(1864)

(1864)

தாழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று தகைந்த தேகண்டு வஞ்சிநுண் மருங்குல்

மாழை மான்மட நோக்கியை விட்டு வாழ்கி லாமதி யில்மனத் தானை

ஏழை யையிலங் கைக்கிறை தன்னை எங்க ளையொழி யக்கொலை யவனை

சூழ மாநினை மாமணி வண்ணா  சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.

 

பதவுரை

மா மணி வண்ணா

நீலமணிநிறத்தனாவ பெருமானே!

தாழம் இன்றி

காலதாமதமில்லாமல்

முந்நீரை

கடலை

அஞ்ஞான்று

அன்றைக்கு

தகைந்ததே கண்டு

அணைசெய்த்தொன்றையே கண்டு,

வஞ்சி நுண் மருங்குல்

வஞ்சிக்கொடி போன்று நுட்பமான இடையை யுடையளாய்

மாழை மான் மட நோக்கியை

பேதைமைக்குணமுள்ள மானின்பார்வை போன்ற கபட மற்ற கண் பார்வையை யுடையளான ஸீதையை

விட்டு

(தேவரீர் ஸந்நிதியிலே) ஸமர்ப்பித்துவிட்டு

இலங்கைக்கு இறை தன்னை அவனை

அந்த இராவணனை

எங்களை ஒழிய கொலை

எங்களைத் தவிர்த்துக் கொல்லவேணும்

சூழும் ஆ நினை

அடியோங்கள் தேவரிரைச் சூழ்ந்துக்கொண்டு பிரார்த்திக்கிறவிதனைத் திருவுள்ளம் பற்றவேணும்

சொல்லினோம்

எங்கள் கோரிக்கையை விண்ணப்பஞ்செய்து கொண்டோம்

தடம் பொங்கத்தம் பொங்கோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  சிறிதும் தாமதமின்றிக் கடலிலே அணைக்கட்டிக் கடந்து வருவதென்பது எளிதான காரியமன்றே, மிக அரிதான அக்காரியத்தையும் செய்து விட்டார்களென்பதை அறிந்தபின்பாவது ‘ஓ இவர்கள் ஸாமாந்ய மநுஷ்யரல்லர், தெய்வங்களாகவே யிருக்கவேண்டும், இல்லையேல் இவ்வருந்தொழில் செய்யக் கூடுமோ?’ என்று நினைத்து ‘இனி நாம் ஸீதையை ஸமர்ப்பித்துவிட்டு உயிர்தப்பி உய்வதே உரியது’ என்று கொண்டு அங்ஙனே செய்து வாழ்ந்து போகலாமே ராவணன், அப்படி வாழமாட்டாதே ‘நாம் இலங்கைக்கு அதிபதியன்றோ? நம்மையும் அடர்ப்பாருண்டோ?’ என்ற அஹங்காரத்தையே மேற்கொண்டிருந்த அப்பாவியை, மாமணிவண்ணா! இஷ்டப்படி கொன்றுவிடாய், அக்கொலையின் நின்றும் எங்களைமாத்திரம் தவிர்த்தருளவேணும் என்கிறார்கள்.

தாமம் – தாழ்வு, காலவிளம்பம்.

பிராட்டியின் வடிவழகையும் கண்ணழகையும் அநுபவிக்கவுரியவன் இராமபிரானொருவனே யன்றி நாம் எங்கே! அவை எங்கே! என்று இராவணன் நினைத்திருக்கவேணு மென்பது தோன்ற ‘வஞ்சிநுண்மருங்கல் மாழைமான் மடநோக்கியை’ என்றனர். கள்ளங் கபடமின்றிக் கவலையையும் அச்சத்தையுங் கொள்ளும் மகளிர் கண்ணோக்கிற்கு வெகுண்ட மானின் மருண்ட பார்வையை உவமை கூறுதல் மரபு. இங்கு இது கூறியதனால், அசோகவனத்தையும் அங்குள்ளாரையுங் கண்டவளவில் பிராட்டி. மருண்ட நோக்குடையளாயின ளென்பதுதோன்றும், மாழை – அறிவின்மை, அழகுமாம். ஏழை -தகாத விஷயத்தில் வீணான சாபல்யங் கொண்டவன்.

சூழும் ஆ நினை -நாங்கள் இத்தனைபேர் சூழ்ந்துகொண்டு யாசிக்கின்றோமே இதனைத் திருவுள்ளம் பற்றவேணும் என்கை.

 

English Translation

O Gem-hued Lord! Even after seeing that you had made a bridge and were crossing the ocean, they mindless, whimsical Ravana did not give up the creeper-thin-waisted fawn-eyed Dame Sita.  Pray spare us, we will tell you how to round up the others. We dance in fear to the sound to the wardrum Pongattam Pongo!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top