(2318)

(2318)

அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,

உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்

பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,

திகழும் திருமார்வன் தான்.

 

பதவுரை

உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான்

உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்

துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும்

சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும்

பல் மணி பூண்

பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும்

ஆரம்

ஹாரங்களும்

திகழும்

விளங்கப்பெற்ற

திருமார்வன் தான்

திருமார்பையுடையனான எம்பிரான்

அகத்தான் புறத்தான்

உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.

அவற்கு

அப்படிப்பட்ட பெருமானுக்கு

அடிமை பட்டேன்

ஆட்பட்டவனானேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில் ‘அகத்தான் புறத்தான்‘ என்ற விசேஷணங்கள் நரம்பாயிருக்கும். நான் அவனை அநுபவிக்கப் பாரித்துக்கொண்டிருக்கையில் அவன் என்னை யநுபவிக்க விரும்பி என்னை உள்ளிலும் வெளியிலும் மொய்த்துக்கொண்டிருக்கிற னென்கிறார்.

“இப்படி தாம் அவனை யநுபவிக்கப்புக்கவாறே அவனும் தன்பெருமையைப் பாராமல் தம்பக்கலிலே அத்யபிநிவிஷ்டனாய்க் கொண்டு பலவடிவுகொண்டு தம்மையநுபவியா நின்றனென்கிறார்“ என்றும் “நான் அடிமையிலே அந்வயிக்க, ஸௌபரியைப்போலே அவன் அனேகம் வடிவுக்கொண்டு புஜிக்க ஆசைப்படாநின்றானென்கிறது“ என்றுமிறே பூருவர்களின் வியாக்கியான வாக்கியமும்.

திருவாய்மொழியில் (4-7-6) “நாடோறு மென்னுடைய, ஆக்கையுள்ளுமாவியுள்ளு மல்லபுறத்திலுள்ளும் நீக்கமின்றி யெங்கும் நின்றாய்“ என்ற பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தகும்.

எம்பெருமான் திருப்பாற்கடலில் துயில் கொள்வதுபோல உப்புக்கடலிலும் வாழ்வதுண்டென்று ப்ரஸித்தியுண்டாதலால் “உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்“ எனப்பட்டது. இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில், (“உவர்க்குங் கருங்கடல் நீருள்ளான்) திருப்பாற்கடலை வாஸஸ்தாநமாக வுடையனாய்“ என்று வாக்கியமுள்ளதாக அச்சுப்பிரதிகளிற் காண்கிறது, “திருப்பாற்கடலோபாதி உப்புக்கடலையும் வாஸஸ்தாநமாகவுடையனாய்“ என்றிருக்கவேண்டிய வாக்கியம் அச்சுப் பிழையினால் மாறிவிட்டதுபோலும். உள்ளபடியே நிர்வஹிப்பாருளரேல் நிர்வஹித்தருள்க.

 

English Translation

The Lord’s chest is the abode of the coral-lipped lotus-dame lakshmi.  He wears many jewels and necklaces. He resides in the deep ocean and in the outer space.  He is also deep in my heart. I am enslaved to him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top