(2188)
கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே உகந்து.
பதவுரை
|
ஆழிநெஞ்சே |
– |
ஆழ்ந்த மனமே! |
|
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது) |
||
|
கழல் எடுத்து |
– |
திருவடிகளை உயரத் தூக்கினவனாயும், |
|
மாற்றார் |
– |
எதிரிட்ட நமுசி முதலானவர்கள் |
|
அழல் எடுத்த சிந்தையர் ஆய்அஞ்ச |
– |
பயாக்னி கொளுந்தின நெஞ்சையுடையவர்களாய் நடுங்கும்படியாக |
|
வாய் மடித்து |
– |
உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு |
|
கண் சுழன்று |
– |
(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டுவிழும்படி) கண்கள் வட்டமிட |
|
தழல்எடுத்த போர் ஆழி |
– |
நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை |
|
ஏந்தினான் |
– |
தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய, |
|
பொன்மலர் சே அடியே |
– |
அழகிய மலர்போன்ற திருவடிகளையே, |
|
உகந்து ஓர் |
– |
விரும்பி அநுஸந்திப்பாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகளந்த பெருமானுடைய திருவடிகளையே உகந்து ஆச்ரயித்திருக்கும்படி தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்.
மாவலியினிடத்தினின்றும் தானம் வாங்கியவுடனே ஸ்ரீவிஷ்ணு திரிவிக்கிரமனாய் மூவடி மண்ணை அளக்கப்புக, அதைக்கண்ட மஹாபலிபுத்திரனான நமுதியென்பவன் ஓடிவந்து ‘இது என்ன?’ என்று வளருகிற திருவடியைத்தகைய, ஸ்ரீவிஷ்ணு ஏன் தகைகிறாய்? நான் தானம் வாங்கியதை அளந்துகொள்ள வேண்டாவோ?’ என்ன, ‘நீ செய்கிறது கபடமன்றோ?’ என்று நமுசிசொல்ல; ஸ்ரீவிஷ்ணு ‘உன்னுடைய தகப்பன் யாசக பிரமசாரியாய் வந்த எனக்குத் தானம் பண்ணினது பொய்யோ?’ என்ன, நமுசி ‘என்னுடைய பிதா உன்னுடைய மோசந்தெரியாமல் உன் வஞ்சனத்தில் அகப்பட்டுக்கொண்டான்’ என்ன, ஸ்ரீவிஷ்ணு ‘நான் செய்வதை வஞ்சகமென்று எதனாற் சொல்லுகிறாய்?’ என்ன, நமுசி ‘நீ செய்வது வஞ்சனமன்றாகில், நீ முன்னே கேட்ட போதிருந்த வடிவத்தைக் கொண்டு அளந்து கொண்டுபோ’ என்ன, ஸ்ரீவிஷ்ணு ‘இது விகாரப்படுந்தன்மையுள்ள (எப்போதும் ஒரு தன்மையாயிராத) சரரமாயிற்றே, முன்னைய வடிவத்தைக் கொண்டு எப்படியளக்க முடியும்?’ என்ன, இப்படி ஸமாதானஞ் சொல்லவுங்கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாயிருந்த நமுசியை வளர்ந்த திருவடியினால் ஆகாயத்திலே கொண்டுபோய்ச் சுழன்றுவிழும்படி செய்தானெம்பெருமான் – என்கிற வரலாற்றைப் பெரியாழ்வார் ‘என்னிது மாயம் என்னப்பனறிந்திலன், முன்னையவண்ணமே கொண்டளவாயென்ன மன்னு நமுசியை வானிற்சுழற்றிய, மின்னுமுடியனே!” (1-8-8) என்ற பாசுரத்தில் அநுஸந்தித்தருளினர்; அதனை இப்பாட்டில் சுருங்க அநுஸந்தித்திருக்கிறாரிவர், மாற்றார் என்று மாவலியின் மகனான நமுசி முதலிய விரோதிகளைச் சொல்லுகிறது. அவர்கள் கண்சுழன்று அழலெடுத்த சிந்தையராய் அஞ்சும்படி வாய்மடித்தான் எம்பெருமானென்க.
“தழலெடுத்த போராழியேந்தினான்” – சக்கரத்தாழ்வானைக் கொண்டு காரியங் கொண்டதும் த்ரிவிக்ரமாவதாரத்திலுண்டு. மாவலியானவன் வாமநனுடைய வடிவழகாலும் மழலைச் சொல்லாலும் மனமகிழ்ந்து இவன் விரும்பியதைக் கொடுப்பதாக இருக்கும்போது அவனது குருவான சுக்கிராசாரியன் அப்பிரானது வடிவையும் வந்த விதத்தையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்வேச்வரன், தேவகாரியஞ் செய்யும்பொருட்டு உன் ஸம்பத்துக்களை யெல்லாம் பறித்துக்கொண்டுபோக வந்தான்’ ஆகையால் நீ இவனுக்குத் தானம் பண்ணுவது தகுதியன்று; என்று தானஞ்செய்வதைத் தடுக்க, அவன் கேளாமல் தாரைவார்த்துத் தத்தஞ்செய்யப்புக, ஜலபாத்திரத்தின் துவாரத்திலே அந்த சுக்கிராசாரியன் புகுந்து கொண்டு ஜலத்தை விழவொட்டாமல் தடுக்க, ஸ்ரீவிஷ்ணு, த்வாரத்தைச் சோதிப்பவன்போலே தன்னுடைய திருக்கையிலணிந்த தர்ப்பபவித்ரத்தின் நுனியால் அவன் கண்ணைக் குத்திக் கலக்க, அவன் கண்ணையிழந்தவனாய் அங்கிருந்து வெளிப்பட, பின்பு மாவலியிடத்தில் நீரேற்றனன் என்கிற வரலாறு ப்ரஸித்தமானதே; இதனைப் பெரியாழ்வார் அநுஸந்திக்கும்போது 1. சுக்கிரன் கண்ணைத் துரும்பால்கிளறிய சக்கரக்கையன்” என்றதனால், “கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தான்” என்கிறபடியே, திருமால் விரும்பினவடிவங்கொண்டு செல்லுந் தன்மையையுடைய திருச்சக்கரமே பவித்திர வடிவாய் நின்று சுக்கிரன் கண்ணைக் கலக்கினதாக ஆசார்யர்கள் வியாக்கியானித் தருள்வதாலும், அதை யநுஸரித்து ஸ்ரீகூரநாராயண ஜீயர் தாமும் ஸுதர்சநசதகத்திலே (‘0) “க்ருதயந நயவ்யாஹதிர்ப் பார்க்கவஸ்ய… சக்ரத்நாரா -” (சுக்கிரனுடைய கண்ணைக்கெடுத்த சக்கரம்) என்று அருளிச்செய்துள்ளதனாலும் இப்பாசுரத்தில் த்ரிவிக்ரமாவதார கதாநுஸந்தாநத்தில் ‘தழலெடுத்த போராழியேந்தினான்’ என்றது ஒக்கும்.
வாய்மடித்து – கோபத்தின் மிகுதியினால் ‘நாக்கை மடித்துப் பற்களைக் கடித்துக்கொண்டிருத்தல் இயல்வு ‘கண்சுழன்று’ என்றது எம்பெருமானுடைய கோபத்தினாலாகிய கண்சுழற்சியைச் சொன்னதாகவுமாம், நமுசியின் பயத்தினாலாகிய கண்சுழற்சியைச் சொன்னதாகவுமாம்.
மூன்றாமடியில் “சேவடியை” என்பதும் பாடம். ஈற்றடியில், ஓர் – வினைமுற்று தியானம்பண்ணு என்றபடி.
English Translation
His one foot raised, the Lord sealed his detractors’ lips and dazzled their eyes with his radiant discus. O Heart! Contemplate his lotus feet with joy.
