(3831)

(3831)

கூட்டுண்டுநீங்கிய கோலத்தாமரைக்கட்செவ்வாய்

வாட்டமிலென்கருமாணிக்கம் கண்ணன்மாயன்போல்

கோட்டியவில்லோடு மின்னுமேகக்குழாங்கள்காள்

காட்டேன்மின்நும்முரு என்னுயிர்க்கதுகாலனே.

 

பதவுரை

கூட்டுண்டு நீங்கிய

என்னோடு கலந்து பிரிந்த

கோலம் தாமரை கண் செம்வாய்

அழகிய தாமரை போன்ற கண்களையும் சிவந்த அதாத்தையு முடையனாய்

வாட்டம் இல் என் கரு மாணிக்கம்

இடைவிடாமல் என்னினைவிலேயேயிருக்கிற நீலரத்னம் போன்றவடிவையுடையனான

மாயன் கண்ணன் போல்

மாயக் கண்ணனைப் போலயிருக்கிற

கோட்டிய வில்லோடு மின்னும் மேகம் குழாங்கள் காள்!

வளைக்கப்பட்ட வில்லோடு கூடி மின்னுகிற மேகதிரள்களே!

நும் உரு

உங்கள் வடிவத்தை

காட்டேன்மின்

காட்டாதே மறைத்துக்கொள்ளுங்கோள்;

அது என் உயிர்க்கு காலன்

அந்த உங்கள் வடிவம் என் பிராணனுக்கு மிருத்யு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– எம்பெருமானது வடிவுக்குப் போலியான மேக பங்க்திகளைக் கண்டு, உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோளென்கிறாள்.  எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து பிரிந்து போன பிறகு ஸெளந்தர்ய லாவண்யாதிகள் அதிசயிக்கப் பெற்றான் போலும்;  அதனைச் சொல்லுகிறது முன்னிரண்டடிகள்.  இங்கு நம்பிள்ளை இரண்டு படியாக அருளிச் செய்வர்; “ஏகத்வ மென்னும்படி கலந்து பிரிந்த பின்பு அவனுடைய அவயவ சோபை யிருந்தபடி யென்னுதல்; இவளோட்டைக் கலவியால் வந்த சோபை யென்னுதல்; ” என்று.  அதாவது, அவனோடு கலந்து நான் பிரிந்தேன, என்னோடு கலந்து அவன் பிரிந்தான்;  இப்படி இருவருக்கும் பிரிவு ஒத்திருக்கச் செய்தேயும் அவனைப் பிரிந்த நான் *சங்கம் சரிந்த சாயிழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் * என்றும்,  *சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான்* என்றும் சொல்லும்படி மேனி நிறமழிந்த கிடக்கிறேன்;  என்னைப் பிரிந்த அவனோ வென்னில், பிரிவுக்குக் கிளையாதபடி கண்ணும் வாயும் விகாஸம் பெற்றுப் பொலியா நின்றான் என்பது முதற்கருத்து;  இந்தப் பொலிவு பிரிவினாலென்று கொள்ள வேண்டா;  என்னோடு கலந்ததனாலேயே யென்று கொள்ளலா மென்பது இரண்டாவது கருத்து.

மின்னு மேகக் குழாங்கள்காள்!  என்று மேகங்களை விளிக்கின்ற இத்தலைவி அந்த மேகங்களுக்கு எம்பெருமானை உவமை கூறுகின்றாள்.  கீழே எட்டாம்பத்தில் ஒக்குமம் மானுருவமென்று உள்ளங் குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல் குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான் என்றதை இங்கு நினைப்பது.  மேகம் வில்லோடுகூடி விளங்கும் போது வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்வேந்தி யிருக்குங் கண்ணனுடைய நினைவு வாராமலிராது;  மேகம் மின்னும்போது ஸ்ரீகெளஸ்துபம் முதலிய திருவாபரணங்களினால் மின்னா நின்றுள்ள கண்ணபிரானுடைய நினைவு வாராமலிராது.  அதையிட்டு “என் கருமாணிக்கங் கண்ணன் மாயன்போல் கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாங்கள்காள்!” என்றது.

நாட்டேன்மின் நும்முரு=மிருத்யு வென்னலாம்படியான உங்கள் வடிவைக்காட்டி என்னைக் கொலை செய்ய வேண்டா வென்றபடி.  என்னுயிர்க்கு அது காலனே–பண்டே விரஹம் தின்ற என்னுயிர்க்கு அது யமனன்றோ.  இங்கு மேகக் குழாங்கள்காள்!  என்று, முன்னிலையாக விளித்து, நும்முரு என்றுஞ் சொல்லிவைத்து இது என்ன வேண்டியிருக்க அது என்று பரோக்ஷம் போலச் சொல்லி யிருக்கையாலே, கண்கொண்டு காண மாட்டாமை முகத்தை மாற வைத்துச் சொல்லுகிறளென்பது போதரும்.

இப்பாட்டில் ‘குழாங்கள் காள்!’ என்ற பிரயோகம் வட மொழி வைதிகப் பிரயோகம் போலே நிர்வஹிக்கத் தக்கது.  எட்டாம் பத்திலும்  *இடையில்லை யான்வளர்த்த கிளிகாள் பூவைகள்காள்* என்றுள்ள பிரயோகம் இத்தோடு ஒப்பிடத்தக்கது.   மேல் பத்தாம் பாட்டிலும்  *நாரைக் குழாங்கள்காள் * என்பர்.

 

English Translation

O Dark lightning-clouds! You remind me of Krishna, He enjoyed my company, then deserted my.  Pray do not show his lotus eyes, lips and his dark hue; your form is like death to my soul

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top