(2423)

(2423)

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,

நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்

கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,

அடிக்கமலம் இட்டேத்து மங்கு.

 

பதவுரை

சேண் உயர் வேங்கடத்தை

மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை

சென்று வணங்குமின்

சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது)

நீர்மையால்

தன் ஸ்வபாவத்தினால்

நின்று வினைகெடுக்கும்

பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்

அங்கு

அத்திருமலையில்,

கடி கமலம் நான்முகனும்

பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்

கண் மூன்றத்தானும்

முக்கண்ணனான சிவபிரானும்

என்றும்

எக்காலத்தும்

அடி

(எம்பெருமானது) திருவடிகளிலே

கமலம்

தாமரைப் புஷ்பங்களை

இட்டு

ஸமர்ப்பித்து

எத்தும்

துதித்துக்கொண்டிருப்பார்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அன்பர்கட்கு உபதேசிக்கிறார், சென்னியோங்கு தண் திருவேங்கடத்தைச் சென்று வணங்குங்கள், அந்தத் திருமலைதானே உங்கள் பாவங்களை யெல்லாம் மாற்றிவிடும், பிரமன் சிவன் முதலான தேவர்களும் தங்கள் தங்கள் அதிகாரம் பெறுவதற்காக அத்திருமலையிலே சென்று அப்பன் திருவடிகளிலே புஷ்பங்களை யிட்டிறைஞ்சித் துதியாநிற்பர். ஆகையாலே நீங்களும் அங்கே சென்று வணங்குங்கோள் என்றாராயிற்று.

சேண் உயர் – “சேண்“ என்றாலும் உயர்த்தியே பொருள், மீமிசைச் சொல். மிகவும் உயர்ந்த என்றபடி. நீர்மையால் – பாவங்களைப் போக்குவதே திருமலைக்கு ஸ்வபாவம் என்க. ‘வேங்கடம்‘ என்னும் வடசொல்லின் நிருத்தி காண்க. தன்னையடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடமெனப் பெயர் பெற்ற தென்ப. வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப்பொருள் காண்க. “வெங்கொடும் பாவங்களெல்லாம் வெந்திடச் செய்வதால் நல், மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடமலையான தென்று“ என்ற புராணச் செய்யுளுங் காண்க.

 

English Translation

The Lord stays with his devotees and ends their Karmas.  At all times the four-faced Brhama and the three-eyed Siva worship his feet with lotus.  The fall peak beckons us to go and offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top