(2659)

(2659)

புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்

செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி

யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,

ஊன்பருகு நேமியாய்! உள்ளு.

 

பதவுரை

ஊன் பருகு நேமியாய்

(அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,

புவியும்

இவ்வுலகமும்

இரு விசும்பும்

விசாலமான மேலுலகமும்

என் உள்ளாய்

என் பக்கல் இரா நின்றாய்:

யான் பெரியன்

நானே பெரியவன்;

நின் அகத்த

உன்னிடத்தேயுள்ளன;

நீ

உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ

என் செவியின் வழி புகுந்து

என் காது வழியே புகுந்து

அவிவு இன்றி

ஒருநாளும் விட்டு நீங்காமல்

நீ வெரியை என்பதனை யார் அறிவார்

நீ பெரியனென்று அறிவாருண்டோ?

உள்ளு

இதை நீயே ஆலோசித்துப் பார்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (புவியுமிருவிசும்பும்.) கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான் “நீர் ஏனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமோ? உருக்காட்டாதிருக்கிறோமோ? ‘கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல, நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலேபேசினதும் மறந்தொழிந்ததோ? உகந்தருளினவிடங்களெல்லாவற்றையும் விட்டிட்டு உம்முடைய நெஞ்சிலேயன்றோ நாம் நித்யஸந்நிதிபண்ணியிருக்கிறது” என்றருளிச்செய்ய, ஆழ்வார் அது கேட்டுத்தெறி ஆநந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானோடே போராடுகிறாரிதில்.

எம்பெருமானே! கீழுலகங்களும் மேலுகங்களுமாகிய வெல்லாம் உன்னிடத்தேயுள்ளன; அப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிராநின்ற நீ என் காது வழியாக என்னுள்ளே புகுந்து பேராமலிருக்கின்றாய்; ஆனாலும் ‘ப்ரஹ்மம்’ என்ற உனக்குப் பேராயிருக்கிறது. எது எல்லாவற்றிற்காட்டிலும் பெரிதான வஸ்துவோ அது ப்ரஹ்மமென்னத்தகும்; விபூதிகளைமாத்திரம் வஹித்துக்கொண்டிருக்கிற நீ பெரியவனா? அல்லது, விபூதிகளை வஹிகிறவுன்னையுங்கூடச்சேர்த்து வஹிக்கிற நான் பெரியவனா? என்று ஆராயவேண்டாவோ? இதனை நன்கு ஆராய்ந்தால் நானே மிகப் பெரியவனானவேன்; என்னுள்ளே ஒரு மூலையிலே அடங்கிக் கிடக்கவல்ல உன்னைப் பெரியவனென்று சொல்ல வொண்ணுமோ? இதனை நீயே ஆராய்ந்து பார்- என்கிறார்.

“யான் பெரியன்” என்று தனி வாக்கியமாகவும் “நீ பெரியையென்பதனை யாரறிவார்” என்று தனிவாக்கியமாகவும் கொண்டு உரைக்கப்பட்டது. இங்ஙனன்றியே இரண்டையும் சேர்த்து ஏக வாக்கியமாகவே உரைத்தலுமொக்கும். ‘நான் பெரியவனோ நீ பெரியவனோ, இதைப் பிறரால் அறியப்போகாது; நீ தான் ஆராய்ந்து அறியவேணும்’ என்கை.

 

English Translation

O Lord wielding a discus that minces flesh!  The Earth-world and the sky-world are within you.  You have entered into me through my ears, quietly without my knowing.  Am I bigger than you or are you bigger than me? Who knows this? Tell me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top