(2589)

(2589)

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ

மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ!

மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த

நீயம்மா! காட்டும் நெறி.

 

பதவுரை

மாய

மாயவனே!

அம்மா

ஸ்வாமியே!

பேசில்

உன்னால் நான் பெய்ய உபகாரங்களைப் பேசப் புகுந்தால்

பெற்ற தாய் நீயே

பெற்றதாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;

பிறப்பித்த தந்தை நீ

உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;

மற்றையர் ஆவாரும் நீ

மற்றும் ஆசாரியரும் நீயே;

மா மாயவளை மாய

மஹத்தான வஞ்சனையையுடைனான பூதனையை முடிப்பதற்காக

முலை

(அவளது விஷந்தடவின) முலையை

வாய் வைத்த நீ

அமுது செய்த நீ

காட்டும் நெறி

எனக்குக் காட்டின வழிகள்

எற்றே ஓ

என்ன ஆசாரியமானவை ( என்று உருகுகிறார்.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பெற்றதாய் நீயே) எம்பெருமானை நினைப்பதற்கும் துதிப்பதற்கும் நான் யோக்யதையற்றவன் என்று பின்வாங்கப்  பார்த்த அடியேனை அந்த எண்ணம் நீங்கி ப்ரவர்த்திக்கும்படி செய்தருளிற்றே; இப்படி மஹோபகாரம் செய்கிற மஹாநுபாவர் தேவரீர் தவிர வேறு யாருளரெனக்கு? தாயும் தகப்பனும் ஆசாரியனுமாகிற உபகாரர்களை யாவரும் அடியேனுக்கு தேவரீரேயாயிற்று! என்று எம்பெருமானை நோக்கி உருக்கமாகப் பேசுகிறார்.

பேசில் – நீ பண்ணின உபகாரத்தை வாய்விட்டுப் பேசத் தொடங்கினால், நீயே பெற்றதாய், நீயே பிறப்பித்த தந்தை; நீயே மற்றையாராவரும்- வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெறுகிற தாயும், பிறப்பிக்குமவனான தகப்பனும், ஆத்மாவுக்கு உற்ற நன்மைகளைச் செய்து விலக்ஷணஜன்மத்தைக் கொடுக்கிற ஆசார்யனும் ஆகிய ப்ரஸித்தர்களான உபகாரர்கள் மூவரும் அடியேனுக்கு தேவரீர்தாம். அயோக்யனென்று பின்வாங்கி தேவரீரை அடியேன் போய்விடும்; அது போகாதபடி காப்பாற்றியருளின உபகாரகர் தேவரீரேயாதலால், ஸத்தைக்கு ஹேது பூதர்களான தாய் தந்தை ஆசாரியர்கள் மூவரும் தேவரீரோயாயிற்றன்றோ என் கை.

மூன்றாமடியின் முதலிலுள்ள மாய என்பது ஸம்போதநம் (விளி); உன்னுடைய ஆச்சரிய சேஷ்டிதத்தை என்ன சொல்லுவேனப்பா! என்று கருத்து. “புகழ்வோம் பழிப்போம்” என்ற கொண்டிருந்த எண்ணத்தைத் தவிர்த்து “என்னில் மிகுபுகழார் யாவரே” என்னும்படி பண்ணினவிது என்ன ஆச்சரியம்! என்கிறார் போலும்.

மாமாயவளை மாய முலைவாய்வைத்த என்று பூதனையின் முலையைச் சுவைத்த வ்ருத்தாந்தத்தை எடுத்துக் காட்டியது- பிள்ளையாயிருந்து முலையுண்சிற பாவனையிலே அப்பூதனையின் உயிரை முடித்தது எப்படி ஆச்சரியமோ அப்படியே காண் இதுவும் ஒரு ஆச்சரியம் என்றபடி. உன்னைக் கொல்வதாக வந்த அவளை நீ கொன்று உலகுக்கு ஒருயிரான உன்னை ரக்ஷித்தத் தந்த உபகாரம் போலே இதுவும் ஒரு உபகாரங்காண் என்றதாகவுமாம்.

மாயவள் மாய முலைவாய்வைத்த வரலாறு:- கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்கிறானென்பதையறிந்து அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும் பொருட்டுப் பல அசரர்களை ஏவுகிற கிரமத்திலே அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கண்ணனாகிய குõந்தையை எடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானாக குழந்தை அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துக் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் சீங்கி விழந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

நீகாட்டும் நெறி எற்றேயோ? = அயோக்கிதாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கப் பார்த்த வென்னை வசப்படுத்தி உன் பக்கலிலேயே அவகாஹிக்கும்படி ஒரு வழி காட்டிற்றே! இஃது என்ன ஆச்சரியம்! என்கை. எற்றே என்பது அதிசய விரக்கச் சொல்; எற்று – எத்தன்மையது!

 

English Translation

O wonder Lord! You are the child-bearing mother, you are the birth-giving father, you are all the people spoken of.  O Lord who drank the poison breast of the ogress!  How wonderful one your ways?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top