(2338)

(2338)

பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,

மலிந்து திருவிருந்த மார்வன், – பொலிந்து

கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,

தெருடன்மேல் கண்டாய் தெளி.

 

பதவுரை

திரு

பிராட்டியானவள்,

பொலிந்து இருண்ட கார்

செறிந்து இருளையுடைத்தான கார் காலத்திலுண்டான

வானில்

மேகத்தில்

மின்னே போல் தோன்றி

மின்னல் போல் பிரகாசித்து

மலிந்து இருந்த மார்வன்

பொருந்தி யிருக்கப்பெற்ற திருமார்பை யுடையனாய்

பொலிந்த கருடன் மேல் கொண்ட

விளங்குகின்ற கருடனால் மேற்றகொள்ளப்பட்டவனான

கரியான்

கருநிறப் பெருமானுடைய

கழலே

திருவடிகளே

தெருள்தன் மேல்

ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று

தெளி கண்டாய்

(நெஞ்சே!) தெளிந்திரு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று இறையுருவம் யாமறியோம்“ என்று எம்பெருமானுருவத்தைக் கனவிலுங் கண்டறியாதவர்போல ஆழ்வார் பேசினபேச்சு எம்பெருமானது திருச்செவியில் விழாதிருக்குமோ? விழுந்ததாகில் இச்சொல்கேட்டுப் பொறுத்திருக்க வல்லனோ அவன்? “திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் புரிசங்கங் கைக் கண்டேன், என்னாழிவண்ணன்பா லின்று“ என்று முதலடியில் தானே எல்லாங்கண்டதாகப் பேசின ஆழ்வார் திருவாக்கில் “இறையுருவம் யாமறியோம்“ என்ற சொல் வெளிவந்தால் இஃது எம்பெருமானுக்கு ஸஹ்யமாயிருக்குமோ? உடனே அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து பெரிய திருவடியின்மேல் வீற்றிருந்து காட்சிதந்தருளினன், கண்ணாக்கண்டு மகிழ்ந்து பேசுகிற பாசுரம்போலும் மிது. கார்காலத் தெழுகின்ற கார்முகிலில் மின் மின்னினாற்போலே கரிய திருமேனியில் பொன்னிறக்களான பெரியபிராட்டி விளங்கப்பெற்றுக் கருடன் மீது ஸேவைஸாதிக்கின்ற பெருமானுடைய திருவடிகளிலேயே நெஞ்சே! நீ பக்திபண்ணு என்று திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று. நெஞ்சே! என்னும் விளி வருவித்துக்கொள்க.

தெருள்தன் மேல்கண்டாய் –‘தெருள்‘ என்று ஜ்ஞானத்திற்குப் பெயர், ‘கர்மஜ்ஞாந பக்திப்ரபத்திகள்‘ என்ற அடுக்கிலும் ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகள்‘ என்ற அடுக்கிலும் ஜ்ஞாநத்திற்கு மேற்படியாக பக்தி சொல்லப்பட்டிருப்பதால், இங்கே தெருள்தன்மேல் என்றது பக்தியைச் சொன்னபடியாய், அவனது திருவடிகளை பக்திக்கு விஷயமாக்கு என்றதாம். அன்றியே, பக்தியும் ஜ்ஞாநத்தின் அவஸ்தா விசேஷமேயாதலால், தெருள் என்பதற்கே பக்தியென்று பொருள்கொண்டு, தெருள்தன்மேல் – பக்தியினாலே, கழல்கண்டாய் –திருவடிகளை (நெஞ்சே!) காணப்பெற்றாய், தெளி – இனிமேல் கலக்கம் நீக்கித் தெளிந்திரு என்பதாகவும் முரைக்கலாம்.

 

English Translation

Like a glorious dark raincloud lit by a lightning, the dark lord with the lotus dame lakshmi on his chest appears seated on his resplendent Garuda mount.  You have seen his feet through knowledge, now arise, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top