(2226)

(2226)

உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,

தளர்தல் அதனருகும் சாரார், – அளவரிய

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,

பாதத்தான் பாதம் பயின்று.

 

பதவுரை

அளவு அரிய வேதத்தான்

அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்

வேங்கடத் தான்

திருமலையிலே வந்து நிற்பவனும்

பயின்று

பழகி (இருக்குமவர்கள்)

உளது என்று இறுமாவார்

தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்

உண்டு இல்லை என்று

(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று

விண்ணோர் முடிதோயும் பாதத்தான்

நித்யஸூரிகளின் முடிகள் பணியப்பெற்ற திருவடிகளையுடையனுமான எம்பெருமானுடைய

பாதம்

திருவடிகளிலே

தளர்தல் அதன் அருகும் சாரார்

தளர்ச்சியடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாகவதர்களின் பெருமையைப் பேசுகிறார். ஸகல வேதங்களினாலும் பரம்பொருளாகப் பிரதிபாதிக்கப்பட்டவனும், அந்த மேன்மை விளங்குமாறு திருமலையில் வந்து நித்ய ஸ்ந்நிதி பண்ணியிருப்பவனும், அங்கே நித்யஸூரிகளும் வந்து அடிபணிய நிற்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளிற் பழகுகின்ற பாகவதர்கள் செல்வம் படைத்தாலும் ‘நாம் செல்வம் படைக்கப் பெற்றோம், நம்மோடு ஒத்தாரும் மிக்காருமில்லை‘ என்று செருக்குக் கொள்ளமாட்டார்கள், இருந்த செல்வம் அழிந்து போனாலும் ‘ஐயோ! ஏழைமை வந்து விட்டதே!‘ என்று சிறிதும் தளர்ச்சியடையமாட்டார்கள் 1. “களிப்புங் கவர்வுமற்று“ என்ற பாசுரத்திற் சொன்னபடி லாபநஷ்டங்களில் ஒருபடிப்பட்ட சிந்தை நிலைமையையுடையராயிருப்பர் 2. “முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினுங் கனியார் மனம்… எங்களிராமாநுசனை வந்தெய்தினர்“ என்ற ஸ்ரீ ராமாநுஜபக்தர்களைப் போன்றிருப்பர்களாம் பகவத்பக்தர்களும்.

உண்டில்லை யென்று – செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது, சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும் தளரமாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார். ‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.

அளவரிய வேதத்தான் – வேதங்களுக்கு அளவில்லையென்பது வேதத்திலேயே விளங்கக்காட்டப்பட்டுள்ளது. க்ருஷ்ணயஜுர் வேதத்தின் ப்ராஹமணத்தில் ஒரு பகுதியான ‘கடாகம்‘ என்னும் சாகையில் முதல் ப்ரச்நத்தில் பதினோராவது அநுவாகத்தில் ஓர் உபாக்கியானம் ஓதப்பட்டிருக்கின்றது, அதாவது – முன்பொரு கால் ‘பரத்வாஜர்‘ என்னும் மஹர்ஷியானவர் ஸகலவேதங்களையும் ஓதி முடிக்க வேணுமென்ற முயற்சிகொண்டு அதற்குரிய ஆயுஸ்ஸைப் பெறுவதற்காக இந்திரனைக் குறித்து உபாஸநைசெய்து அவனை ப்ரஸந்நனாக்கி அவனுடைய அநுக்ரஹத்தால் ஒரு புருஷாயுஸ்ஸுக்கு நூறாண்டு விழுக்காடு முந்நூறாண்டுகொண்ட மூன்று ஆயுஸ்ஸுக்களை வரம்பெற்று அந்த வாழ்நாளில் குருகுலவாஸஞ் செய்து வேதமோதிவந்தார். முந்நூறாண்டும் முடிந்து ஜீர்ண சரீரராய் கிழத்தனமடைந்து சரமகாலமணுகிப் படுத்திருக்கும் அம்முனிவரை இந்திரன் வந்துகிட்டி ‘ஓ பரத்வாஜ் முனிவரே! மீண்டும் ஒரு நூறாண்டுகொண்ட ஆயுளை உமக்கு நான் கொடுப்பேனாகில் அந்த வாழ்நாளை நீர் எவ்விதமாகக் கழிக்க உத்தேசிக்கிறீர்? அந்த ஆயுஸ்ஸில் நீர் ஸாதிக்கவிரும்பும் புருஷார்த்தம் யாது? என்று கேட்க, முனிவர் ‘வேறு நான் என்ன செய்யப் போகிறேன்? அந்த ஆயுஸ்ஸிலும் வேதாத்யயநமே செய்யக்கடவேன் என்றார். அதைக் கேட்ட இந்தரன் ‘ஓ‘ இவர் இதுவரை கழிந்த மூன்று ஆயுஸ்ஸில் மூன்று வேதங்களையும் பூர்த்தியாக ஓதிவிட்டதாகவும் இன்னமும் ஒரு வேதம் குறைபட்டிருப்பதாகவும், அதையும் இந்த நான்காவது ஆயுஸ்ஸில் ஓதிவிட்டால் சதுர்வேதீ என்று விருது பெற்றுவிடலாமென்றும் இவர் ஆசைப்படுகிறார் போலும், இவருடைய ப்ரமத்தை நீக்குவோம்‘ என்றெண்ணி, ருக்வேதம், யஜுர் வேதம், ஸாமவேதம் என்ற மூன்று வேதங்களையும் தம்முடைய யோக ஸாமர்த்தியத்தினால் மூன்று மலைகளாக்கி இதற்கு முன் அம்முனிவர் கண்டறியாத மலைவடிவமான அந்த வேதங்களை அவருக்குக் காட்டினான். பிறகு அவற்றுள் ஒவ்வொரு மலையினின்றும் ஒவ்வொரு முஷ்டியால் தூள்களையெடுத்து அங்ஙனம் மூன்று முஷ்டிகளெடுத்துக் காட்டி ‘ஓ முனிவரே! இம்மூன்று மலைகளும் வேதங்களை அதில் ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு வேதமாதலால் வேதங்களுக்கு எல்லையே கிடையாது‘ என்றான் இவ்வார்த்தையைக் கேட்ட முனிவர் ‘இப்படியாகில் இன்றளவும் நாம் செய்த வேதாத்யயநம் எவ்வளவாயிருக்கும்‘ எனச் சிந்தை கொண்டபடியேக் குறிப்பாலறிந்த இந்திரன் ‘முன்வரே! இம்மூன்று முஷ்டிகளில் அடங்கியுள்ள வேதராசிமைத்தான் நீர் இதுவரை முந்நூறாண்டுகளாக் குருகுல வாஸஞ்செய்து ஓதினிர், இதோ மலைமலையாகக் கிடக்கும் வேதங்கள் உம்மால் ஓதப்படவில்லை‘ என்றானாம்.

 

English Translation

His name is the form in venkatam. He is the Lord of the unfathomable vedas.  His feet are worshipped  by the celestials. Devotees feel they have everything and never despair about what they do not have, after worshipping the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top