(3725)

(3725)

எங்கே காண்கேன் ஈன்துழய் அம்மான் றன்னை யான்? என்றென்று

அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்,

செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,

இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே.

 

பதவுரை

ஈன் துழாய் அம்மான் தன்னை

பரமபோக்யமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேச்வரனை

யான் எங்கே காண்கேன் என்று என்று

நான் எங்கே காணக் கடவேனென்று பலகாலுஞ் சொல்லி

அங்கே தாழ்ந்த சொற்களால்

அவ்விஷயத்திலேயே ப்ரவணமான சொற்களினாலே

அம் தண் குருகூர் சடகோபன்

ஆழ்வார்

செம் கேழ் சொன்ன ஆயிரத்துள்

மிகவும் செவ்விதாகச சொன்ன ஆயிரத்திலுள்ளே

இவையும் பத்தும் வல்லார்கள்

இவை பத்தையும் ஓத வல்லவர்கள்

இங்கே காண

இந்நிலத்தே எல்லாரும் காணும்படி

இப் பிறப்பே

இந்த ஜன்மத்திலேயே

எல்லியும் காலை மகிழ்வர்

இரவும் பகலும் இடைவீடின்றி மகிழ்ந்திருக்கப் பெறுவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழிவல்லார் தாம்பட்ட துக்கம்படாதே இவ்வுலகிலே இப்பிறப்பிலே எம்பெருமானைப் பெற்று நிரந்தரமாக இன்புறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். ஸர்வேச்வர னென்னுமிடத்தை நிலைநாட்டவல்ல திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானைக் கண்டல்லது தரிக்க மாட்டாதபடி சபலனானநான் எங்கே காணக்கடவே னென்று பலகாலுஞ் சொல்லி, தோளும் தோள்மாலையுமான வழகிலும் மேன்மையிலும் ஈடுபட்ட சொற்களாலே ஆழ்வாரருளிச் செய்ததாய் மனமொழி மெய்கள் ஒருங்கேநின்று சொன்னதான ஆயிரத்தினுள்ளும் இப்பத்தையும் ஓதவல்லவர்கள் இஹலோகத்திலே இந்த ஜன்மத்திலே பகலுமிரவும் படிந்து குடைந்து பகவதநுபவம் பண்ணிக் களிக்கப் பெறுவர்கள். “ஆளக் கூப்பிட்டழைத்தக்கால்“ என்று ஆழ்வார் கூப்பிடச் செய்தேயும் வந்து முகங்காட்டாத குற்றத்தை இப்பதிகங் கற்பாரிடத்திலே எம்பெருமான் தீர்த்துக் கொள்வனும், இவர்களுக்குச் சடக்கெனவந்து முகங்காட்டுவனென்க.

 

English Translation

This decad of the beautiful thousand songs by kurugur Satakopan asking the Lord, “O Where can I see you,  my sweet Tulasi-garland Lord?” –those who can sing it will enjoy bliss here and now, night and day

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top