழுந்தருளியிருக்கிற நித்யஹித்தனாய்

தொல் நீர் கடல் கிடந்த

என்று மழியாத நீரையுடைய கடலிலே பள்ளிகொள்பவனாய்

தோளா மணி சுடரை

துளைவிடாத ரத்னம்போலே ஜ்வலிப்பவனாய்

என் மனத்து மாலை

என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்

இடவெந்தை ஈசனை

திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய்

கடல் மல்லை மன்னும் மாயவனை

திருக்கடலமல்லையிலே நித்யவாஸம் செய்யும் ஆச்சரியானாய்

வானவர் தம் சென்னி மணி சுடரை

நித்ய ஸூரிகளுடைய சிரோபூஷணமாக விளங்குமவனாய்

தண்கால் திறல் வலியை

திருத்தண்காலில் எழுந்தருளியிருக்கிற மஹா பலசாலியாய்

தன்னை பிறர் அறியா த்த்துவத்தை

(தனது திருவருளுக்கு விஷயமாகாத) பிறர் அறிந்துகொள்ள முடியாத ஸ்வரூபத்தை யுடையனாய்

முத்தினை

முத்துப்போன்றவனாய்

அன்னத்தை

ஹம்ஸாவதாரஞ் செய்தவனாய்

மீனை

மத்ஸ்யாவதாரஞ் செய்தவனாய்

அரியை

நரஸிம்ஹாவதாரஞ் செய்தவனாய் (அல்லது) ஹயக்ரீ வாவதாரஞ் செய்தவனாய்

அருமறையை

ஸகல விதயாஸ்வருபியாய்

முன இ உலகு உண்ட முர்த்தியை

முன்னொருகால் இவ்வுலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸ்வாமியாய்

கோவலூர் இடைகழி மன்னும் எம்மாயவனை

திருக்கோவலூரடை கழியில் நித்யவாஸம் பண்ணுகிற எங்கள் திருமாலாய்

பேய் அலற முலை உண்ட பிள்ளையை

பூதனையானவள் கதறும்படியாக அவளது முலையை உண்ட பிள்ளையாய்

அன்னம்

ஹம்ஸங்களானவை

அள்ளல் வாய்

சேற்று நிலங்களில்

இரை ரே அழுந்தூர்

இரைதேடும்படியான திருவழுந்துரில்

எழும் சுடரை

விளங்கும் சோதியாய்

தென் தில்லை சித்தரை கூடத்து என் செலவனை

தென் திசையிலுள்ள தில்லைத் திருச்சித்திர கூடத்தில் (எழுந்தளியிருக்கிற) எனது செல்வனாய்

மழை

மேகங்களானவ

மின்னி

பளபளவென்று மின்னிக் கொண்டு

தவழும்

சிகரங்களில் ஸஞ்சரிக்கப்பெற்ற

வேங்கடத்து

திருவேங்கட மலையில் (எழுந்தருளியிருக்கிற)

எம் பித்தகனை

நமக்கு ஆச்சர்யகரமான குண சேஷ்டிதங்களை யுடையனாய்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வல்லவாழ் – மலைகாட்டுத் திருப்பதிகள் பதின்முன்றனுள் ஒன்று, நம்மாழ்வாராலும் மங்களாசாஸனஞ் செய்யப்பெற்ற தலம். இதனைத் திருவல்லாய் என்று மலையாளர் வழங்குகின்றனர். வல்லவாழ்ப் பின்னை மணாளனை – நப்பின்னைப் பிராட்டியை மணம்புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவைஸாதித்தன்ன் போலும்.

பேர் –திருப்பேர்நகர், அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரில் பிறப்பிலியே – அடியவர்களுக்காகப் பலபல பிறவிகள் பிறந்திருந்தும் இதுவரை ஒரு பிறப்பும் பிறவாதவன்போலும் இனிமேல்தான் பிறந்து காரியஞ் செய்யப் பாரிப்பவன்போலும் ஸேவைஸாதிக்கிறபடி.

தோளாமணிச்சுடரை – தோளுதலாவது துளைத்தல், துளைத்தல் செய்யாத மணி யென்றது – அநுபவித்து பழகிப் போகாமல் புதிதான ரத்னம் என்றபடி. (துளைவிட்டிருந்தால் நூல்கோத்து அணிந்து கொள்ளுவர்கள்) “அநாலித்தம் ரத்நம்“ என்று வடநூலாரும் சொல்லுவர்கள்.

இடவெந்தை இத்தலத்திலெழுந்தருளியுள்ள வாஹப்பெருமாள் தமது தேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால் இத்தவத்திற்கு திருவிடந்தை யென்று திருநாமமாயிற்று.

தன்கால் இது ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு ஸமீபத்திலுள்ளது. திருத்தாங்கல் என்று ஸாமாந்யர் வ்யவஹிப்பர்கள். தன்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று பொருள், சீதவாதபுர மென்பர்.

திறல்வலி –எதிரிகளை அடக்கவல்ல பெருமிடுக்கன்.

தன்னைப் பிறரறியாத் த்த்துவத்தை – தனான தன்மையைத் தானே நிர்ஹேதுக்ருபையால் காட்டி ஆழ்வார் போல்வர்க்கு அறிவிக்கலாம்தனை யொழிய மற்றையார்க்கு ஸ்வப்ரயத்நத்தால் அறிய வொண்ணாதபடி. முத்தினை – முத்துப்பொலே தாபஹரனானவனை அன்னத்தை மீனை அரியை ஹரி என்னும் வடசொல்லுக்குப் பதினைந்து அர்த்தங்களுண்டு, *********** பிரகிருத்த்தில் குதிரை சிங்கம் என்கிற இரண்டு பொருள்கள் கொள்ளலாம். குதிரையென்று கொண்டால் ஹயக்ரீவாவதாரஞ் செய்தபடியைச் சொல்லிற்றாகிறது. சிங்கமென்று கொண்டால் நரசிங்காவதாரஞ் சொல்லிற்றாகிறது. ஹம்ஸாவதாரம் மத்ஸ்யாவதாரம் ஹயக்ரீவாவதாரம் என்ற மூன்றாவதாரங்களும் வித்யொப தேசத்திற்காகச் செய்தருளினவையாம்.

அருமறையை – ஸகல வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுவன் என்ற கருத்து.

கோவலூர் – மாயவனை – கோபாலன் எனப்படுகிற ஆயனார் எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசமானதுபற்றி இதற்குத் திருக்கோவலூரென்று திருநாமமாயிற்று. வடமொழியில் இது கோபாலபுரம் எனப்படும். “பாவருந்தமிழற் பேர்பெறு பனுவந் பாவலர் பாதிகாளிரவின், மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் இது.

இடைகழி – தேஹளீ என்று வடமொழியிற் கூறப்படும். “வாசற்கடை கழியாவுள்புகா காம்ரூபங்கோவல் இடைகழிய பற்றியினி நீயுந்திருமகளும் நின்றாயால்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரம் நோக்குக.

அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூர் – “சேறு கண்டு இறாய்க்கக்கடவ அன்னங்களும் சேற்றைக்கண்டு இறாயாதே மேல் விழுந்து ஸஞ்சரிக்கும்படியான போக்யதையுடைய திருவழுந்தூரிலே நித்யவாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோரூபனை“ என்ற அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீஸூக்தி காண்க.

அழுந்தூர் – தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சரிக்குந் தன்மையனான உபரி வஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பஷபாதமாகத் தீர்ப்புச் சொன்னமையால் ரிஷிகளால் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுத்தப்பெற்ற இடமானதுபற்றி இதற்கு அழுந்தூரென்று பெயர் வந்த்தென்பர், தேரழுந்தூர் எனவும் வழங்குவர் பிரகிருத்த்தில் மூலத்திலுள்ள தேர் என்னுஞ் சொல் ரதத்தைச் சொல்வதல்ல, தேர்தலாவது தேடுதல் புள்ளுப்பிள்ளைக் கிரைதேடு மழுந்தூரென்க.

தென் தில்லைச் சித்திரகூடம் – சித்தரகூடம் – விசித்திரமான சிகரங்களையுடையது, இது ஸ்ரீராமபிரான் வநவாஸஞ் செய்தபொழுது அவ்வெம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்த்தொருமலை, அதனைப்போலவே இத்தலமும் எம்பெருமான் திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருப்பதென்பதுபற்றி அப்பெயரை இதற்கும் இடப்பட்ட தென்பர். இங்கு உத்ஸவ மூர்த்தி இராமபிரான் வனவாஸஞ் செய்கையில் சித்திரகூட பர்வத்த்தில் வீற்றிருந்த வண்ணமாக எழுந்தருளியிருக்கின்றனர். மூலமூர்த்தி க்ஷீராப்தி நாதன் போலச் சயனத் திருக்கோலமாகிச் சிவபிரானது நடனத்தைப் பார்த்து ஆமோதித்துக் கொண்டிருக்கின்றனர். இது தில்லை மரங்களடர்ந்த காடாயிருந்தனால் தில்லை திருச்சித்திர கூடமென வழங்கப்படும். இது எம்பெருமான் தேவர்களும் முனிவர்களுஞ் சூழக் கொலுவிற்றிருந்த ஸபை.

வேங்கடம் – தன்னையடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடமெனப் பெயர் பெற்றது வடசொல், வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப்பொருள் காண்க. “அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசலமெனும் பேர், வைத்தனாதுவேதென்னில் – வேமெனவழங்கெழுந்தே, கொத்துறுபவத்தைக்கூறும்  கடவெனக் கூறிரண்டாஞ், சுத்தவக்கரம் கொளுத்தப்படுமெனச் சொல்வர் மேலோர“ என்றும் “வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திரடச்செய்வதால் நல் மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடலையான தென்று“ என்றுமுள்ள புராணச் செய்யுள்கள் காண்க. அன்றி, வேம் என்பது அழிவின்மை. கடம் என்பது ஐச்வர்யம், அழிவில்லாத ஐச்வரியங்களைத் தன்னையடைந்தார்க்குத் தருதலால் வேங்கடமெனப்பெயர் கொண்ட தென்றலுமுண்டு.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top