(2633)

(2633)

கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்

வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்

காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்

பேருருவென் றெம்மைப் பிரிந்து.

 

பதவுரை

கொண்டால் தான்

மேகங்களையும்

மால் வரை தான்

பெரிய மலைகளையும்

மா கடல்தான்

கருங்கடலையும்

மற்று கார் உருவம்தான்

மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்

கண்ட நாள்

பார்க்குங் காலத்தில்

காண்தோறும்

பார்க்கும்போதெல்லாம்

கூர் இருள் தான்

செறிந்த இருளையும்

வண்டு அறா பூவைதான்

(தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்

நெஞ்சு

என் மனமானது

கண்ணனார் பேர் உரு என்று

இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி

எம்மை பிரிந்து

என்னைவிட்டு நீங்கி

ஓடும்

அங்கே ஓடும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கொண்டல்தான்.) இங்கிருந்து குணாநுபவமே பண்ணிக் கொண்டிருந்தாலும் ச்ரமஹரமான திவ்ய வடிவையும் ஸேவிக்க வேணுமென்று ஆசையுண்டாகுமே; அவ்வாசையினால் தாம் அலமருகின்றபடியைப் பேசுகிறாரிதில்.

கொண்டல்தான் = (“கருவுடை மேகங்கள் கண்டாலுன்னைக் கண்டா லொக்குங் கண்கள்” (பெரியாழ்வார் திருமொழி 2-7-2.) என்றும்,  “ஒக்குமம்மானுருவமென்று உள்ளங்குழைத்து நாணாளும் தொக்க மேகப்பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்”                   (திருவாய்மொழி 8-5-6) என்றும் சொல்லுகிறபடியே மேகங்களைக் காணும்போது கண்ஓடுகின்றது. மால்வரைதான் =  “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலேவாவென்று கூவும்” (திருவாய்மொழி 4-4-4)  என்கிறவரிறே இவ்வாழ்வார். பெரிய மலையைப் பார்க்கும்போது பெருமாளைக் கண்டாற்போலே ஓடுவர்.

மாகடல்தான் =கடல்வண்ண னென்றே எம்பெருமாலுக்குத் திருநாமமிறே. கடலைக்கண்டால் எம்பெருமானைக் கண்டாற்போலே விரும்பி ஓடுவர்.

கூரிருள்தான் = “தானோரிருளன்ன மாமேனி எம்மிறையார்” என்று கீழுமருளிச் செய்தாரிறே. “இருள் விரிசோதிப்பெருமான்” என்றார் திருவிருத்தத்திலும். இருளைக் கண்டால் எம்பெருமானைக் கண்டாற்போலே மகிழ்வர்.

வண்டறாப்பூவைதான் = பூவைப்பூவாவது காயம்பூவில் ஒருவகைப் பூ; “பூவைப்பூவண்ணா வென்னும்” ‘காயாம்பூவண்ணங் கொண்டாய்” என்று எம்பெருமானுடைய நிறத்திற்குப் பூவைப்பூவை ஒப்புச் சொல்வதுண்டிறே. மற்றுத்தான் என்றது- எம் பெருமான் திருநிறத்திற்குப் போலியாகக் கூடிய கருநெய்தற்பூ குயில், மயில், கருவிளை, களங்கனி முதலிய பலவற்றைச் சொன்னபடி. “பைம்பொழில்வாழ் குயில்காள் மயில்காள் ஒண்கருவிளைகாள், வம்பக்களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்கள், ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலை நின்ற, எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கென் செய்வதே?” என்ற நாச்சியார் திருமொழிப் (9-4) பாசுரங்காண்க. ஆகிய இப்பொருள்களைக் காணும்போதெல்லராம் கண்ணபிரானுடைய திருவுருவையே ஸாக்ஷாத்தாகக் கண்டதாக நினைத்து என்னுடைய நெஞ்சு என்னைப் பிரித்து அவ்வப்பொருள்களினருகே ஓடுகின்றது என்றாராயிற்று. நெஞ்சானது தம்மைப் பிரிந்து ஓடுவதாகச் சொல்லுகிற விது ஒருவகைக் கவிமரபு. “கண்ட நாள் நெஞ்சோடும்” என்றதே போதுமாயிருக்க, காண்தோறு என்றது ஏதுக்கென்னில்; ஒரு நாளிரண்டுநாள் இப்படி பார்த்துவிட்டு ‘இதுப்ரமம்’ என்று பிறகு வெறுமனிருப்பதில்லை; காருருவங்களைக் காண்கிற போதெல்லாம் இந்த ப்ரமம் உண்டாகியே தீரும் என்பதற்காக.

 

English Translation

Whenever I see the dark clouds, of the dark mountains, or the deep ocean, or the dark night, or the bee-humming kaya flowers, or anything else of dark hue, my heart leaves me and files out, saying, “This is Krishna’s glorious form”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top