(890)
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.
பதவுரை
| உலகத்தீரே |
– |
உலகத்திலுள்ளவர்களே! |
| கடல் நிறம் கடவுள் |
– |
கடல் போன்ற கருநிறத்தையுடைய கடவுளான |
| எந்தை |
– |
எம்பெருமான் |
| குடதிசை |
– |
மேற்குதிக்கில் |
| முடியை வைத்து |
– |
திருமுடியை வைத்தருளியும் |
| குணதிசை |
– |
கிழக்குத்திக்கில் |
| பாதம் நீட்டி |
– |
திருவடிகளை நீட்டியும் |
| வடதிசை |
– |
வடக்குத்திக்கிலே |
| பின்பு காட்டி |
– |
(தனது) பின்புறத்தைக் காட்டியும் |
| தென்திசை |
– |
தெற்குத்திக்கில் |
| இலங்கை |
– |
(விபீஷணன் வாழுமிடமான) லங்கையை |
| நோக்கி |
– |
(அன்போடு) பார்த்துக் கொண்டும் |
| அரவும் அணை |
– |
திரவனந்தாழ்வானாகிற படுக்கையில் |
| துயிலும் ஆ |
|
யோகநித்திரை செய்யுந் தன்மையை |
| கண்டு |
– |
காண்பதனால் |
|
எனக்கு உடல் உருகும்-; |
||
| ஆலோ |
– |
ஐயோ |
| என் செய்வேன் |
– |
(நான்) என்ன செய்ய மாட்டுவேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண் முதலிய அவயவங்களுக்கு உண்டாகிற விகாரமேயல்லாமல் அவற்றுக்கு ஆஸ்ரய மாய் அவயவியான ஸரீரமும் கட்டழியாநின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார். அழகிய மணவாளன் நான்கு திக்குக்களுக்கும் தன் ஸம்பந்தமுண்டாம்படி ஸேஷஸயநனாய் யோக நித்திரை செய்தருள்வதை ஸேவித்துத் தமது ஸரீரம் நீராய்க் கரைந்து உருகிச் செயலற்றிருத்தலை உலகத்தார்க்கு வியப்போடு அறிவிக்கின்றனரென்க.
பூமியின் ஸ்ருஷ்டி – மநுஷ்யதிர்யக்ஸ் தாவரங்களான பொருள்கள் வாழ்தற்காக என்றும் ஆகாஸத்தின் ஸ்ருஷ்டி – தேவர்கள் வாழ்தற்காக என்றும் ஏற்பட்டிருக்கிறது; திக்குக்களின் ஸ்ருஷ்டி வ்யர்த்தம் என்று நினைக்கவேண்டா; சேதநர்க்கு தன்மீது அன்பைக் யுண்டாக்குமாறு எம்பெருமான் தான் பள்ளி கொள்வதற்காகவே திக்குக்களை ஸ்ருஷ்டித்ததும் என்று இப்பாட்டால் கூறுவதாக விஸேஷார்த்த முரைப்பார்.
மேலைத்திக்கு – உபயவிபூதிக்கும் தலைமை வஹித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின திருவபிஷேகத்தையுடைய திருமுடியை வைப்பதனாலும் கீழைத்திக்கு – ஸகலலோகமும் உஜ்ஜீவிக்கும்படி ஸரணமடைந்தற்குரிய தனது திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்குத்திக்கு முரட்டு ஸம்ஸ்க்ருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச்சொல் நடையாடாத தேசமாகையாலே அத்திக்கிலுள்ளாரெல்லாரும் ஈடேறுதற்கு ஏற்படவேண்டிய பின்னழகையெல்லாம் காட்டுவதனாலும், தெற்குத்திக்கு -தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது திருக்கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும் என இவ்வாறு நான்கு திக்குக்களும் பயன் பெறுமென்க. விபீஷணாழ்வான் சிரஞ்ஜீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றானென்பது நூற்கொள்கை.
இப்படி நாற்றிசையிலுள்ளாரும் பயன்பெற வேண்டுமென்று ஒரு வ்யாஜம் வைத்து எம் பெருமான் பள்ளிகொண்டதும் ஆழ்வார் பொருட்டாகவே யாயிற்றென்ற கருத்து மூன்றாமடியில் தோன்றும். (எந்தை)
உடல் உருகும் – உணர்வுடைய ஜீவன் உருகுவதன்றி ஜடபதார்த்தமான உடம்பும் உருகு மென்றபடி. (”எனக்கு உடலுருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே”:) – ஆற்றுப் பெருக்கிலே அருகிலுள்ள கரைகள் உடைந்தால் கரையைப் பாதுகாப்பவர்கள் கைவிட்டுக் கடக்க நின்று கூப்பிடுமாபோலே கூப்பிடுகிறார். பெரியபெருமா ளழகைக் கண்டுவைத்துக் குறியழியாதே புறப்படுகிற ஸ்ம்ஸாரிகளைப் பார்த்து உங்களைப்போலே உடல் உருகாதே கல்லாயிருப்பதற்கு ஒரு உபாயம் சொல்லமாட்டீர்களோ? என்கிறார்.
English Translation
The Lord of ocean hue, my master, reclines on a serpent in Arangam, with his crown resting in the East, his feet stretched to the West, his back to the North, his eyes looking South towards Lanka. O People of the world! What can I do? Alas, my body melts to see him.
