(884)
எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே.
பதவுரை
| எறியும் நீர் வெறி கொள் வேலை |
– |
அலைகள் வீசுகின்ற தண்ணீரையும் (புலாலின்) நாற்றத்தையும் கொண்டிருக்கிற கடலினாற் சூழப்பட்ட |
| மா நிலத்து |
– |
பெரிய இந்தப் பூலோகத்திலுள்ள |
| உயிர்கள் எல்லாம் |
– |
ஆத்மாக்கள் யாவும் |
| வெறிகொள் பூ துளபம் மாலை |
– |
நல்ல பரிமளமுடைய அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள |
| விண்ணயர்கோனை |
– |
தேவாதி தேவனான திருமலை |
| ஏத்த |
– |
தோத்திரம் பண்ணுவதற்காகவே (ஏற்பட்டிருக்கின்றன) |
|
(அவ்வாறு துதிப்பது அற்பஞானமுடையார்க்கு முடியாவிடினும்) |
||
| அறிவு இலா மனிதர் எல்லாம் |
– |
தத்வஜ்ஞானம் நிரம்பாத அந்த மனிதர் யாவரும் |
| அரங்கம் என்று அழைப்பர் ஆகில் |
– |
அபுத்தி புர்வமாகவாகது ஸ்ரீரங்கமென்று சொல்லுவர்களானால் |
|
(அம்மாத்திரத்தாலேயே) |
||
| பொறியின் வாழ் |
– |
பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு வாழ்கின்ற |
| நரகம் எல்லாம் |
– |
(ஞானிகளுக்கு நரகமாகிய ) இப்பிரபஞ்சம் முழுதும் |
| புல் எழுந்து |
– |
புல் முளைத்து |
| ஒழியும் அன்றே |
– |
பாழாய்ப்போய்விடுமென்றோ. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன்” என்பதும் (மெய்யெழுத்து நீக்கி) எட்டெழுத்து, திருமந்த்ரமும் எட்டெழுத்து என்க.
கீழெல்லாம் பிறருடைய துயரத்தைக்கண்டு தாம் பொறுக்கமாட்டாமல் கவல்கிறபடியை வாய்விட்டுச் சொன்னார்; ஒன்றும் பயன்படவில்லை; இனி பரோபதேசத்தில் நின்றும் மீண்டுவிடுவோம் என்று பார்த்தார்; பிறர்க்கென்றே அவதரித்த இவர் எங்ஙனே சடக்கென மீளக்கூடும்? தீயகுணம் நிறைந்த பிள்ளையைப்பற்றி ஒன்றும் கவனிக்கக்கூடாதென்று தகப்பன் மீள நினைத்தாலும் அந்நினைவின்படி உடனே மீளமுடியுமோ? அப்படியே இவ்வாழ்வாரும் பிறருடைய துயரத்தைப்பற்றிக் கவலைப்படுவதினின்றும் உடனே மீளமாட்டாமல் அவர்களை நோக்கிக் கூறுகிற முறையை மாத்திரம் விட்டிட்டு, தம் நெஞ்சோடு தாமே வருந்துகின்றார், இப்பாட்டில்.
மூலப்ரக்ருதியிலே அழுந்தி ஒளி மழுங்கிக் கிடந்த ஆத்மாக்களை யெல்லாம் எம்பெருமான் தனது இன்னருளால் உஜ்ஜீவிப்பிக்க விரும்பித் தன்னை அடையுமாறு கரசரணம் முதலிய அவயவங்களையும் சாஸ்திரங்களையும் காட்டிக்கொடுத்தான் என்ற நூற்கொள்கை, முன் இரண்டடிகளிற் குறிப்பிடப்பட்டது.
அதற்கு ஏற்ப, கடவுளையடைந்து ஈடேறுவது தத்வஞானத்தின் காரியமாதலால் அறிவிலா மனிசர்க்கு அது கைகூடாவிடினும், அவர்கள் யாவரும் அபுத்தி பூர்வமாகவாவது எம்பெருமான் நித்யவாஸஞ் செய்கின்ற திருவரங்கம் பெரியகோயிலை ஒருதரமாவது வாய்விட்டுச் சொன்னாரானாலும், அவனது ஊரைச்சொன்னதன் பயனாக அவ்வெம்பெருமானால் கடாக்ஷிக்கப்பெற்று மோக்ஷத்தையடையத் தட்டில்லை; பின்பு பாபத்தின் பயனாக வாழ்கின்ற பிராணி ஒன்றும் இங்கு இருக்கக் காரணமில்லாமையால் இந்தப் பூலோகம் முழவதும் புல் முளைத்துப் பாழாய்விடும்; இத்துணை எளியவழியையும் மேற்கொள்ளாமற் கைவிட்டு இவ்உலகத்தவர் அறிவு கேடராயிருக்கின்றார்களே! என்று பின்னிரண்டடிகளால் இரங்குகின்றனரென்க.
நலமந்தமில்லதோர் நாடாகிய பரமபதத்தை அடைந்து அங்கு ‘ஸர்வகந்தஸ்ஸர்வரஸ:’ என்கிற எம்பெருமானுடைய திருத்துழாய் நறுமணத்தை அநுபவித்துக்கொண்டு அப்பிரானை ஏத்தி இனிதாக இருக்கவேண்டிய சேதநர்கள் ”வெள்ளத்திடைப்பட்ட நரியினம்போலே” என்றபடி கலங்கிப் புலால் நாற்றம் வீசுகிற கடல்வெள்ளத்துக்கு உட்பட்ட இப்பூமியிலே கிடந்து வருந்துகின்றார்களே! என்ற இரக்கப்பொருள் தோன்ற “ எறியுநீர் வெறிகொள்வேலை மாநிலத்துயிர்கள்” என்கிறார். மாநிலம் -ஐம்பது கோடி விஸ்தீர்ணையான பூமி.
அழைப்பாராகில் என்றது -பெரும்பாவிகளான இவர்கட்குக் கடுஞ்சொற்களைச் சொல்வது எளிதேயன்றி, அரங்கமென்று வாயாற்சொல்லுவதும் அருமை என்பது தோன்ற.
யந்திரம்போல எல்லா அவஸ்தையிலும் தப்பாதபடி தன்பக்களிலே அகப்படுத்திக் கொள்ளவற்றாகையாலே பொறி என்று இந்திரியங்களைச் சொல்லுகிறது. “இருள் தருமா ஞாலத்து ளினிப்பிறவி யான்வேண்டேன்” என்னும் ஆழ்வார் போன்ற அறிவுடையார்க்கு இந்த உலகவாழ்வு நரகம்போலத் தோன்றுமாதலால், இந்த ஸம்ஸாரத்தை நரகம் என்றே கூறினார்.
இவ்வுலகத்திலுள்ளோர் யாவரும் எம்பெருமானுடைய திருப்பதியின் திருநாமத்தைச் சொன்னாராகில் அதுவே காரணமாகப் பரமபதத்தை அடைவராதலால் அப்போது நரகத்திற்குச் செல்வார் ஒருவருமில்லாமற்போக, அந்நரகம் புல்லெழுந்தொழியும் என்று உரைப்பாருமுண்டு; இப்பொருளில், பொறி இல் என்று பிரித்து ‘அழகு இல்லாத’ எனப் பொருள் கொள்க.
வாழ்-அசை.
English Translation
All the creatures on the Earth surrounded by the fragrant ocean worship the Lord of celestials who wears a fragrant Tulasi garland. If only the foolish men here were to call “Aranga!”, the Hell of life-in-body will grow weeds and disappear.
