(1065)

(1065)

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த

புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்,

தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு

இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.

 

பதவுரை

முனிவன்

உலகங்களைப் படைக்க ஸங்கல்பம் செய்தவனும்

மூர்த்தி மூவர் ஆகி

பிரமன் விஷ்ணு சிவன் என்று மூன்று மூர்த்தியாக நிற்பவனும்

வேதம் விரித்து உரைத்த புனிதன்

வேதப் பொருள்களை வெளியிட்ட வியக்தமாக பவித்திரனும்

பூவை வண்ணன்

காயாம்பூப்போன்ற திரு நிறத்தை யுடையவனும்

அண்ணல்

ஸர்வ ஸ்வாமியும்

புண்ணியன்

வடிவுகொண்ட புண்ணியமானவனும்

விண்ணவர் கோன்

நித்யஸூரிகளுக்குத் தலைவனும்

தனியன்

“ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்று உபநிஷத்தில் ஓதப்பட்டவனும்

தான் சேயன் ஒருவனாகிலும்

தான் ஒருவர்க்கும் எட்டாத வொருவனா யிருந்தாலும்

தன் அடியார்க்கு இனியன்

தன்னுடைய அடியவர்களுக்குப் பரம போக்யனா யிருப்பவனும்

எந்தை

எமக்குத் தந்தையா யிருப்பவனுமான

எம் பெருமான்

ஸ்வாமியானவன்

எவ்வுள் கிடந்தான்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “முனிவன்” என்றால் மநநம்பண்ணுகிறவன் என்கை; மநநம் பண்ணுகையாவது ஸங்கல்பம் செய்கை. “பன்மைப்படர் பொருளாதுமில் பாழ்நெடுங்காலத்து” என்கிறபடியே *  ஒன்றுந்தேவுமுலகு முயிரும்மற்றும் யாதுமில்லாதவக்காலத்து பஹூ ஸ்யாம் ப்ரஜாயேய” என்று ஸ்ருஷ்டிக் குறுப்பாக ஸங்கல்பித்துக் கொண்டவனென்கை.

மூர்த்தி மூவராகி = பிரமனுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டிசெய்தும் தானான தன்மையிலே நின்று ரக்ஷணஞ்செய்தும், சிவனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸம்ஹாரத்தை நடத்தியும் போருகிறவனென்கை.

வேதம் விரித்துரைத்த புனிதன் = வேதப் பொருள்களைத் தெளிய வெளியிடாநின்ற பகவத் கீதையை அருளிச்செய்த பவித்ரன். புனிதனென்றது – தனக்கொரு பிரயோஜநத்தைக் கணிசியாமல் பிறருடைய லாபத்தையே நோக்கிக் காரியம் செய்தலாகிற மனத்தூய்மையை யுடையவனென்றபடி.

தான் சேயனொருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன் = “எவர்க்கும் சிந்தைக்கும் கோசரமல்லன்” என்றபடி மனத்தினால் நினைப்பதற்கும் எட்டாதவனாகிலும், தன்னையே நாளும் வணங்கித் தொழுகின்ற அந்தரங்க பக்தர்களுக்கு எளியனாயிருக்கையாகிற இனிமையுடையவன் என்றபடி.

 

English Translation

The first-cause Lord who himself became the three,-Brahma,  Siva and Indra,- who expounded the truth of the Vedas, who has a Kaya hue and wears the sacred Tulasi crown, who is the Lord of the celestials, and who is Lord afar and inaccessible to all, is yet the lord sweet and close to his devotees. He reclines in Evvul.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top