(3151)

(3151)

ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,

வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்

தாயன், நாண்மல ராமடித் தாமரை,

வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே.

 

பதவுரை

திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம்

திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற

ஓயும் மூப்பு

ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன

பிறப்பு

பிறவியென்ன

இறப்பு

மரணமென்ன

அடி

திருவடிகளை

வாய் உள்ளும்

வாக்கினுள்ளும்

மனத்துள்ளும்

நெஞ்சினுள்ளும்

வைப்பார்கட்கு

வைத்துக் கொள்பவர்களுக்கு

பிணி

வியாதியென்ன (ஆகிய இவை)

வீயும் ஆறு

தொலையும் வகை

செய்வான்

செய்தருள்வன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  திருமலையொன்றே நம் வினை ஓய்வதற்குப் போதுமென்கிறார் கீழ்; அந்தத் திருமலை தானம் பூர்த்தியாகவேணுமென்பதில்லை, அதில் ஏகதேசமே போதுமென்கிறாரிப்பாட்டில். (இங்க ஏகதேசமென்கிற வார்த்தையினால் நினைக்கிறது திருமலையப்பனை. திருமலையில் ஸம்பந்தத்தைப் பற்றியாயிற்று ஸ்ரீநிவாஸனும் உத்தேச்யனாவது திருமங்கையாழ்வார் “வடமாமலையுச்சியை” என்ற ஸ்ரீநிவாஸனைத் திருமலையின் ஏகதேசமாகவே கூறினார்.

பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயன் நாண்மலரா மடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு மூப்புப் பிறப்பு இறப்பு ஓயும் என்றும் அந்வயிப்பது. வியாதி முதலிய கருமபலன்களைத் தொலைத்தருள்வதற்காகத் திருமலையிலே எழுந்தருளி நிற்கிற பெருமானுடைய, ‘நாட் பூமலர்ந்தது’ என்னலாம்படி ஸுகுமாரமான திருவடித் தாமரைகளை நெஞ்சினால் நினைத்து வாயினால் துதிக்குமவர்களுக்கு ஜன்மஜராமரணாதிகள் ஓயும் என்கை.

ஓயும் என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் ‘ஓயும் மூப்பு- ஓய்வை விளைவிக்கின்ற மூப்பு’ என்று மூப்புக்கு அடைமொழியாக்கி யுரைப்பர் பன்னீராயிரவுரைகாரர்.  திருவேங்கடத் தாயனானனவன்  (தனது) நாண்டலரடித் தாமரையை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு, ஒயுமூப்புப் பிறப்பிறப்புப் பிணிகளை வீயுமாறு செய்வான் – என்கிற அந்வயக்ரமம் இவர்க்க விவக்ஷிதம்.

இப்பாசுரத்தின் ஆறாயிரப்படி:-  “திருவேங்கடமுடையானன்றோ ப்ராப்யம், திருமலையே ப்ராப்பயமென்ற சொல்லுவானென்னில், திருவேங்கடமுடையானுடைய ப்ராப்யத்வமும் திருமலையோடுள்ள ஸம்பந்தத்தாலே வந்ததாதலால் திருமலையே ப்ராப்யமென்கிறார்” என்பதாம். நம் ஆசிரியர்கள் பாசுரங்கில் மிகவும் ஆழ்ந்து பொருள் கண்டுபிடிக்கும் சதிர் வாசாமகோசரம்.

 

English Translation

those who remember the lotus feet of the Cowherd Lord of Venkatam in every act and word shall end their four-fold miseries.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top