……… …………….. …………….. பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், – நோக்குதலும் (2753)
மன்னன் திருமர்பும் வாயும் அடியி ணையும்,
பன்னு கரதலமும் கண்களும், – பங்கயத்தின் (2754)
பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்,
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வ ளையும்,
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, – ஓர்
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான், (2755)
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,
முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்,
அன்ன திருவுருவம் நின்ற தறியாதே,
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு
மன்னும் மறிகடலும் ஆர்க்கும், – மதியுகுத்த (2756)
இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.
தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ,
பதவுரை
|
பாவியேற்கு என்று உறு நோய் |
– |
பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை |
|
யான் உரைப்ப கேண்மின் |
– |
நானே சொல்லக் கேளுங்கள் (என்னவென்றால்) |
|
இரு பொழில் சூழ் |
– |
விசாலமான சோலைகள் சூழப்பெற்றதும் |
|
மறையோர் மன்னும் |
– |
வைதிகர்கள் வாழப்பெற்றதுமான |
|
திரு நறையூர் |
– |
திருநறையூரில் |
|
மா மலைபோல பொன் இயலும் மாடம் கவாடம் கடந்து புக்கு |
– |
பெரிய மலைபோன்றதும் ஸ்வரண மயமுமான ஸந்நிதியின் திருக் காப்பை நீக்கிச் சென்று |
|
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன் |
– |
எனது கண்கள் களிக்கும்படி உற்றுப்பார்த்தேன் |
|
நோக்குதலும் |
– |
பார்த்தவளவில் |
|
மன்ன்ன் |
– |
(அங்குள்ள) எம்பெருமானுடைய |
|
திரு மார்பும் |
– |
பிராட்டியுறையும் மார்வும் |
|
வாயும் |
– |
(புன் முறுவல் நிறைந்த) அதரமும் |
|
அடி இணையும் |
– |
உபய பாதங்களும் |
|
பன்னு கரதலமும் |
– |
கொண்டாடத் தக்க திருக்கைகளும் |
|
கண்களும் |
– |
திருக்கண்களும் |
|
ஓர் மணிவரைமேல் பொன் இயல் பங்கயத்தின் காடுபூத்த்துபோல் மின்னி ஒளிபடைப்ப |
– |
ஒரு நீலரத்ந பர்வத்த்தின் மேல் பொன் மயமான தாமரைக் காடு புஷ்பித்தாற்போல் பளபளத்த ஒளியை வீச, |
|
வீழ்நாணும் |
– |
விரும்பத்தக்க திருவரை நாணும் |
|
தோள் வளையும் |
– |
தோள் வளைகளும் |
|
மன்னிண குண்டலமும் |
– |
பொருத்தமான திருக்குண்டலங்களும் |
|
ஆரமும் |
– |
திருமார்பில் ஹாரமும் |
|
நீள் முடியும் |
– |
பெரிய திருவபிஷேகமும் |
|
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப |
– |
மிக்க தேஜஸ்ஸை வெளிவிடுகின்ற முடியிற் பதித்த ரத்னமும் ப்ரகாசிக்க |
|
மன்னு மாதகக்குன்றின் மருங்கே |
– |
எல்லார்க்கும் ஆச்ரயமான மரகதமலை யென்னும்படியான எம்பெருமான் பக்கத்திலே |
|
ஓர் இன் இள வஞ்சி கொடி ஒன்று நின்றது |
– |
விலக்ஷணமாய் போக்யமாய் இளைசா யிருப்பதொரு வஞ்சிக்கொடி யென்னும் படியான பிராட்டி நின்றாள். |
|
அன்னம் ஆய் |
– |
(நடையில்) ஹம்ஸத்தை யொத்தும் |
|
மான் ஆய் |
– |
(நோக்கில்) மானையொத்தும் |
|
அணி மயில் ஆய் |
– |
(கூந்தலில்) அழகிய மயிலை யொத்தும் |
|
இடை மின் ஆய் |
– |
இடையழகில மின்னலை யொத்தும் |
|
இள இரண்டு வேய் ஆய் |
– |
(தோளில்) இளைதான இரண்டு மூங்கில்களையொத்தும் |
|
இணை செப்பு ஆய் |
– |
(ஸ்தநத்தில்) இரண்டு கலசங்களை யொத்தும் |
|
முன் ஆய் தொண்டை ஆய் |
– |
முன்னே தோற்றுகிற (அதரத்தில்) கொவ்வைக் கனியை யொத்தும். |
|
குலம் கொண்டை இரண்டு ஆய் |
– |
(கண்ணில்) சிறந்த இரண்டு கெண்டை மீன்களை யொத்தும் |
|
அன்ன |
– |
அப்படிப்பட்டிருந்த |
|
திரு உருவம் |
– |
திவ்ய மங்கள விக்ரஹம் (பிராட்டி) |
|
நின்றது அறியாது |
– |
(பக்கத்தில்) நிற்கும் படியை அறியாதே (எம்பெருமான் மாத்திரமே யுளனென்று ஸேவிக்கப் புகுந்த) |
|
என்னுடைய நெஞ்சும் |
– |
எனது நெஞ்சும் |
|
அறிவும் |
– |
(அந்த நெஞ்சின் தருமமாகிய) அறிவும் |
|
இனம் வளையும் |
– |
சிறந்த கைவளையும் |
|
பொன் இயலும் மேகலையும் |
– |
ஸ்வர்ண மயமான மேகலையும் |
|
ஒழிய போந்தேற்கு |
– |
(எல்லாம்) விட்டு நீங்கப்பெற்ற எனக்கு (இதற்குமேலும் ஹிம்ஸையாம்படி) |
|
மன்னு மறி கடலும் ஆர்க்கும் |
– |
சலியாததும் மடிந்து அலையெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது |
|
மதி உகுத்த இன் நிலாவின் கதிகும் |
– |
சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும் |
|
என் தனக்கே |
– |
எனக்கு மாத்திரம் |
|
வெய்து ஆகும் |
– |
தீக்ஷ்ணமாயிரா நின்றது, |
|
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொல் |
– |
நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான்றான் ஏதாவது செய்துவிட்டானோ. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இங்ஙனே ஊரிலுள்ள பெண்களின் சரித்திரங்களை எடுத்துரைப்பதனால் எனக்கு என்ன பயனாம்? அந்த வம்புக் கதைகளையெல்லாம் விரித்துரைப்பதற்கோ நான் பெண் பிறந்தது. அது கிடக்கட்டும், நான் பட்டபாடு நாடறியச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திருநறையூ ரெம்பெருமான் ஸ்ந்நிதியிலே ஸேவிக்கப்புகுந்த தான் பட்டப்பாட்டைப் பேசத் தொடங்குகின்றாள் பரகால நாயகி.
பாவியேற் கென்னுறு நோய் என்று இங்ஙனே அந்வயித்துப் பொருள் கொள்வதிற் காட்டிலம் ‘பன்னியுரைக்குங்காற் பாரதமாம் பாவியேற்கு“ என்று கீழோடே அந்வயிப்பது பூருவர்களின் வியாக்கியானங்களுக்கு நன்கு பொருந்தும்.
************ (நெஞ்சினுள்ளே துக்கம் அதிகரித்தால் வாய் விட்டுக் கதறினால்தான் தீரும்.) என்று சொல்லியுள்ளபடி – தனது வருத்த்தை ஒருவாறு தணித்துக்கொள்ள வேண்டி வாய்விட்டுக் கதறுகின்றாளென்க. யானுற்ற நோயை யான் சொல்லுகிறேன் கேளுங்கள் நான் திருநறையூரெம்பெருமானை ஸேவிக்கச்சென்று ஸந்நிதியுள்ளே புகுந்து பார்த்தேன், பார்த்தவுடனே அவ்வெம்பெருமானுடைய திருமார்வு திருவதரம் திருவடி திருக்கை திருக்கண் ஆகிய இவ்வவயவங்கள் நீலகிரிமேல் தாமரைக்காடு பூத்தாற்போல் பொலிந்தன. திருவரைநாண் திருத்தோள்வளை திருமகர குண்டலம் ஹாரம் திருவபிஷேகம் அதனுச்சியிற்பதித்த மணி ஆகிய இவை பளபளவென்று ப்ரகாசித்தன, அவ்வெம்பெருமான் பக்கத்திலே அன்னம்போன்ற நடையழகும் மான்போன்ற நோக்கழகும் மயில்போன்ற கூந்தலகும் மின்போல் நுண்ணிய இடையழகும் வேய்ப்போன்ற தோளழகும் செப்புப்போன்ற முலையழகும் கோவைபோன்ற வாயழகும் கெண்டைபோன்ற கண்ணழகுமுடையளான பெரிய பிராட்டியார் இளவஞ்சிக்கொடி போலே நின்றதையுங் கண்டேன். கண்டதும் அறிவு போயிற்று பலவிகாரங்களுண்டாயின. இப்படி வருத்தபடாநின்ற எனக்குக் கடலோசை தானும் வந்து மேன்மேலும் ஹிம்ஸையைப்பண்ணா நின்றது. எல்லார்க்கும் இனிதான நிலா எனக்குத் தீ வீசுகின்றது குளிர்ச்சியையே இயல்வாகவுடைய நிலாவும் இப்படி கடும்படியான காரணம் என்னோ, அறியேன் – என்றாளாயிற்று.
திருநறையூர்ப் பொன்னியலுமாடம் – நாச்சியார் கோவிலுக்குத் திருநறையூர் மணிமாடம் என்று ப்ரஸித்தியுள்ளது. “திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே“ என்றார் பெரிய திருமொழியில், “தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணளனை“ என்பர் இத்திருமடலிலும். கவாடம் – கதவு, வடசொல்.
பன்னு கரதலம் – ‘இப்படிமொரு கரதலமுண்டோ‘ என்று வாய்வெருவப்பண்ணும் கை காரதலம் – வடசொல். ஓர் மணிவரைமேல் பொன்னியல் பங்கயத்தின் காடு பூத்த்துபோல் – எம்பெருமானது திருமேனி நீலரத்ந பர்வதமாகவும் திருக்கண் முதலியன தாமரைக் காடாகவும் ரூபிக்கப்பட்டன. அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனாதலால் திருமார்பும் தாமரை யாக விளங்கக் குறையில்லை. பங்கயம் – பங்கஜம். ஒளிப்படைப்ப – ஒளியை யுண்டாக்க. வீணாணும் – வீழ் – நாண் – வீணான், வீரசோழிய மென்னும் இலக்கண நூலில் (சந்திப்படலம் – 18) “நவ்வரின் முன்னழிந்து பின் மிக்க ணவ்வாம் என்றது காண்க. வீழ்தல் –விரும்பப்படுதல். ஆரம் – ஹாரம்.
(“துன்னுவெயில்விரித்த சூடாமணி இமைப்ப“) சூடாமணியிமைப்ப என்றவிடத்து உம்மைத் தொகையாகவும் உவமைத்தொகையாகவுங் கொள்ளலாம், உம்மைத் தொகையாகக் கொள்ளும்போது, சூடாமணியாவது திருவபிஷேகத்தின் நுனியிற்பதித்த ரத்னம், அதுவும் விளங்க – என்றதாகிறது. உவமத்தொகையாகக் கொள்ளும்போது,சூடாமணியாவது தேவலோகத்துச் சிறந்த்தொரு மாணிக்கம், அதுபோலே விணாணும். நீண்முடியும் விளங்க – என்றதாகிறது. சூடாமணி எனினும் சூளாமணி யெனினும் ஒக்கும். இமைத்தல் – ஒளிசெய்தல்.
மன்னுமரதகக் குன்றின் மருங்கே – எம்பெருமான்றன்னையெ ஸாக்ஷாத் மரகத பர்வதமாகக் கூறினது முற்றுவமை. அப்படியே, பிராட்டியை இளவஞ்சிக் கொடியாகக் கூறினதும் முற்றுவமை. இதனை வடநூலார் ரூபகாதிசயோக்தி யென்பர். ஒரு மலையினருகே ஒரு பொற்கொடி நிற்கக்கண்டேனென்று சமத்காரமாக அருளிச்செய்தபடி. மாதர்க்கு இளவஞ்சிக்கொடி ஒப்புச்சொல்லுதல் கவிமரபு.
அன்னமாய் மானாய். என்றவிடங்களிலும் உபமேயங்களான நடை நோக்கு முதலியன மறைக்கப்பட்டன. மயில் கூந்தற்செறிவுக்கும் சாயலுக்கும் உவமையாம். பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோள்களுக்கு உபமானமாக்குவது. செப்பு பொற்கலசம். தொண்டை – கோவைக்கனி.
அன்ன திருவுருவம் நின்றதறியாதே – “ப்ரஹ்மசாரி நாராயணன் மாத்திரமே யுள்ளான், கண்டு வந்தவிடுவோம் என்று கருதிச் சென்றேன். பக்கத்தில் ஒரு பிராட்டி யெழுந்தருளியிருப்பது தெரியாமற் போயிற்று. தெரிந்திருந்தால் உட்புகுந்தே யிருக்கமாட்டேன், அந்தோ! தெரியாமற்சென்று பட்டபாடு இது! என்கிறாள்போலும். நெஞ்சு போயிற்று, அறிவு போயிற்று, வளை கழன்றொழிந்தது, மேகலை நெகிழ்ந்தொழிந்தது. இபப்டிப்பட்ட பரிதாப நிலைமையில் கடல்தானும் தனது கோஷத்தைச் செய்து கொலை செய்யா நின்றது.
(தன்னுடைய தன்மை தவிரத்தா னென்கொலோ?) “சீதோபவ ஹநூமதா“ என்ன நெருப்புக் குளிருமாபோலே “நிலாச்சுடுக“ என்று நினைப்பிட்டதோ? இதுக்குக் காரணம் என்? என்கிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்க. சந்திரனுக்குத் தன்னுடைய தன்மையாகிய குளிர்த்தி மாறி வெப்பமுண்டாவதற்கு என்ன காரணம்?
