(2345)

(2345)

இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,

பசைந்தங் கமுது படுப்ப, – அசைந்து

கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,

கிடந்திருந்து நின்றதுவும் அங்கு.

 

பதவுரை

இசைந்த

கடைகயிறாகக் கொள்வதற்குத் தகுதியான

அரவமும்

வாஸுகிநாகமும்

(இசைந்த)

மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான

வெற்பும்

மந்தரபர்வதமும்

(இசைந்த)

தாழியாக்குவதற்குத் தகுதியான

கடலும்

கடலும் (ஆகிய இம்மூன்றையும்)

பசைந்து

ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி

அங்கு

அந்தக்கடலிலே

அமுது

அம்ருதமானது

படுப்ப

உண்டாம்படி

அசைந்து

அலைச்சல்பட்டு

கடைந்த வருத்தமோ

கடைந்த்தனா லுண்டான ஆயாஸத்தினாலோ

கச்சி

காஞ்சீபுரத்திலுள்ள

வெஃகாவில்

திருவெஃகாவில்

கிடந்து

சயனித்துக் கொண்டும்

அங்கு

அக்காஞ்சீபுரத்தல் (திருப்பாடகத்தில்)

இருந்து

வீற்றிருந்தும் (கிருவூரகத்தில்)

நின்றதுவும்

நின்று கொண்டும் இருப்பது?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தன்னை விரும்பாதே உபயோகமற்ற க்ஷுத்ரபலன்களை விரும்புமவர்கட்கும் எம்பெருமான் உடம்புநோவக் காரியஞ்செய்து பயனளிப்பவன் என்பதை, தேவர்கட்குக் கடல்கடைந்து அமுதமளித்த வரலாறுகொண்டு அநுஸந்தித்து உள்குழைகின்றார். பிரானே! இடமும் வலமுமாக அசைந்தசைந்து கடல்கடைந்த கனுலுண்டான ஆயாஸத்தினால்தானோ கச்சித் திருப்பதிகளிலே கிடப்பதும் இருப்பதும் நிற்பதுமாகப் படுகிறாய்? என்கிறார்.

கச்சிவெஃகாவில் சயளிப்பது மாத்திர முண்டேயன்றி நிற்பதுமிருப்பதும் அங்கில்லையே, அப்படியிருக்க “கச்சிவெஃகாவில் கிடந்திருந்து நின்றதுவுமங்கு“ என்று கிடத்தலிருத்தல் நிற்றல் மூன்றும் வெஃகாவிலே நிகழ்வனவாக அருளிச்செய்தது எங்ஙனே? என்று சங்கை பிறக்கும், பிரகரணத்திற்குப் பொருத்தமாக, கச்சி என்ற சொல்லால் பாடகத்தையுமூரகத்தையும் சேர்த்து அநுஸந்தித்துக்கொள்ள வேணுமென்பதே ஆழ்வார் திருவுள்ளமாதலின் ஒரு குறையுமில்லை. (“நின்றதெந்தையூரகத்து இருந்ததெந்தை பாடகத்து, அன்று வெஃகணைக்கிடந்தது“ என்பது திருச்சந்த விருத்தம்.

இப்பாட்டில் மற்றுமோர் சங்கை பிறக்கலாம், உலகத்தில் சிரமமுண்டானால் அதற்குப் பரிஹாரமாகச் சயனித்துக் கொள்வதுண்டு, ‘இங்ஙனே சயனித்தருள்வது இன்ன ஆயாஸந்தீரவோ? என்று கேட்பது பொருந்தும், திருமழிசைப்பிரான் திருச்சந்தவிருதத்தில் “நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கஞால மேனமாய், இடந்த மெய்குலுங்கவோ விலங்குமால்வரைச் சுரம், கடந்தகால பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு“ என்றும், நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கொடியார்மாடக் கோளூரகத்தும புளிங்குடியும், மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்ததுதான் அடியாரல்லல் தவிர்த்தவசவோ அன்றேலிப்படிதான் நீண்டு தாவிய அசவோபணியாயே?“ என்றும் அருளிச் செய்தவை போல இவ்வாழ்வாரும் “அசைந்து கடைந்த வருத்தமோ கச்சிவெஃகாவில் கிடப்பது?“ என்றருளிச் செய்வதன்றோ பொருந்தும், “இருந்து நின்றதுவுமங்கு“ என்றது எதுக்கு? சிரமத்தினால் கிடத்தலுண்டேயன்றி இருத்தலும் நிற்றலும் ச்ரமகார்யமன்றே என்று சிலர் சங்கிப்பர்கள், கேண்மின், இங்கு “அசைந்து கடைந்த வருத்தமோ?“ என்றிருந்தலால் ஆடியாடி அசைந்தசைந்து கடைந்ததனாலுண்டான ஆயாஸம் தீர்வதற்காக நிற்கவுமாம் இருக்கவுமாம் கிடக்கவுமாம்.

 

English Translation

What a wonder! in the vehka temple of kanchi, the Lord appears in reclining posture, and elsewhere sitting and standing, Is it because he became tired after churning the ocean with a mount-and-serpent-churning-rod for the gods?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top