(3732)

(3732)

கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,

மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,

மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,

நண்ணு திருக்கடித் தான நகரே.

 

பதவுரை

கோவிந்தன்

கோவிந்தனான பெருமானுடைய

மண் விண் முழுதும் அளந்த ஒண்தாமரை

மண்ணுலகையும் விண்ணுலகையும் ஒன்றொழியாமல் அளந்து கொண்ட அழகிய திருவடித்தாமரைகளை

மண்ணவர் தாம் தொழ

இந்நிலத்திலுள்ளார் தொழா நிற்க.

வானவர் தாம் வந்து நண்ணு

ப்ரமபதத்திலுள்ளார் தாங்களும் (சீலகுணாநுபவம் பண்ண) வந்து சேருமிடமான

திருக்கடித்தானம் நகர்

திருக்கடித்தானப்பதியை

இடர் கெட

துக்கமெல்லாம் தொலைய

உள்ளத்து கொண்மின்

நெஞ்சிலே கொண்டு சிந்தியுங்கோள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கடித்தானத்தை ஏத்துங்கோளென்றார் கீழ்ப்பாட்டில், ஏத்த வேண்டா, அத்தலத்தை நெஞ்சாலே நினைத்தாலும் போது மென்கிறார் இதில். கோவிந்தன் மண்விண் முழுதுமளந்த வொண்டாமரை மண்ணவர்தாம்தொழ வானவர்தாம் வந்து நண்ணுதிருக்கடித்தான நகரை இடர்கெட உள்ளத்துக் கொண்மின் என்று அந்வயிப்பது.

கோவிந்தன் என்பது ஸர்வஸுலபனென்னும் பொருளில் பிரயோகிக்கப்பட்டது. தாமரைபோன்ற திருவடியென்ன வேண்டுமிடத்து, திருவடியைச் சொல்லாதே தாமரையென்றே சொல்லிவைத்தது –உவமவாகுபெயர், * தாவி வையங்கொண்ட தடந்தாமரை கட்கே * (6-9-10) என்றார் கீழும்.

மண்ணவர்தாந் தொழ வானவர்தாம் வந்து நண்ணு –இடக்கை வலக்கையறியாத ஸம்ஸாரிகள் தொழ அவர்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிர்மையைக்காண வாசைப்பட்டு நித்ய ஸூரிகளும் வந்துகிட்டுகிற திருப்பதியாமிது. “பரமபதம் நித்யர்க்கேயா யிருக்குமாபோலே உகந்தருளின தேசம் ஸம்ஸாரிகளுக்கேயா யிருக்கை“ என்பது நம்பிள்ளையீடு. “இங்குள்ளார் அங்குப்போவது மேன்மையை யநுபவிக்க, அங்குள்ளார் இங்கு வருவது சீல குணாநுபவம் பண்ணுகைக்கு“ என்கிற ஸ்ரீ ஸூக்தியுங் காண்க.

 

English Translation

The lotus feet of Govinda- who measured the Earth, sky and all, -are worshipped by earthings, and gods in Tirukkadittanam, place him in your heart and end your woes

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top