(2347)

(2347)

காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,

ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, – வாய்ந்த

மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,

அதுகே டவர்க்கிறுதி ஆங்கே.

 

பதவுரை

காய்ந்து

சீறி

இருளை மாற்றி

இருளைப் போக்கி

கதிர் இலகு

ஒளிவிடாநின்றுள்ள

மா மணிகள்

சிறந்த ரத்னங்கள்

ஏய்ந்த

பொருத்தியிருக்கிற

பணம்

(தன்னுடைய) படங்களினுடைய

கதிர்மேல்

ஒளிக்குமேலே (திருவனந்தாழ்வான்)

வெவ்வுயிர்ப்ப

பெருமூச்சுவிட,

வாய்ந்த

கிட்டின

மது கைடபரும்

மதுகைடபர்கள்

வயிறு உருகி மாண்டார்

குடலழுகி முடிந்து போனார்கள்

அவர்க்கு

அந்த மதுகைடபர் களைப்போலே பிரதிகூலராய் பருமவர்களுக்கு

ஆங்கு

அவ்வண்ணாமாகவே

அது இறுதி கேடு

அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தூணில் வந்து தோன்றி ப்ரஹலாத விரோதியை முடித்த வரலாற்றைக் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார். எம்பெருமான் உறங்குவான் போலிருக்கும்போதே அநாயாஸமாக எதிரிகளை முடிக்கவல்லவனாயிருக்கையில் உணர்ந்திருந்து விரோதிநிரஸநஞ் செய்த்து அவனுக்கு ஒரேற்றமோ? என்று சொல்ல நினைத்து, மதுகைடர்பர்களை எளிதாக முடித்திட்டபடியை இப்பாட்டில் அருளிச்செய்கிறார்.

மதுகைடபர்கள் மடிந்த வரலாறு பலவிதமாகச் சொல்லப்படுவதுண்டு,

கூரத்தாழ்வான் ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் அழகருடைய திருத்துடைகளை வருணிக்குங்கால், “பிஷ்டதுஷ்ட மதுகைடபகீடௌ“ என்றும், மதுகைடபஸ்ய. .. கிமுபமிமீமஹி ரங்ககுஞ்ஜரோர்வோ. என்றும் அருளிச்செய்திருக்கையாலே மதுகைடபர்கள் திருமாலின் திருத்துடையில் இறுதி முடிந்தனர் என்பது தெற்றென விளங்கும். இதிஹாஸ புராணங்கள் பலவகைப் பட்டிருத்தலால் ஆழ்வாருளிச்செய்கிற விதமாகவும் உண்டென்று கொள்க. அரவணையில் துயில் கொள்ளும் எம்பெருமானோடு போர் புரிவதாக மதுகைடபர்கள் கிட்டவந்த மாத்திரத்திலே திருவந்தாழ்வானுடைய உஷ்ணமான மூச்சுக்காற்று வீசினவளவிலே அவ்வசுரர்கள் வயிறுருகி மாண்டொழிந்தனர் என்கிறார்.

1. “மேருகிரியவுணனுடல் மிடல் கெடுத்தா யென்பர் அது, உன் வுருகிரேயறிந்ததல்லால் கோவே! நீ அறியாயால்“ என்றாற் போலே, உண்மையில் திருத்துடைகளால் இறுக்கிக் கொல்லப்பட்ட அவ்வசுரர்களை ஆதிசேஷனுடைய வெவ்வுயிர்ப்பினால் வயிறுருகி மாண்டனராகச் சொல்வதும் பொருந்தியதேயாம். அதிசய்யோக்தியில் ஒரு வகையென்க.

அது கேடவர்க்கிறுதியாங்கு 2. “என்று மென்பிள்ளைக்கு தீமை செய்வார்கள் அங்ஙனமாவார்களே“ என்று யசோதைப் பிராட்டி கைசுடுக்கி வைதாளே, அது போலக்கொள்க. கண்ணபிரான் விஷயத்தில் தீமை செய்பவர்கள் வத்ஸாஸுரனும் கபித்தாஸுரனும் பட்டபாடு படுவர்கள் என்று அவள் சாபமிட்டாற்போல் இவ்வாழ்வாரும் சாபமிடுகிறார் – எம்பெருமான் விஷயத்தில் பிராதிகூல்யமுள்ளவர்கள் மதுகைடபர்கள் பட்டபாடு படுவர்கள் என்கிறார்.

அவர்க்கு என்றது – அந்த மதுகைடபர்களைப் போன்ற விரோதிகளுக்கு என்றபடி.

 

English Translation

The destructive Madhu-Kaitabha came angrily breathing fire, to the Lord reclining on a serpent whose gem-red eyes shine like the light of day.  But that was their undoing.  They met with their ends there.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top