(3521)

(3521)

மேவி நைந்து நைந்துவிளை யாடலுறா ளென்சிறுத்

தேவிபோய், இனித்தன் திருமால் திருக்கோ ளூரில்,

பூவியல் பொழிலும் தடமும் அவன்கோ யிலுங்கண்டு,

ஆவியுள் குளிர எங்ஙனே யுகக்குங்கொல் இன்றே?

பதவுரை

ஏன் சிறு தேவி

வயதுமுதிராதவளும் திவ்யஸ்வபாவ முடையவளுமான என் மகள்
மேவி

பகவந் குணங்களிலே யீடுபட்டு
நைந்து நைந்து

மிகவும் இளைத்து
விளையாடல் உறாள்

(தன் வயதுக்குரிய) விளையாட்டிலும பொருந்தாதவளாய்
போய்

இங்கு நின்றும் போய்
தன் திருமால் திருக்கோளூரில்

தனக்கு அஸாதாரணானான எம்பெருமானுடைய திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் ஸ்ரீ

பூக்களை இயல்பாகவுடைய சோலைகளையும்
தடமும்

தடாகங்களை
அவன் கோயிலும்

அவனது திவ்ய ஸந்நிதியையும்
கண்டு

பார்த்து
ஆவி உள் குளிர

நெஞ்சு குளிரும்படியாக
இன்று எங்ஙனே உகக்கும் கொல்

இன்று எவ்வண்ணம் களித்திருப்பளோ! (அந்நிலைமையை நான் காணப்பெற்றிலேனே!)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மேவிநைந்து நைந்து) திருக்கோளூர்க்கு நடந்த என்மகள் அங்குச் சோலைகளையும் பொய்கைகளையும் அவன் கோயிலையுங்கொண்டு ஆச்சரியமான உகப்பை அடைவளே, அந்தோ! அவ்வுகப்பை நான் காணக் கொடுத்து வைக்கரில்லையே! என்று தளர்கின்றாள் தாய்.

இவள் விளையாட்டுப் பருவத்திலிருக்கச் செய்தேயும் தோழிகளோடே விளையாடவென்று போனால் விளையாட்டிலே அந்வயிக்க மாட்டாள், அப்போதும் எம்பெருமானை யனுபவிக்க வேணுமென்கிற ஆசையேவிஞ்சி அது தன்மனோரதப்படி ஸித்தியாமையாலே நைந்து கிடப்பள். * அறியாக் காலத்துள்ளே அடிமைக்கணன்பு செய்வித்து * என்கிறபடியே அப்படி இளலமயே தொடங்கி பகவத் விஷயத்தி லீடுபட்டிருந்தவிவள்  இப்போது திருக்கோளூர்க்குச் சென்றாளாயிற்று. அதுதான் ஸாமாந்யமான ஸ்தலமோ? பூஞ்சோலைகளும் தடாகங்களும் மதிளும் மாடமாளிகையும் மண்டபங்களுமாகிற ஸன்னிவேசங்கள் ஆச்சரியமான காட்சியைத் தருமே. அவற்றையெல்லாம் இவள் காணும்போது ஆவியுள்குளிர உகக்குமழகு அத்விதீயமாயிருக்குமே, அவ்வழகு காணக் கொடுத்து வைப்பார் ஆரோ? அந்த பாக்கியம் எனக்கு இல்லையாயிற்றே! என்று தளர்கின்றாள் தாய்.

“அவன் கோயிலுங்கண்டு“ என்றவிடத்து ஈட்டில் ஒரு ஐதிஹ்யம், – “பிள்ளை திருநறையூர்ரையரும் பட்டருமாக உள்ளே ப்ரதக்ஷிணம்பண்ணா நிற்க, இட்டவடிமாறி யிடமாட்டாதே கண்களாலே பருகுவாரைப்போலே பார்த்து ஆழ்ந்து கொடுபோகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன். என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.“

“ஆவியுள்குளிர“ என்கிற சந்தையை மேலெழுந்த வாரியாகச் சொல்லிவிடாமல் “உள்குளிர“ என்றுஆழ்ந்து ஊற்றத்தோடு உறைப்பாக அநுஸந்திக்க வேணுமென்று ஆசாரியர்கள் சிக்ஷிப்பர்கள்.

English Translation

My little goddess gave up her toys and faded day by day.  Now she is with her beloved Lord inTirukkolur amid flower gardens, water tanks and in his temple. I wonder how she enjoys herself today!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top