(2381)

(2381)

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு.

 

பதவுரை

சக்கரத்தான்

திருவாழியைக் கையிலே உடையவனும்

தண் துழாய் தார் வாழ்

குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற

வரை மார்பன் தான்

மலைபோன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்

முயங்கும்

ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்

கார் ஆர்ந்த வான்

மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே

அமரும்

நிலைத்து நிற்கக் கூடியதான

மின்

மின்னல்போல

இமைக்கும்

விளங்குகின்றவளாய்

வண் தாமரை

அழகிய தாமரைப் பூப்போன்ற

நெடு

நீண்ட

கண்

திருக்கண்களை யுடையளாய்

தேன் அமரும் பூமேல்

தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான

திரு

பெரிய பிராட்டியார்

நமக்கு என்றும் சார்வு

நமக்கு எப்போதும் சரணம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் ‘எம்பெருமான் திருவடிகளே சரணம்‘ என்றார், இப்பாட்டில் ‘பிராட்டி திருவடிகளே சரணம் என்கிறார். எம்பெருமான் திருவடிகளே நேரே பற்றுவதற்கில்லையே, 1. “நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுகாக“ என்கிறபடியே ஸர்வாபராதங்களையும் பொறுப்பிக்கவல்ல பெரிய பிராட்டியார் புருஷகாரமாகவே எம்பெருமானைப் பற்ற வேண்டியிருத்தலால் அப்புருஷகாரவரணத்தை இப்பாட்டால் செய்து இப்பிரபந்தத்தையும் தலைக்கட்டுகிறார்.

“தேனமரும் பூமேல் திரு நமக்கு என்றும் சார்வு“ என்று அந்வயிப்பது. நடுவிலுள்ளவை பிராட்டிக்கு விசேஷணங்கள் “சக்கரத்தான் தண்டுழாய்த்தார்வாழ் வரைமார்பன் தான் முயங்கும்“ என்பது ஒரு விசேஷணம், “காரார்ந்த வானமரும் மின்னிமைக்கும்“ என்பது இரண்டாம் விசேஷணம், “வண் தாமரை நெடுங்கண்“ என்பது மூன்றாம் விசேஷணம்.

இவளுடைய போக்யதையைக் கண்டு ஒரு நொடிப்பொழுதும் விடமாட்டாமல் எம்பெருமான் இவளை நித்ய ஸம்ச்லேஷம் செய்திருக்கிறானென்பது முதல் விசேஷணத்தின் கருத்து. எம்பெருமானுடைய வைலக்ஷண்யம் சொல்லவேண்டில் “அகலகில்லேளிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா!“ என்று பிராட்டிமேல் விழுந்து அநுபவிப்பதாகச் சொல்லுவர்கள், பிராட்டிக்கு வைலக்ஷணயம் சொல்லவேண்டில் இவளை அவன் தான் மேல்விழுந்து அநுபவிப்பதாகச் சொல்லுங்கள் இரண்டு படியும் தகுமிறே.

நிலைநின்ற விளங்கமாட்டாத மின்னல்போன்றிராதே நிலைநின்று விளங்குவதொரு விலக்ஷணமான மின்னல்போலே பிரகாசிப்பவளென்கிறது இரண்டாம் விசேஷணம். மின்னல் மேகத்திலே ஜ்வலிக்கும், இவளும் காளமேகத் திருவுருவிலே.

வண்தாமரை நெடுங்கண் – ஸ்த்ரீகளின் கண்ணழகை வர்ணிக்குமிடத்து “குவளையங் கண்ணி“ எறும் “கருங்கண்ணி“ என்றும் “அஸிதேக்ஷணா“ என்றும் வர்ணிப்பதே பொருத்தமுடைத்தென்றும் தாமரைமலர் போன்றதாக வருணித்தல் சிறவாதென்றும், அவ்வுவமை புருஷோத்தமானது திருக்கண்ணுக்கே பொருந்துமென்றும் சிலர் சொல்லுவர், அது பொருந்தாது, ‘பத்மாக்ஷி ‘பங்கஜாக்ஷி‘ என்ற விசேஷணங்களும் மஹாகவி நிபந்தங்களில் பெரும்பாலுங் காணாநின்றோம், அன்றியும், ஸ்ரீஸூக்தத்தில் “பத்மாலயே பத்மிநி பத்மஹஸ்தே பத்மப்ரியெ பத்ம தளாயதாக்ஷி“ என்று ஓதப்பட்டிருத்தலால் அதை படியொற்றின வண்டாமரை நெடுங்கண் என்ற இவ்விசேஷணம் மிகப்பொருத்தமானதே யென்க. கண்களின் நீட்சிக்குத் தாமரையிதழ்களும் கருமைக்கு குவளைமலரும் உவமையென்றுணர்க.

ஆக, இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று தலைக்காட்டினாராயிற்று.

 

English Translation

The discus-wielding Tulasi-garland lord bears the lotus-dame Lakshmi on his wide chest, like a lightning on a dark cloud.  She has beautiful lotus eyes, and is seated on a nectar-dripping flower. She is our refuge, today and forever.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top