(1694)

(1694)

கலங்க மாக்கடல் கடைந்தடைத் திலங்கையர் கோனது வரையாகம்,

மலங்க வெஞ்சமத் தடுசரம் துரந்தவெம் மடிகளும் வாரானால்,

இலங்கு வெங்கதி ரிளமதி யதனொடும் விடைமணி யடும்,ஆயன்

விலங்கல் வேயின தோசையு மாயினி விளைவதொன் றறியேனே.

 

பதவுரை

மா கடல்

பெரிய கடலானது

கலங்க

கலங்கும்படியாக

கடைந்து

(அதனைக்) கடைந்தவனும்

அடைந்து

(அக்கடலில்) அணை கட்டினவனும்

இலங்கையர் கோனது

இலங்கையிலுள்ளார்க்கு அரசனான இராவணனுடைய

வரை ஆகம்

மலைபோன்ற மார்பானது

மலங்க

வியாகுலப்படும்படி

வெம் சமத்து

கொடியபோரில்

அடு சரம்

கொலையம்புகளை

துரந்த

பிரயோகித்தவனுமான

எம் அடிகளும்

எமது ஸ்வாமியும்

வாரான்

வரவில்லை;

ஆல்

அந்தோ! ;

இலங்கு

விளங்காநின்ற

வெம் கதிர்

கடூரமான கிரணங்களையுடைய

இள மதி அதனொடும்

இளம் சந்திரனோடு கூட

விடை

எருதினுடைய

மணி

(கழுத்தில் கட்டின மணியின்) ஓசையும்

அடும்

(என்னைக்) கொலை செய்கின்றது;

ஆயன்

இடையனான கண்ணபிரானிடத்துள்ள

விலங்கல் வேயினது

மலை மூங்கிற்குழலினுடைய

ஓசையும்

த்வநியும்

ஆய்

உண்டாக,

இனி விளைவது ஒன்று அறியேன்

இனி உண்டாகப்போகும் ஆபத்தை ஒன்று மறிகின்றிலேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (2. “விண்ணவரமுதுண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே” என்கிறபடியே) தேவர்களுக்கு அமுதமெடுத்துக் கொடுக்கிற வியாஜத்தினால் சிறந்த அமுதமாகிய பிராட்டியைத் தான் பெறுதற்குக் கடலைக் கடைந்தான்; அவளைப்பெறுதற்கே  மற்றொரு ஸமயத்தில் கடலையடைத்தான்; இலங்கையிற் புகுந்து எதிரிகள் விட்ட அம்புமாரிகளையெல்லாம் மேலேற்றுப் போர்புரிந்து இராவணனைக் கொன்றான்; இவ்வரிய பெரிய காரியங்களை யெல்லாம் நோக்குங்கால் அப்பெருமானுக்கு ஸ்த்ரீ வ்யக்தியில் அளவற்ற காதலுள்ளமை நன்கு விளங்கும்.  ஒரு ஸ்த்ரீவ்யக்தி கிடைப்பதாயிருந்தால் பொறுக்கொணாத ஆயாஸங்களையும் பொறுத்துப் படாதன படுதற்கு ஸித்தனாயிருக்குமப்பெருமான் நான் எளிதிற் கிடைக்கிறேனென்றோ என்னை உபேக்ஷித்திருப்பது! என்கிறாள் போலும்.

அவன்றான் வாராதொழியினும் என்னைக் கொலைசெய்வதற்கும் வழிதேடவேணுமோ? ஒரு புறத்திலே சந்திர கிரணங்களை ஏவி நலிகின்றான்; மற்றொரு புறத்திலே மாட்டுக் கழுத்து மணியோசையை உண்டாக்கி நலிகின்றான்; பிறரையிட்டு நலிவது பேராதென்று தானே நேரில் நலியக்கருதி வேய்ங்குழலை வாயில் வைத்து ஊதி அவ்வோசையை யிட்டு நலிகின்றான்; இன்னமும் எவ்வெவ்விதமான நலிவுகள் நேரப்போகின்றனவோ அறிகின்றிலே னென்றாளாயிற்று.

விடைமணி அடும் = மாலைப்பொழுதில் மாடுகள் மேய்த்துவிட்டுத் திரும்பும்போ கழுத்திற் கட்டியுள்ள மணிகளை ஓசைப்படுத்திக்கொண்டே வரும்; அவ்வோசை செவிப்பட்டவாறே மாலைப்பொழுது நெருங்கினமை யறிந்து “மாலையும் வந்தது மாயன்வாரான்’ என்று நாயகிவரந்துவளென்க. “மாலைவாய்த் தன்னுடைய நாவொழியாதாடுந் தனி மணியின், இன்னிசை யோசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நெடிதாகும்” என்றார் பெரிய திருமடலிலும்.

விலங்கல் வேய் = கண்ணபிரான் ஊதும் குழல் மூங்கிலினால் செய்யப்பட்டது; அந்த மூங்கில் மலையில் விளைந்தது என்பதுபற்றி ‘விலங்கல்வேய்’ எனப்பட்டது.  விலங்கலென்று மலைக்குப்பெயர்.  ‘வேய்’ என்ற மூங்கிலின் பெயர் அதனாற் செய்யப்பட்ட குழலுக்கு வாசகமானது ஆகுபெயர்.

 

English Translation

My Lord who churned the mighty ocean, bound it and rained fire arrows on the mighty Rakshasa king’s writhing chest, does not come, alas!  The cool rays of the tender Moon, the sound of black bull bells, the strains of the cowherd’s flute, they have all joined hands to kill me.  I know not what will happen next!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top