(2183)

(2183)

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,

தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், – வானத்

தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்

பணியமரர் கோமான் பரிசு.

 

பதவுரை

நாரணன் தன்

ஸ்ரீமந் நாராயணனுடைய

நாமங்கள்

(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்

மற்று

மற்றும்

அவன் பேர்

அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்

ஞானத்தால்

(ப்ரேமரூபமான) ஜ்ஞானத்தாலே

நன்கு உணர்ந்து

உள்ளபடியறிந்து

தானத்தால்

(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று

சாற்றினால்

அநுஸந்தித்தால்,

நங்கள் பணி  அமரர் கோமான் பரிசு

நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,

வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே

பரமபதத்திற்கு அலங்காரமான நித்யஸூரிகளாக (நம்மை)ச் செய்துவைக்கு மதுவேயாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் இப்பிரபந்தமுகத்தால் பகவந்நாமங்களை அநுஸந்தித்து அவனதருளால் நித்யஸூரிகள் பெறும் பேற்றைப் பெறப்போகிறேனென்பதைப் பொதுப்படையான சொல்லாலே வெளியிடுகிறார்.  பகவந் நாமங்களை நன்றாக அறிந்து அன்புடன் யாவர் சொல்லுகின்றனரோ, அன்னவர்களை அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான நித்யஸூரிகளோடொப்பப் பணி கொள்ளுதலன்றோ எம்பெருமானுடைய தொழில் என்கிறார்.

எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு; அவற்றில், திருமேனி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று ஒரு வகுப்பும், விபூதிவிஸ்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும் கொள்ளத் தக்கன.  ஸ்ரீவத்ஸவக்ஷா; புண்ட·காக்ஷ:, பீதாம்பர:, சார்ங்கீ, சக்ரபாணி: இத்யாதி திருநாமங்கள் முந்தின வகுப்பைச் சேர்ந்தவை; லோகாத்யக்ஷ:, ஸுராத்யக்ஷ:, ஜகத்பதி; இத்யாதி திருநாமங்கள் பிந்தினவகுப்பைச் சேர்ந்தவை.  ஆக இவ்விரு வகுப்புகளையுந் திருவுள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும், இரண்டாமடியில் “மற்றவன் பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.  அன்றியே, நாரணனுடைய நாமங்களை நன்றாகவுணர்ந்து அவனுடைய அந்தப் பெயர்களை அன்பு முற்றி வாய்விட்டுச் சொன்னால் – என்று பொருள் கொள்ளவுங் கூடும்; அப்போது, கீழ்விவரித்தபடி வகுப்புபேதங் கொள்ளவேண்டா.

தானத்தால் – ‘ஸ்தாநம்’ என்னும் வடசொல் தானமெனத் திரிந்தது.  எல்லை நிலத்தைச் சொன்னபடி.  அன்பினுடைய எல்லை நிலத்திலே நின்று என்க.  சாற்றுதல் – சொல்லுதல்.  ஈற்றடியில், நாங்கள் என்பதும் பணி என்பதும் தனித்தனியே அமரரிடத்து அந்வயிப்பன, பணியமரர் – எப்போதும் பணிவதையே இயல்வாகவுடைய அமரர்.  பரிசு – வெகுமதியுமாம்; நித்யஸூரி ஸாம்யத்தை வெகுமதியாக அளிப்பன் என்றவாறு.

 

English Translation

Knowing through revelations, if we chart Narayana and his many other names, in his many shrines, will not our worship secure for us a place by his side in the comity of gods in heaven?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top