(3216)

(3216)

வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை,

ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்,

காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்,

மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வய்கொண்டே?

 

பதவுரை

வேயின் மலிபுரை தோளி

மூங்கிலைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்ற தோள்கையுடையவளான

பிள்ளைக்கு

நப்பின்னைப் பிராட்டிக்கு

மணாளனை

மணவாளனான கண்ணபிரானைக் குறித்து

எல்லை இலாதன

நிரவதிகமாயும்

ஆய

ஆராய்வதற்கு உரியனவுமான

பெரும்புகழ்

பெரிய கீர்த்திகளை

பாடி

கவிபாடி

போய்

நெடுஞ்காலம் நடந்து

காயம் கழித்து

இவ்வுடலை யொழித்து

அவன் தான் இணை கீழ்

அவ்வெம்பெருமானது திருவடியிணையில்

புகும் காதலன்

அந்வயிக்க வேணுமென்கிற ஆசையையுடைய நான்

மாயம் மனிசரை

பிராகிருதர்களான மனிசர்களை

என் வாய் கொண்டு

(எம்பெருமானையே துதிக்கக் கண்ட) எனது வாக்கைக் கொண்டு

என் சொல்ல வல்லேன்

என்ன கவி பாடுவேன்? (யாதொன்றும் பாடமாட்டேன்.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  நப்பின்னைப் பிராட்டியின் ஸம்ச்லேஷ விரோதிகளைத் தொலைத்து அவளை அடிமை கொண்டது போல என் விரோதிகளையும் தொலைத்து என்னை அடிமை கொள்பவனாக எம்பெருமானையொழிய வேறு சில நீசரைக் கவிபாட நான் நினைத்தாலும் என்வாய் அதுக்குப் பாங்காகாது என்கிறார். எம்பெருமானை வருணிக்கப்புகுந்து ‘நப்பின்னை கேள்வன்’ என்று சொல்லி அந்த நப்பின்னையைப் பல பாசுரங்களால் வருணிப்பது, அவளது தோளழகைப் பல பாசுரங்களால் வருணிப்பது இங்ஙனே எத்தனை யூழிகாலும் பாசுரம்பாட நினைத்தாலும் விஷயங்கள் விசாலமாயிருக்க, இதர விஷயங்களைப் பாட என்ன ப்ரஸக்தி? என்று காட்டுகிறார் முதலடியினால்.

கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்ஸமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியைக் கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் மணம் புணர்ந்தன்னாதலால் “பின்னை மணாதளன்” என்று கண்ணபிரானுக்கு ப்ரஸித்தி.

“ஆய பெரும்புகழெல்லையிலாதன பாடிப்போய்க் காய்ங்கழித்து” என்ற சொல்தொடர் மிக இனிமையானது: எல்லையில்லாத பகவத் குணங்களையே இடைவிடாது பாடிக்கொண்டிருந்து அதுவே யாத்திரையாய் உடலை விடவேணுமென்கிற பாரிப்பை ஆழ்வார் தெரிவிக்கின்றனர். இந்த ரீதியிலே சரீரம் கழிந்தால் சுவர்க்கமோ நரகமோ செல்ல ப்ராப்தியில்லையே; அவனது திருவடி நிழலில்தானே யொதுங்கும் பாக்கியமுண்டாகும்: அதனை மூன்றாமடியினாற் பேசினார். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்; – “சரீரத்தைக் கழித்த வனந்தரம் ஸ்வாநுபவம் பண்ணியிருத்தல் ப்ரயோஜநாந்தரஙக்ளைக் கொள்ளுதல் செய்யவிராதே அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப்பெற்று, தாய்முலைக் கீழே யொதுங்கும் ஸ்தந்தய ப்ரஜைபோலே திருவடிகளின் கீழே யொதுங்குவேனென்னும் அபிநிவேஸத்தையுடைய நான்.”

மாயமனிசர்- பிரகிருதிக்கு வசப்பட்ட மனிதர்கள் என்றபடி; “உத்பத்தியோடே வ்யாப்தமான விநாஸத்தை யுடையவர்களை; அதாவது – பாடத் தொடங்கின கவி முடிவதற்கு முன்னே முடியும் மநுஷ்யரை என்பது ஈடு.

என்வாய்க்கொண்டு என்சொல்லவல்லேன் = வேறு சிலர் வாக்காலே பாடினால் பாடலாம்; கழுத்துக்கு மேலே சொல்லுவோமென்றாலும் வாய் இசைகின்றதில்லை; எம்பெருமான் விஷயத்திலே காதலைப்பண்ணி, புறம்பே சிலரைக் கவிபாட வொண்றுமோ?

 

English Translation

The great Lord of limitless glories is the spouse of Nappinnai with bamboo-slender arms.  My heart longs to cast this body and reach his feet. So how can I sing about a mortal man?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top