(1327)
பாருள் நல்லமறை யோர்நாங்கைப் பார்த்தன் பள்ளிசெங் கண்மாலை,
வார்கொள் நல்ல முலைமடவாள் பாடலைந் தாய் மொழிந்தமாற்றம்,
கூர்கொள் நல்ல வேல்கலியன் கூறு தமிழ் பத்தும்வல்லார்,
ஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளு மெய்துவாரே!
|
பாருள் நல்ல மறையோர் நாங்கை |
– |
பூமியிலே விலக்ஷணராயுள்ள வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில் |
|
பார்த்தன் பள்ளி |
– |
திருப்பார்த்தன் பள்ளி யென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் அவனாய் |
|
செம் கண் மாலை |
– |
செந்தாமரைக் கண்ணனான எம்பெருமாளைக் குறித்து |
|
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலை |
– |
கச்சணிந்த அழகிய ஸ்தனங்களை யுடையளான (பரகால நாயகியாகிய) பெண்பாடின பாசுரங்களை (உட்கொண்டு) |
|
தாய் மொழிந்த மாற்றம் |
– |
தாயானவள் சொன்ன வார்த்தையாக |
|
கூர்கொள் நல்ல வேல் கலியன் கூறு |
– |
கூர்மை பொருந்திய நல்ல வேற்படையை யுடைய திருமங்கையாழ்வார் அருளிச்செய்த |
|
தமிழ் பத்தும் |
– |
இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் |
|
வல்லார் |
– |
ஓத வல்லவர்கள் |
|
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் |
– |
மிகச்சிறந்த திருநாட்டிலே |
|
நாளும் இன்பம் எய்துவார் |
– |
நித்யாநந்தம் அனுபவிக்கப்பெருவார் |
***- அடிவரவு:- கவளம் கஞ்சன் அண்டர் கொல்லை அரக்கர் ஞாலம் நாடி உலகம் கண்ணன் பாருள் நும்மை.
ஒன்பதாந்திருமொழி – நும்மைத்தொழுதோம்.
இத்திருமொழியின் போக்யதை விலக்ஷணமாயிருக்கும். இதனிற் பாசுரங்களைச் சொன்னாலும் செவியுற்றாலும் நெஞ்சு நீர்ப்பண்டமாயுருகும். திருவிந்தளுர்ப் பரிமளரங்கப் பெருமானைக் கண்ணாரக் காணவேணுமென்றும் கையாரத்தொழவேணுமென்றும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யப் பெறவேணுமென்றும் எவ்வளவோ பாரித்துக் கொண்டு வந்தார் ஆழ்வார். அப்பெருமானோ வென்னில், திருக்கண்களாலே குளிரநோக்குதல் வாரியணைத்தல் வினவுதல் அத்தாணிச் சேவகத்திலே ஏவுதல் ஒன்றுஞ் செய்திலன்; நிரங்குச ஸ்வதந்த்ரனான அவனது திருவுள்ளத்தை அறியவல்லாரார்? ஆழ்வாருடைய உருக்கமான பாசுரங்களைக் கேட்கவேணுமென்று பிச்சேறினான்போலும்; கோபுர வாசற் கதவையுமடைத்துக் கொண்டு கிடந்தான்போலும். ஆழ்வார் துடிக்கிற துடிப்பை என்சொல்ல வல்லோம்!. பெண்ணுடையுடுத்துப் பாசுரமிட்டுக் காட்டுகிற துடிப்பை ஆணுடையிலேயே காட்டுந் திருமொழியன்றோ இது.
திருமேனி நிறத்தையும் காட்டாதே ஒளிப்பாயோ பிரானே!; என்னை இப்படி பட்டினியடித்து நீயே வயிறுவளர்க்கக் கருதினாயே!; “உலகுதன்னை வாழநின்ற நம்பீ!” என்கிறபடியே உலகத்தை வாழ்வித்து நீ ஸத்தைபெற வேண்டியிருக்க, உலகத்தைப் படுகொலையடிப்பதே உனக்கு வாழ்ச்சியாய்விட்டது; நீயே வாழ்ந்துபோ என்று திருவுள்ளம் நொந்து பேசுகிறார் திருவிந்தளுர்த் திருமாலை நோக்கி.
