(3464)

(3464)

போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத வர்க்குரை நம்பி! நின்செய்ய

வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,

வேயி ருந்தடந் தோளினா ரித்திரு வருள்பெறு வார்யவர் கொல்

மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?

பதவுரை

நம்பி

பிரானே!
போய் இருந்து

எங்களைவிட்டு அப்பால் போயிருந்து
நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை

உனது வஞ்சகங்களை அறியாதவர்களான சிலர் பக்கலிலே உன் மெய்போலும் பொய்களைச் சொல்லிக்கொண்டிரு
நின் செய்ய வாய் இரு கனியும்

உனது சிவந்த அதரமாகிற சிறந்த கனிபும்
கண்களும்

திருக்கண்களும்
இந்நாள் விபரீதம்

இப்போது முன்போல் அல்லகிடாய் (இதற்குமேல் முகத்தை மாற வைத்துக்கொண்டு சொல்லுகிறார்கள்)
மா இரு கடலை கடைந்த பெருமானாலே

அகாதமாய் விசாலமான கடலைக் கடைந்தவனான இப்பெரியோன் பக்கலிலே
இத்திரு அருள் பெறுவார்

இப்படிப்பட்ட திருவருளைப் பெறுமவர்களான
வேய் இரு தட தோளினார்

வேய்போன்று பருத்து நெடிய தோள்படைத்தவர்கள்
யவர் கொல்

யாவரோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (போயிருந்து) கீழ்ப்பாட்டில் “ஆகள் போகவிட்டுக் குழலூதுபோயிருந்தே“ என்ற பராங்குசநாயகியை நோக்கிக் கண்ணபிரான் ‘நங்காள்! நான் எங்கேயோ போயிருந்து குழுலூதுவானேன்? காதலிகள் உள்ளவிடத்தேயன்றோ குழலூதத் தகுவது, என் காதலுக்கு முக்கியமான கொள்கலமாகிய நீ யிருந்த இவ்விடத்தேயன்றோ நான் குழலூத வேண்டுவது‘ என்று சில வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு நெருங்கிவா, “போயிருந்து நின் புள்ளுவமறியாதவர்க்கு உரைநம்பீ!“ என்கிறாள். உன் பொய்யிலே பழகின என் பக்கலிலே உன் பொய்விலை செல்லாதுகிடாய், உன் பொய் அறியாதவர்களின் கோஷ்டியிலே போயிருந்து இத்தகைய வஞ்சக வார்த்தைகளைச் சொல்லிக்காணாய் என்றபடி.

அதுகேட்ட கண்ணபிரான் ‘நங்காய்! உன்வாயமுதம் பருக என் செய்யவாய் துடிக்கிறபடி கண்டாயே, வாயமுதம் பருகக் கிடையாதொழியிலும் கண்களாரளவும் நின்று காணவாவது பெறலாமோ என்று என் கண்கள் துடிக்கிறபடி கண்டாயே‘ என்றான், அங்ஙனம் சொல்லவே அவனது செய்யவாயையும் செந்தாமரைக் கண்களையும் உற்று நோக்கினாள பராங்குசநாயகி. அவை பரம விலக்ஷணங்களாயிருந்தன. கீழ்நாட்களில் காணாத அழகு காணக்கிடைத்தது. அதுநோக்கி “நின் செய்யவாய் இருங்கனியும் கண்களும் விபரீதமிந்நாள்“ என்கிறாள். விபரீதம் என்பதற்கு !மாறுபட்டுவிட்டன‘. என்றும் பொருளாகலாம். ‘விலக்ஷணமாயிருக்கின்றன‘ என்றும் பொருளாகலாம். விலக்ஷணமாயிருக்கின்றன வென்றது – பரமபோக்யமாயிருக்கினறன என்றபடி. ஊடலிலே இங்ஙனே சொல்லத் தகுதியில்லையாயினும் வடிவழகு பரவசப்படுத்திப் பேசுவித்தபடி. *****   ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின். – “உன்னுடைய திருக்கண்களினுடையவும் திருப்பவளத்தினுடையவும் அழகு இருந்தபடி என்!, கண்டும் கேட்டுமறியாத்தொருபடியான இவ்வழகு திருப்பாற்கடலிலே அம்ருதமதந ஸமயத்திலே அவதிர்ணையான பெரிய பிராட்டியோடு அன்று கலந்த கல்வியாலும் பிறந்ததில்லை, இப்படி பெரிய பிராட்டியிற்காட்டிலும் உனக்கு அபிமதைகளாய் உன்னை புஜிக்கப் பிறந்தவர்கள் ஆரோ வென்கிறாள்“ என்று.

முன்னிரண்டடிகள் எம்பெருமானை நோக்கி வ்யக்தமாகச் சொன்ன பாசுரமென்றும் பின்னிரண்ட்டிகள் அப்படி வெளிப்படாகச் சொல்லுகையன்றிக்கே ஹ்ருதயத்தினுள்ளே நினைத்துக்கொண்ட பாசுரமென்றும் கொள்ளத்தகும். இங்ஙனேயான வாயழகும் கண்ணழகும் பொலிந்த இப்பெருமானுடைய பரிபூர்ணாநுபவம் நமக்குக் கிடைக்கவில்லையே, இது கிடைக்கப்பெறும் புண்ணியவதிகள் யாவரோ! என்று உள்ளுக்குள்ளே விஸ்யப்படுகின்றபடி.

மாயிருங்கடலைக் கடைந்த பொருமானாலே என்றது – பெரியபிராட்டியாரைப் பெறுதற்கு இவன் கடல் கடைதலாகிற மிகப்பரிய காரியம் செய்தானாமே, அவளும் ஒரு பாக்யவதியே என்ற கருத்தினாலாம்.

English Translation

Go away, Sire! And tell your stories to innocent ones. Your coral lips and lotus eyes are a curse to us. Wonder who that damsel with bamboo-slender arms will be, to win the fortune of your grace today?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top