(915)

(915)

பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்

எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப

விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த

கண்ணறாஉன்னை யென்னோ களைகணாக் கருது மாறே.

பதவுரை

பெண் உலாம் சடையினானும்

கங்காநதி உலாவுகின்ற சடையையுடையனான சிவனும்
பிரமனும்

நான் முகக்கடவுளும்
உன்னை காண்பான்

உன்னைக் காண்பதற்காக
எண் இலா ஊழி ஊழி

எண்ணமுடியாத நெடுங்காலமாக
தவம் செய்தார்

தவம் புரிந்தவர்களாய் (அவ்வளவிலும் காணப் பெறாமையாலே)
வெள்கி நிற்ப

வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருக்க
அன்று

அக்காலத்திலே
ஆனைக்கு

(முதலைவாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
வந்து

(மடுவின் கரையில்) எழுந்தருளி
விண் உளார் வியப்ப அருளை ஈந்த

நித்யஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரமக்ருபையைச் செய்தருளிய
கண்ணறாய்

(என்னிடத்து அருள் செய்யாமையாலெ) தயவில்லாதவனே!
உன்னை

உன்னை
களைகணா

தஞ்சமாக
கருதும் ஆறு என்னோ

நினைக்கலாகுமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடியதென்பதை ஸ்தாபிப்பதற்காக ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்; சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்கவேணுமென்று நெடுங்காலம் தவம்புரிந்தும் அவர்கட்கு அப்பேறு கிடையாமையாலே வெள்கிநிற்க்கும்படியாயிற்று; கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக்ஜாதி.அப்படியிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய்விட்டது. ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோகமற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம்.

வெள்கிநிற்ப-தங்களுடைய சிரமம் வீணாய் ஒழிந்தமையை நினைத்து வெட்கப்பட்டுத் தலைகுனிந்து தரையைக்கீறி நிற்கையில்என்கை. அன்றியே, வெள்கிநிற்ப-வெட்கப்பட்டு நிற்கும்படியாக என்றுமுரைக்கலாம். ஒரு தபஸ்ஸும் செய்யாத ஒரு யானைக்கு அருளையீந்த்து பிரமனுக்கும் சிவனுக்கும் லஜ்ஜாஹேதுவாக ஆமன்றோ.

அவர்களுக்கு வெட்கமாவது- ஐயோ! முதலையின் வாயிலே அகப்படாமல் தபஸ்ஸிலே இழிந்து என்ன காரியஞ்செய்தோம்! என்றுபடும் லஜ்ஜை. அப்படி அவர்கள் லஜ்ஜைப்படும்படியாகவும் விண்ணுவார் ஆச்சரியப்படும்படியாகவும் வந்து என்க. வியப்ப – பரஹ்மாதிகள் நெடுங்காலமாக எதிர்பாராநிற்க அவர்களையும் எங்களையும் அநாதரித்து ஒரு திர்யக்ஜந்துவின் காற்கடையிலே அரைகுலையத்தலைகுலைய ஓடிப்போய்விழுவதே! என்று நித்யஸுரிகள் வியப்ப கண்ணறாய் ஸ்ரீ கண்ணறை யென்பதன் விளி.

“உன்னையென்னோ களைகணாக் கருதுமாறே” ஆச்ரிதபக்ஷபாதியான உன்னை ஜகத்துக்குப் பொதுவான ரக்ஷகனென்று சொல்லுமவர்கள் மதிகேடரென்றுகிறார் (தேவாரம் தாநவா நாஞ்ச ஸாமாந்ய மதிதைவதம்’ என்கிற பந்தம் கிடக்க சிலர்க்காகச் சிலரை அழிக்கிற இவனை ஸர்வரக்ஷகனென்று நினைக்கலாமோ?” என்பது வ்யாக்யாநஸுக்தி. களைகண்-ரக்ஷகம்.

English Translation

The Ganga mat-haired Siva and Brahma vie to see you. They perform penance, age after age, and stand disappointed. Surprising the gods above, you came with concern and showered your grace on an elephant. No wonder the world seeks you for benign protection.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top