(2600)
சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.
பதவுரை
|
பேராளா |
– |
‘மஹாநுபாவனான பெருமானே! |
|
சீரால் பிறந்து சிறப்பால் வளராது |
– |
சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல் |
|
பேர் வாமன் ஆகாக்கால் |
– |
திருநாமம் வ மானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால் |
|
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி |
– |
உன்னாலே மார்பால் அணையப்பட்டும் வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப்பூமியானது. |
|
நீர் ஏற்பு அரிதே |
– |
தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?’ |
|
யாம் அறிய |
– |
இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி |
|
நீ சூழ்ந்து சொல்லு |
– |
நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (சீராற் பிறந்து.) “சீர் ஓதப் பீடழிவாம் பேச்சில்லை” என்றாரே கீழ்ப்பாட்டில்; அப்படியே அவனுடைய திருக்குணங்களை ஓதத் தொடங்குகிறார்; ஸ்ரீவாமநாவதார குணத்திலீடுபட்டு அருளிச்செய்யும் பாசுரம் இது.
எல்லா விதங்களாலும் உனக்கே அஸாதாரணமாக உரிமைப்பட்டதான இப்பூமியை நீ மாவலியிடமிருந்து பெற வேண்டில், அதற்காக யாசகனாக வரவேண்டுமோ? எல்லோரும் கண்டு ஏசும்படியான குள்ள வடிவமெடுத்துக்கொள்ள வேண்டுமோ? குள்ளனென்றே திருநாமமும் தரிக்க வேண்டுமோ? ஸ்ரீராமனாகப் பிறந்து வளர்ந்த காலத்தும் ஸ்ரீகிருஷ்ணனாகப் பிறந்து வளர்ந்த காலத்தும் எவ்வளவோ சீராகப் பிறந்து எவ்வளவோ சிறப்பாக வளர்ந்தவனன்றோ நீ; அப்படியே பிறந்து வளராமலும், ஸ்ரீராமன் ஸ்ரீக்ருஷ்ணன் என்றாற்போலே சிறந்த திருநாமங்களை இட்டுக் கொள்ளாமலும், சீரும் சிறப்புமின்றிப் பிறந்து வளர்ந்து பரிஹாஸத்துக்கு ஆஸ்பதமான வாமநனென்ற நாமத்தையும் வஹித்து நின்றது. ஏதுக்கு? இப்படியானால் நான் பூமியை ஸம்பாதித்துக் கொள்ள முடியுமென்றும் இல்லாவிட்டால் முடியாதென்றும் திருவுள்ளமோ? என்கிறார்.
இந்தப் பூமி உனக்கே உரிமைப்பட்டதென்பதை மார்பாரப் புல்கி நீ உண்டுமிழ்ந்த என்ற விசேஷணத்தால் விளங்குகின்றார். மார்பரப் புல்கி என்றது- பூமிப்பிராட்டி திவ்யமஹிஷியாயிருப்பது பற்றியென்க. பண்டு அண்டபித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியை, வராஹாவதாரம் பணிக் கொட்டாற்குத்தி ஒட்டுவிடுவித்தெடுத்தபோது மார்பாரப் புல்கி யெடுத்தானென்னவுமாம்.
இப்பாசுரத்தின் தாம்பரியத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ஸுந்தரபஹுஸ்தவத்தில் அருளிச் செய்துள்ள ச்லோகம் ***- (க்ஷிதிரியம் ஜநிஸம்ஹருதி பாலகை: நிகிரணோத்கிரணோத்தரனை ரபி- வநகிரீச! தவைவ ஸதீ கதம் வரத வாமந! பிக்ஷணமர் ஹதி?) என்பதாம்; இப்பூமியைப் படைப்பவனும் நீ; துடைப்பவனும் நீ; காப்பவனும் நீ; பிரளயத்தில் திருவயிற்றில் வைத்து நோக்குபவனும் நீ; பிறகு வெளிநாடுகாணப் புறப்பட விடுமவனும் நீ; ஆகையாலே உனக்கே உடைமையா யிராநின்ற இந்தப் பூமியை நீ பெற வேண்டிப் பிச்சை யெடுத்தது எங்ஙனே? என்று திருமாலிருஞ்சோலையழகரை நோக்கி விண்ணப்பஞ் செய்த ச்லோகம் இது.
அதிமாநுஷஸ்தவத்திலும் இங்ஙனே ஒரு ச்லோக முண்டு; அதாவது- ***- = த்வந்நிர்மிதா ஜடாகாச தவ த்ரிலோகீ கிம் பிக்ஷணாதியம்ருமே பவதா துராபா? மத்யே ததாது நவிசக்ரமிஷேஜகச் சேத் த்வத்விக்ரமை: கதமிவ ச்ருதி ரஞ்சி தாஸ்யாத்” என்பதாம். கீழ் எடுத்துக் காட்டிய ஸுந்தரபாஹு ஸ்தவச்லோகத்தின் பொருளை இந்த ச்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அடக்கி, உத்தரார்த்தத்தால் அதற்கு ஸமாதாநமருளிச் செய்கிறார். குள்ளவடிவைக் கொண்டு முதலில் யாசித்துப் பிறகு பெரிய வடிவெடுத்து த்ரிவிக்ரமனாக நீ வளர்ந்திராவிடில் உன்னடைய விக்ரமங்களாலே வேதம் எப்படி அலங்கரிக்கப்படும்; ***- த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய” என்றும் ***- “த்ரிர் தேவ; ப்ருதி வீமேஷ ஏதாம்” என்றும் உலகளந்த சரிகையைப் பேசி வேதம் புனிதமாவதற்காகவே நீ வாமநாவதாரம் செய்வதேயன்றி, வேறு வழியால் பூமியை மாவலியிடத்தில் நின்றும் மீட்டுக்கொள்ள முடியாமல் செய்தாயல்லை; பெரும்பாலும் பகவத் பக்தர்களுக்கு உபயோகமில்லாத விஷயங்களையே (யஜ்ஞயாகம் முதலிய காமபகருமங்களையே) விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டு போகிற வேதத்தில் இந்த பவித்திரமான சரித்திரத்தைப் பற்றின பேச்சு வருவதற்காகவே நீ வாமனனானாய் போலும் என்கை. வேதத்தில் த்ரிவிக்ரமாவதாரத்தைப் பற்றிச் சொல்லிற்றேயொழிய வாமாவதாரத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே; வாமநனாகப் பிறந்து பிச்சை யெடுப்பானேன் என்ற கேள்விக்கு இது எங்ஙனே ஸமாதாநமாகுமென்னில்; . “நீளவான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண், தாளாலளவிட்ட” ( பெரிய திருமொழி 11-7-2) என்ற திருமங்கையாழ்வாரருளிச் செயலில் “நீள்வான் குறுளுருவாய்” என்று- த்ரிவிக்ரமனாக நீள்வதற்காகவே குறளுருவெடுத்ததாகச் சொல்லுகையாலே வாமாநாவதாரம் திர்விக்ரமாவாதாரத்திற்கு சேஷ பூதமாயிற்றாதலால் இது ஸமாதானமாகக் குறையில்லையென்க. “பேர்வாமனா காக்கால்… பூமிநீரேற்பரிதே?” என்று இங்கு எம்பெருமானை நோக்கி ஆழ்வார்கேட்ட கேள்விக்கே கூறத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவத்தில் மேல் விவரித்தவண்ணம் ஸமாதநமருளிச் செய்தாரென்றுணர்க.
சீரால்பிறந்து சிறப்பால்வளராது = சீர் என்றாலும் சிறப்பு என்றாலும் பொருள் ஒன்றே. “சீரால் சிறப்பால் பிறந்து வளராது” என்று அந்வயித்து, மிக்க சிறப்புடனே பிறந்து வளராமல் எனப்பொருள் கொள்க. வளராது என்றவிடத்துள்ள எதிர்மறை, பிறந்து என்றவிடத்தும் கருதத்தக்கது; பிறவாமலும் வளராமலும் என்றவாறு. “பிறவாமலும் வளராமலும் பேர்வாமனாகக்கால்” என்றால் கருத்து ஒட்டிவரவில்லையே என்று சிலர் மயங்குவர்; ‘சிறப்பால் பிறவாமலும் வளராமலும் வாமநனாக ஆனாயே, அப்படி ஆகாமற்போல்’ என்று விரித்துக் கொள்ள வேண்டுகையாலே பொருந்தாமை யொன்றுமில்லையென்க.
பேர்வாமனாகாக்கால் = ‘வாமநன்’ எனச் சிதைந்தது. வாமநனென்று பேரிட்டுக் கொண்டு குள்ளனாகாவிடில் என்றபடி.பேர் என்பதற்குத் திருநாமமென்று பொருள் கொள்ளாமல் ‘பெரிய’ என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். பெரிய வாமனனென்றது- இவனுக்கு மேற்பட்ட குள்ளனில்லையென்னும்படியான ஒப்பற்ற குள்ளன் என்றபடி.
பேராளா!= பெருமை பொருந்தியவனே! என்றும், பல திருநாமங்களையுடையவனே! என்றும் பொருள்படும். வாமனனென்று பேரிட்டுக்கொண்டது உன் பெருமைக்குத் தகுமோ? என்றும், பேரிட்டுக்கொள்ளப் பல திருநாமங்களிருக்கவும் இந்தத் திருநாமந்தானா உனக்கு அகப்பட்டது? என்றும் கேட்கிறார் போலும்.
English Translation
OO Benevolent Lord! Even if you had not taken an exalted birth, grown up in opulence and appeared as a bachelor boy come for a gift, would it have been difficult for you to take the Earth? –which you did embrace to your chest, swallow and remake on earlier occasions? Pray tell me that I may be convinced.
