(3365)

(3365)

ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன், பேய்முலை

சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்,

பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்,

தீர்ந்தவென் தோழீ என்செய்யு மூரவர் கவ்வையே?

 

பதவுரை

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்

(நலிவதற்காக) ஊர்ந்து வந்த சகடத்தைப் பொடிபடுத்தின திருவடிகளையுடையவனும்

பேய்முலை

பூதனையின் முலையை

சார்ந்து

மனம் பொருந்தி

சுவைத்த

பசையறவுண்ட

செம் வாயன்

செவ்விய வாயையுடையவனுமான எம்பிரான் (அந்தச் செயல்களாலே)

என்னை நிறைகொண்டான்

என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியை அபஹரித்தான்;

தீர்ந்த என் தோழீ

எனக்கு நன்மை தேடுகையிலே) அற்றுத் தீர்ந்திருக்கின்ற என் தோழியே!

போர்ந்தும பெயர்ந்தும்

எந்தவிதத்திலும்

அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்

அவ்வெம் பெருமான் விஷயமான பேச்சன்றி வேறொரு பேச்சு உடையேனல்லேன்;

ஊரவர் கவ்வை என்செய்யும்

ஊரார் அலர் தூற்றுதல் என்னை என்ன பண்ணும்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஊர்நச்த சகடம்) எம்பெருமானுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களிலே நெஞ்சைப் பறிகொடுத்த வெள்ளை ஊராருடைய பழிமொழி என்ன செய்யுமென்கிறாள். கண்ணபிரான் சகடாஸுரநிரஸனம் பண்ணினதும் பூதநாஸ்தந்யபானம் பண்ணி அவளை மாய்த்ததும் கம்ஸன் வரவிட்ட விரோதிவர்க்கங்களை மாய்த்தபடி என்று தோழி நினைத்திருந்தாள். இப்போது பராங்குசநாயகி சொல்லுகிறாள்- சகடாஸுரபஞ்ஜநாதிகள் என்னைத் தன் பக்கலிலே ஈடுபடுத்திக் கொள்ளுகைக்காகச் செய்தனவேயன்றி வேறில்லையென்கிறாள்.

பருவம் நிரம்பியபின்பு செய்திருந்தானாகில் இங்ஙனே சொன்னாலும் சொல்லலாம்; மிக்க இளம்பிராயத்திலே செய்த இவை இவளை யீடுபடுத்துகைக்கு உடலாவது எங்ஙனேயென்று நம்பிள்ளை சங்கித்துக்கொண்டு ஸமாதானமருளிச் செய்யுமழகு பாரீர் – “இவளுக்குத் தன் பக்கல் ப்ராவண்யத்தை விளைக்கை அவனுக்கு ஸந்தாப்யுக்தமென்கை” என்று

நந்தகோப கிருஹகத்தில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே கண்ணனைத் தொட்டிலிலிட்டுக் கண் வளர்த்தி யசோதை யமுனை நீராடப்போனான்; கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்து ஸ்ரீகிருஷ்ண சிசுவின் மேலே விழுந்து கொல்ல முயன்றதை அறிந்த அப்பகவான், பாலுக்கு அழுகிறபாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கியுதைத்தருள, அவ்வுதை பட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்தது என்பது ஊர்ந்த சகடமுதைத்த வரலாறு.

க்ருஷ்ண சிசுவை நாடி யுணர்ந்துகொல்லும்பொருட்டுக் கஞ்சன் ஏவின அசுரர்களின் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக்கொடுத்துக் கொல்ல முயல, பகவானாகிய குழந்தை அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலூண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் இறக்கும்படி செய்தருளினனென்பது பேய்முலை சுவைத்தவராõறு.

“பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்” என்றவிடத்து செவ்வாயன் என்ற பதஸ்வாரஸ்பத்தை நோக்கி நம்பிள்ளை யருளிச் செய்கிறார்- “பிள்ளை நன் முலையுண்ணப்புக்கால்- தாய்மார் முலைக்கீழே முழுகினவாறே பால்சுரக்கும்; பிள்ளைப் பாலையுண்டு உபகார ஸ்ம்ருதியாலே முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ணுமாயிற்று. அப்படியே அவளும் (பூதனையும்) தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக்கீழே முழுசிமுலையுண்டு உபகாரஸ்மிகுதியாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற ஸ்மிதம் பண்ணியாயிற்று முலையுண்டது.”

என்னை நிறை கொண்டான் = “ஒரு வ்யாபாரத்தாலே இரண்டு ஸ்த்ரீவதம் பண்ணினான். தன்னையாசைப்பட்டாரில் உகவாதார்க்கே நன்றாயிற்று. அவளை  நற்கொலையாகக் கொன்றான்; என்னை உயிர்க்கொலையாகக் கொல்லா நின்றான்.” என்பது மிக ஆச்சரியமான நம்பிள்ளையீடு.

இப்படி உயிர்க்கொலையாகக் கொல்லும் விஷயத்திலே மேன்மேலும் வாஸநை பண்ணிப்போருவானேன்? அவ்விஷயத்தைவிட்டு வேறு விஷயங்களிலே  போது நோக்கிக் களிக்கலாகாதோ வென்ன, போந்தும் பெயர்த்தும் அவனோடன்றி ஓர் சொல்லிலேன் என்கிறாள். போயும் வந்தும் அவன் திறமான சொற்களால்லது போது போக்குகைக்கு வேறு சொல்லுடையேனல்லேன்.

இவள் இப்படிச் சொன்னவாறே சிஷேதிக்கிற தோழிதானும் மிக உலகந்தான். ‘நாம் இவளை அவனோடே சேர்ப்பதற்குப் பட்டபாடுஸாமான்யமன்றோ; அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயன்றாலும் மறவாதபடி இவள் ஆழ அவகாஹிப்பதே!” என்று உகந்தாள். அவ்வுகப்பைக் கண்ட பராங்குச நாயகி தீர்ந்த என் தோழி! என்று கொண்டாடி அணைக்கிறாள். தாய்மார் சொல்லும் ஹிருதவசனத்தையே நீயும் சொல்லுகையாலே நீயும் அவர்களைப்போலே சிஷேதிப்பவள் என்று வெறுத்திருந்தேன்; உன் நினைவு இதுவாயிருந்ததே! இப்படி வா- என்று உகந்து கூறுகின்றாள் போலும். பிராட்டி, திருவடியை இராவணன் வரவிட்ட ஆள் என்று சங்கித்திருந்தது தவிர்ந்து ‘பெருமாள் பக்கலில் நின்றம் வந்தவள்’ என்றறிந்த பின்பு அவனைக் கொண்டாடினாப்போல இவளும் கொண்டாடுகிறபடி.

 

English Translation

Sister! The red-lipped Lord who sucked the life out of Putana’s breasts and smote the laden cart with his foot has possessed me.  Night and day I prate of nothing save him. What can the world’s gossip do to us?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top