(2210)

(2210)

மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,

அகனார வுண்பனென் றுண்டு, – மகனைத்தாய்

தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை

நீறாக எய்தழித்தாய் நீ.

 

பதவுரை

தென் இலங்கை

அழகிய லங்காபுரி

நீறு ஆக

நீறாகியொழியும்படி

எய்து

அம்புகளைச் செலுத்தி

அழித்தாய்

முடித்தவனே!

நீ-:

மகன் ஆக கொண்டு எடுத்தாள்

உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய

மாண்பு ஆய கொங்கை

அழகான முலையை

அகன் ஆர உண்பன் என்று உண்டு

வயிறார உண்ணக்கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து

மகனை

புத்ரனான உன் விஷயத்திலே

தாய்

உனது தாயாகிய யசோதை

தேறாத வண்ணம்

நம்பிக்கையற்றிருக்கும்படி

திருத்தினாய்

செய்துவிட்டாய்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கிருஷ்ணாவதாரம் நினைவுக்கு வந்துவிட்டால் ஆழ்வார்கள் விரைவில் ஓயமாட்டார்களே!  கீழ்ப்பாட்டில்  “முன்னொருநாள் மாவாய்பிளந்த மகன்” என்று கிருஷ்ணாவதாரம் ப்ரஸக்தமானபடியால் அது தன்னிலேயே திருவுள்ளம் அவகாஹித்து அநுபவித்து இப்பாசுரம் பேசுகிறார்.  விஷந்தடவின முலையைக் கொடுத்து உன்னைக் கொல்லவந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய் போன்று பரிவு காட்டி உன்னை வாரியெடுத்தணைத்து முலைகொடுத்தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவனைகாட்டி , பாலின் கனத்தாலே விம்மி விளங்குகின்ற அம்முலையைச் சுவைத்துண்பவன் போல அவளுயிரையே உறிஞ்சியுண்டாய்; அது முதலாக உனது மெய்த்தாயான யசோதைப்பிராட்டிக்கு உன்னிடத்தில் நம்பிக்கையுண்டாக இடமில்லாமலே போயிற்று; ‘இவனை நாம் சிறு குழந்தையென்று நம்பவே கூடாது’ என்று எப்போதும் துணுக்குத்துணுக்கென்று அவள் அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துவிட்டாய் என்றாராயிற்று.

அகன் – அகம்; மகரனசுரப்போலி.

“தேன்னிலங்கை நீறாக எய்தழித்தாய்” என்ற விளியின் கருத்தாவது – க்ருஷ்ணாவதாரத்தில் மாத்திரமே இப்படி நம்பிக்கையற்று அஞ்சியிருக்க வேணுமேயொழிய ராமாவதாரத்தில் இப்படிப்பட்ட அச்சத்திற்கு அவகாசமில்லை; பருவம் முற்றினபின்பே ராவண ஸம்ஹாரம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்தாயாகையாலே – என்பதாம்.

தென்னிலங்கை – தென் திசையிலுள்ள இலங்கை என்றுமாம்.  தென் – அழகுக்கும் பெயர்.

 

English Translation

“Child, came take suck”, the ogress said, “I will drink to my fill”, you said, and made your mother fear to you, You burnt the city of Lanka with fire arrows! Lord, You!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top