(3718)

(3718)

தூநீர் முகில்போல் தோன்றும்நின் சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்,

தேநீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா,

மாநீர் வெள்ளீ மலைதன்மேல் வண்கார் நீல முகில்போல,

தூநீர்க் கடலுள் துயில்வானே! எந்தாய்! சொல்ல மாட்டேனே!

 

பதவுரை

மா நீர் வெள்ளி மலை தன் மேல்

ஆழ்ந்த நீரினுள்ளே கிடப்பதொரு வெள்ளி மலையின் மேலே

வண் கார் நீலம் முகில் போல

அழகிய கார்காலத்துக் காளமேகம் போலே

தூ நீர் கடலுள்

வெளுத்த நீரையுடைய பாற்கடலில்

துயில்வானே

திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!

எந்தாய்

என் ஸ்வாமியே!

தூ நீர் முகில் போல் தோன்றும்

தெளிந்த நீர் நிறைந்த மேகம் போலே விளங்குகின்ற

நின் சுடர் கொள் வடிவும்

உன்னுடைய ஒளி பொருந்திய வடிவும்

கனி வாயும்

கனிந்த திருவதரமும்

தேன் நீர் கமலம் கண்களும்

மது ஜலத்தையுடைய கமலம் போன்ற திருக்கண்களும்

வந்து என் சிந்தை நிறைந்த ஆ

இங்கே வந்து என்நெஞ்சு நிறைந்திருக்கிறபடியை

சொல்ல மாட்டேன்

இன்னதென்று சொல்லகில்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டும் மேற்பாட்டும் சந்தோஷமாகச் சொல்வனபோல் தோன்றும், கீழ் மேற்பாட்டுக்களில் நிர்வேதம் காணாநிற்க, இடையில் சந்தோஷம் வந்து புக ப்ரஸக்தியில்லை, இவ்விரண்டு பாசுரங்களுங்கூட நிர்வேதமாகவே சொல்லப்படுவன. உன்னுடைய வடிவழகுவந்து என்னெஞ்சிலே நிறைந்து நலிகிறவிதம் என்னால் சொல்லப்போகிறதில்லையென்று நொந்து சொல்லுகிறபடியே யிது.

எம்பெருமானுடைய வடிவு எப்படிப்பட்டதென்றால், தூ நீர் முகில்போல் தோன்றும் – கண்ட மாத்திரத்திலே விடாய்கெடும்படியான காளமேகம் போன்றது, அப்படிப்பட்ட திருவடிவு என் சிந்தையுள்ளே நிறைந்து நலியாநின்றதே!, கனிவாயும் தேனீர்க்கமலக் கண்களும் – வாயும் கண்ணுமான அவயவங்கள் வடிவிலே அந்தர்க்கமாயிருக்கவும் தனிப்படச் சொல்லுகிறது – இவை தனித்தனி யுருவமாய்க் கொண்டு நலிகிறபடியினாலே.கையில் கிடைத்தபோதே நுகரலாம்படியிருக்கிற கனிபோன்ற வாயும், தாமரைபோன்ற திருக்கண்களும் என் சிந்தையிலே நிறைந்து நலிகிறபடியைச் சொல்ல கில்லேன். தேன் நீர் – தேனினுடைய தன்மையை யுடைத்தான் கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

பின்னடிகளில் ஒரு விலக்ஷமான உத்ப்ரேக்ஷயுள்ளது, திருப்பாற்கலிலே திருவனந்தாழ்வான்மேலே எம்பெருமான் திருக்கண் வளர்ந்தருள்வதானது நீர்க்குள்ளே யழுந்தினதொரு வெள்ளிமலையின் மீது காளமேகம் படிந்தாற்போன்றுள்ளது என்கிறார். மேலே ஒன்பதாம்பத்தில் * காய்ச்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் * என்கிறார். பொன்னிறத்தனனான புள்ளரையன்மீது எம்பெருமானிருப்பது பொன்மலையின்மீது காளமேக மிருக்குமாபோலேயுள்ளதென்றார். அங்கு, இங்கு, திருப்பாற்கடலும் வெண்ணிறத்தது, அதில் திருவனந்தாழ்வானும் வெண்ணிறத்தனன், அவன்மீது கரிய கோலப்பிரான் சயனித்திருப்பது கைலாஸகிரியில் காளமேகம் கிடந்தாற்போன்றுள்ளது என்றாயிற்று. மூலத்தில் திருவனந்தாழ்வானுக்கு வாசகமான சொல் இல்லையாயினும் ஆழ்வார் திருவுள்ளத்தை நோக்கி அதுவும் கொள்ளத்தக்கதே. “திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான் மேலே யென்கை.“ என்பது இப்பத்தினாலாயிரம்.

 

English Translation

O Lord your coral lips and dew-fresh lotus eyes and radiant form have occupied my heart, I cannot say how, I see you reclining in the Milk Ocean like a dark rain-cloud on a snowcapped mountain pass

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top