(3116)
நலமெனநினைமின் நரகழுந்தாதே *
நிலமுனமிடத்தான் நீடுறைகோயில் *
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை *
வலமுறையெய்தி மருவுதல்வலமே.
பதவுரை
நரகழுந்தாதே | – | நரகத்தில் அழுந்த நினையாமல் |
நலம் எனநினைமின் | – | (இவ்வுபதேசத்தை) நன்மை யென்று நெஞ்சிற் கொள்ளுங்கள்; (அதாவது) |
முனம் | – | முற்காலத்தில் |
நிலம் | – | பூமியை |
இடந்தான் | – | வராஹ ரூபியாகி இடந்தெடுத்துவந்த பெருமான் |
கோயில் | – | நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதியாய், |
மலம் அறு மதி சேர் | – | களங்கமற்ற சந்திரன் சேருமிடமான |
மாலிருஞ் சோலை | – | திருமலையை |
வலம் முறை எய்தி | – | அநுகூலமானமுறையிலே கிட்டி |
மருவுதலே | – | பொருந்துவதே |
வலம் | – | உறுதியானது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
மலமறுமதிசேர் என்றதற்கு இரண்டு வகையான நிர்வாஹ முண்டு, * மதிதவழ்கின்ற மாலிருஞ்சோலை யாகையாலே திருமலை சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கையாலே. சந்திரன் போகும்போது, சிகரங்களிலே தேய்ப்புண்டு சாணையிலிட்டாற்போலே களங்கமற்றிருக்கும்படியைச் சொல்லுகிற தென்று ஒரு நிர்வாஹம் (மதி – சந்திரன்) இனி, வடமொழியாக்க்கொண்டால் மதியென்று புத்திக்குப்பெயர், நிர்மலமான புத்தியை (பக்தர்கட்கு)ச் சேர்விக்கின்ற திருமலை என்பது பிள்ளானுடைய நிர்வாஹம். புத்திக்கு மலமாவது – ஸந்தேஹம், ப்ரமம், மறப்பு முதலியனவாம். திருமலையைத் தொழுவார்க்கு மயர்வற்ற மதியுண்டாகுமென்றபடி.
மலமறுமதிசேர் என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறலாம். ஆழ்வான் ஸுந்தரபதஹுஸ்வத்தில் – “யதீயசிகராகதாம் சசிகலாம் து சாகாம்ருகா, திரிக்ஷ்ய ஹர சேகரீ பவநம் ஆம்ருசந்தஸ் த்த, ஸ்பருசந்தி த ஹி வேதாந்தரஸமாச்ரிதேதி ஸ்புடம்“ என்கிறார். திருமலையினுச்சியில் உள்ள குரங்குகள், அங்கே சந்திரன் கையால் எட்டிப்பிடிக்கக் கூடியவனாக இருந்தும், அவன் ருத்ரசிரஸ்ஸம்பந்தமாகிற தோஷம் படைத்தவனென்பது பற்றி, அவனைத் தொடுவது மில்லையென்று, ஒரு அதிசயோக்தி கூறினாராகிறார். அப்படிப்பட்ட தோஷத்தைச் சந்திரன் போக்கிக் கொள்வதற்காக வந்து சேருமிடமான திருமலை – என்னலாம்.
வலமுறையெய்தி – ‘அநுகூலமான முறையிலே கிட்டி“ என்பதுஈடு. ‘முறைவலம் எய்தி‘ என மாற்றி, “சேஷசேஷிபாவமாகிற முறைப்பாடுள்ள ஆநுகூல்யத்தைப் பெற்று“ என்னுரைத்தார் வாதிகேஸரி.
English Translation
Think well and do not sink into hell. The lord who lifted the earth from water lives in the temple of maliumsoali in peace. Worshipping him is the only good.
