(3686)
ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன் நம்மில் வரவும் எல்லாம்,
தோழியர் காள் நம்முடைய மேதான்? சொல்லுவ தோவிங் கரியது தான்,
ஊழிதோ றூழி ஒருவ னாக நன்குணர் வார்க்கும் உணர லாகா,
சூழ லுடைய சுடர்கொ ளாதித் தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே.
பதவுரை
|
தோழியர்காள் |
– |
தோழியர்களே! |
|
நினைக்குங்கால |
– |
ஆராய்ந்து பார்க்குமளவில் |
|
நன்று உணர்வர்க்கும் ஒருவன் ஆக உழிதோறு ஊழி உணரல் ஆகா |
– |
நன்றாக உள்ளபடி அறியவல்லார்க்கும் காலமுள்ளதனையும் அறிய முயன்றாலும் இத்தகையனென்று அறிய வொண்ணாதபடி |
|
சூழல் உடைய |
– |
அடியார்களை அகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியாகிற சேஷ்டிதங்களையுடையனாய் |
|
சுடர் கொள் ஆதி |
– |
மிகுந்த தேஜஸ்ஸையுடைய காரணபூதனாய் |
|
தொல்லை அம்சோதி |
– |
நித்ய அஸாதாரண அப்ராக்ருத ஜ்யோதிர்மயரூபத்தை யுடையனாய் |
|
ஆழி வலவனை |
– |
திருவாழிவலவனான ஸர்வேச்வரனை |
|
ஆதரிப்பும் |
– |
விரும்பி பணிகையும் |
|
ஆங்கு |
– |
அப்படிப்பணியுமிடத்து |
|
அவன் நம்மில் வரவும் எல்லாம் |
– |
அவன் நம்பக்கதில் வந்து சேருகையும் ஆகிய இவையெல்லாம் |
|
நம்முடையமே தான் |
– |
நம்மைத் தோற்றிப் புதிதான உண்டாகப் பெற்றிருக்கிறோமோ? |
|
இங்கு சொல்லுவதோ! அரியதுதான் |
– |
அவன் விஷயத்தில் எதையாவது அவத்யமாகச் சொல்லிவிடுவது தகாது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “நங்காய்! ஆழிவலவனையாதரித்துப் பரிசழிந்தேனென்று நீயே சொல்லாநின்றாயே, அவனை யாசைப்பட்டார் இப்படி பரிபவப்படுமதொழிய, ஆசைப்பட்டபடியே பெற்றுக் களிப்பதென்பது கிடையாதே, ஆகவே அவனையாசைப்பட்டு வருந்துவதிற்காட்டிலும் ஆசையை அறத்துறந்து மறந்து மகிழ்ந்திருப்பதே நலன்மன்றோவென்று தோழிமார் சொல்ல அவர்களுக்குத் தலைவி விடை கூறுகின்றாள். ஆசைப்படுவாரும் பெறுவாரும் பலரில்லையோ, அவனையாசைப்படுவதென்பது இன்று நேற்று உண்டாயிற்றோ? நாளொருத்தியேயோ புதிதான இன்று ஆசைப்படத் தொடங்கினேன்! அவனையாசைப்படுவதும் அவன்றான் வந்து கலந்து களிப்புறச்செய்வதும் தொன்றுதொட்டு நிகழுமதன்றோ. அப்படியிருக்க “அவன் அரியன், அவனையாசைப்படவேண்டா“ என்று சொல்லுவது தகுதியோ? என்கிறாள்.
என்னோடே கலந்து பழகுகின்ற நீங்கள் என்னைப்போலவே அவனது இயல்வையறிந்திருந்தும் அவனையாசைப்பட வேண்டாவென்றிப்படிச் சொல்லலாமோ என்னுங்கருத்துதோன்ற தோழியர்காள்! என விளிக்கிறாள். ஆழிவலவனையாதரிப்பும் ஆக்கவன் நம்மில் வரவும் – கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராயொருநாள் * தாமரைநீள்வாசத் தடம்போல்வருவானே! ஒருநாள் காணவாராயே * கொண்டனேன் உன்கழல்காண ஒருநாள் வந்து தோன்றாயே * என்றிப்படியலற்றி அவனையழைப்பதும், அழைத்தவாறே அவன்றான் நம்போல்வாருடைய இல்லந்தேடியோடிவருவதும் என்றபடி. இவ்வளவோடு நிறுத்தாமல் எல்லாம் என்று பின்னையும் சொன்னதற்குப் பொருளென்? என்னில், வருகிறளபுதானே வாய்விட்டுச் சொல்லுவது, வந்த பின்பு அவன் செய்யுமவை பன்னியுரைக்குங்காற் பாரதமாமே, முற்றம்புகுந்து முறுவல்செய்து நிற்பதும், பந்துபறித்துத் துகில்பற்றிக் கீறிப்படிறுசெய்வதம் குழறுபூவையொடுங் கிளியோடுங்குழகுவதும், மையலேற்றி மயக்கப் பேசுவனவும் செய்வனவும் வாய்கொண்டு சொல்லப்போமோ? அவை, எல்லாம் என்பதிலே படங்குமித்தனை.
நம்முடைமேதான் – நம்மைத்தோற்றிப் புதிதாக ஏற்பட்டவையல்லவே என்பது கருத்து, உடையம் – பன்மைத்தன்மைக் குறிப்பு வினைமுற்று. ஏ என்பது எதிர்மறைப் பொருளதாகி, உடையோமல்லோம் என்றதாய்நிற்கும். நம் என்றது நாம் என்றபடி.
சொல்லுவதோ இங்கு அரியதுதான் – அரியது என்றது – சொல்லத்தகாத வார்த்தை என்றபடி. அவனையாசைப்படவேண்டாமென்று தோழிமார் சொல்லும் வார்த்தையே “அரியது“ என்பதனால் விவக்ஷிதம். அரியது சொல்லுவதோதான்? சொல்லத்தகாத வார்த்தையை நீங்களா சொல்லுவது? என்றபடி. அன்றியே, சொல்லுவதோவிங்கு அரியதுதான் என்று உள்ளபடியே அந்வயித்து, நீங்கள் சொல்லும் வார்த்தையான விது சொல்லத்தகாத்தே, நான் கேட்கத் தகாததே என்று முரைக்கலாம்.
பின்னடிகளால் அப்பெருமானுடைய அருமையே சொல்லப்படுகிறது. அவனை அரியனென்று சொல்லலாமாவென்று முன்னடிகளில் கண்டித்தவளே அவனது அருமையைச் சொல்லலாமோவென்னில், இதற்கு நம்பிள்ளையருளிச் செய்யுமழகுகாணீர், – “அவன் கிட்டவரியனாயிருக்கிறமை இல்லையாவென்ன, அதுகானும் நான் சொல்லக் கேட்கவேண்டாவோ வுங்களுக்கு“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
நன்குணர்வார்க்கும் ஒருவனென்று ஊழிதோறூழி உணரலாகா – எதையும் ஆராய்ச்சி செய்து நன்கு அறியவல்லவர்களான மஹாமேதாவிகளும் எத்தனைகாலங்கூடி அறியப்புகுந்தாலும் அறியமுடியாத என்றபடி. இப்படியாகில் * வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் * அஹம் வேத்மி மஹாத்மாநம் * என்றவை எங்ஙனே சேரும்? சிலரை ப்ரஹ்ம வித்துக்களென்றும் தத்வவித்துக்களென்றும் சொல்லுகிறோமே, அதுதான் எப்படி சேரும்? என்கிற சங்கை யுண்டாகும். * ஊழிதோறுழியொருவனாக நன்குணர்வார்க்கு முணரலாகாதவனென்று அறிகிறவர்களே ப்ரஹ்மவித்துக் களும் தத்வ்வித்துக்களுமாவர் என்க. இப்படிச் சொல்லிவிடலாமோ? எம்பெருமானுடைய படிகள் இன்னின்னவையென்று நன்கு நிஷ்கர்ஷிக்கவன்றோ சாஸ்த்ரங்கள் அவதரித்துள்ளன, அப்படிப்பட்ட சாஸ்த்ரங்களையறிந்தவர்களன்றோ நன்குணர்வார், அவர்களுக்கும் உணரலாகாததுண்டோ? என்று கேள்விபிறக்கும். இதற்குச்சொல்லுகிறோம். எம்பெருமானுடைய சில விஷயங்கள் நிஷ்கர்ஷிக்க முடியாமலேயிராநின்றன. இரண்டொன்று எடுத்துரைப்போம், “பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு என்னைபடி பணிவார்க்கு நான் ப்ராப்பன் என்று பல விடங்களிற் கூறுகின்ற எம்பெருமான் தானே *நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாசந * என்கிறான், புருஷகார பலத்தைக்கொண்டும் மற்று எந்த ஸாதனங்கொண்டும் என்னை வசப்படுத்த முடியாது, எனக்காகத் தோன்றுகிறபோது நானாகவே ஒரு அதிகாரிவிசேஷத்தைத் திருவுள்ளம் பற்றுவேனத்தனை – என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. இங்ஙனே மற்றொன்றுங் காண்மின், * ச்ருதிஸ் ஸம்ருதிர் ம்மைவாஜ்ஞா யஸ் தாமுல்லங்க்ய வர்தத்தே, ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோஹீ மத்பத்தோபி ந வைஷ்ணவ * (ச்ருதிஸ்மிருதிகள் என்னுடைய ஆணை, அதை மீறி நடப்பவன் எனக்கு த்ரோஹி, அவன் வேறுவிதமான பக்தி விசேஷங்களை என்னிடத்துச் செலுத்தினாலும் வைஷ்ணவல்லவன்) என்று ஓரிடத்தில் சொல்லி வைத்து * அப்சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அநந்யபாக், ஸாதுரேவ ஸ மந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ * என்றும் * மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந, தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேதத் அகர்ஹிதம் * என்று மருளிச் செய்கிறான் – எவ்வளவு துஷ்டனானவனும் என்னைக் கபடமாகவாவது அடிபணிந்தானாயின் அவனை என்னோடொப்ப பஹுமானிக்கக்கடவது, மற்றபடி அவனிடத்தில் தோஷங்களிருந்தாலென்ன? என்கிறான் இங்ஙனே சொல்லுகிற எம்பெருமான்படியை என்னென்று அறுதியிடுவது. இதனால் யாருமே அறுதியிடமுடியாதென்று கொள்ளவேண்டா, மயர்வற மதிநலமருளப் பெற்றவர்கள் அறுதியிடாத தொன்றில்லை.
(சூழலுடைய) சூழல் என்றும் சூழ்ச்சி என்றும் பர்யாயம், அகப்படுத்திக் கொள்ளும் யந்த்ரம் சூழலெனப்படும். கிட்டினாரைத் தப்பாமல் அகப்படுத்திக்கொள்வல்ல அவதார சேஷ்டிதங்களையுடையவன் என்றபடி. (சுடர்கொளாதி) சுடர்கொள் என்பதும் ஆதி என்பதும் தனித்தனியே எம்பெருமானுக்கு வாசகங்கள் என்று கொள்வது தவிர, சுடர்கொள் என்பது ஆதிக்கு விசேஷணமாய் அந்வயிப்பதாகக் கொள்வதும் பொருந்தும், தேஜஸ்ஸு முதலான எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன், ஜகத்காரண பூதன் – என்பது முந்தின யோஜநையில் தேறும் பொருள். தேஜிஷ்டமான ஜகத்காரணத்வத்தையுடையவன் என்பது இரண்டாவது யோஜநையில் தேறும்பொருள். ஜகத் காரணத்வம் தேஜிஷ்டமாயிருக்கையாவது – உபாதாநகாரணத்வம் ஹைகாரிகாரணத்வம் நிமித்தகாரணத்வம் ஆகிய மூவகைக் காரணத்வமும் எம்பெருமான்றனக்கே பெருந்தியிருப்பது காணா நின்றோம், ப்ரபஞ்சத்தைக் குறித்து எம்பெருமான் காரணமாகிறானென்றால் மேற் சொன்னமூவகைக் காரணமும் தானே யாயிருப்பதாக வேதாந்த நூற்கொள்கை. இதைக்கொண்டே “சுடர்கொளாதி“ என்கிறது. ஆதி என்பதற்கு காரணத்வத்தையுடையவன் என்று பொருளாகி, அதன் ஏகதேசமாகிய காரணத்வத்தில் “சுடர்கொள்“ என்பது விசேஷணமாய் அந்வயிப்பதாகக் கொள்க. நினைக்குங்கால் – அவ் பெருமையை ஆராயப்புகுந்தாலென்றபடி. ஆக, பின்னடிகளினால் தேறினது என்ன? என்னில், “சொல்லுவதோ விங்கரியதுதான்“ என்பதே முக்கியமானது, அரியவஸ்துவே எளியதாமளவில் தடுப்பாருண்டோ? என்றதாகவே முடிபு.
English Translation
O Sakhis! The Lord has an effulgence that traps all like moth-unto-the-candle. Through countless ages, great seers have thought of him and failed. Are we the first to desire the discus wielder and make him come into our midst? Tell me, are your words proper now?
