(732)

(732)

கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்

மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்

மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்

கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே

பதவுரை

கொல் அணை

கொலைத்தொழில் பொருந்தின
வேல்

வேலாயுதம் போன்ற
வரி நெடுங்கண்

செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய
கௌசலை தன்

கௌஸல்யையினது
குலம்

குலத்தில் தோன்றிய
மதலாய்

குமாரனே!
குனி வில் ஏந்தும்

வளைந்தவில்லைத் தரித்த
மல் அணைந்த வரை தோளா

வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே!
வல் வினையேன்

மஹா பாபியான என்னுடைய
மனம் உருக்கும் வகையே கற்றாய்

மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே!
காகுத்தா

ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே!
கரிய கோவே

கருநிறமுடைய ஐயனே!
மெல் அணை மேல் முன் துயின்றாய்

மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம்படுத்து உறங்கிப்பழகினவனான நீ
இனி இன்று போய்

இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று
வியன் கானம் மரத்தின் நீழல்

பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ

கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப்பழகின்றாயோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இன்றளவும் ராஜார்ஹமான ஸுகுமாரஸுயங்களிலே ஸுகமே கிடந்து கண் வளர்ந்த உனக்கு இனி கொடுங்கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பரல்மேல் படுக்க நேர்ந்ததே! இஃதென்ன கொடுமை! என்று வயிறெரிகிறபடி. வல்வினையேன் என்றது குடையுஞ்செருப்புங் கொடாதே தாமோதரனை நான், உடையுங்கடியனவூன்று வெம்பரற்களுடைக்கடிய வெங்கானிடைக் காலடிநோவக் கன்றின்பின் கொடியே னென்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே என்றாற்போல் பெருமானுடைய திருமேனி ஸௌகுமார்யத்தை நோக்காமல் வெவ்வியகாட்டில் அவனைப் போகவிட்ட கொடுமையையுடைய தன்னைத்தானே வெறுத்துக்கூறியது. மனமுருக்கும் என்றவிடத்து மனம் முருக்கும் என்றும் பதம்பிரிக்கலாம். முருக்குதல் – அழித்தல். முருங்கு என்பதன் பிறவினை. வியன் – உரிச்சொல். வியல் என்பதன் விகாரமுமாம். நீழல் – நிழல் என்பன் நீட்டல்

English Translation

O Lord, tutelary deity to Kousalya with spear-sharp eyes! O Strong-armed bow-wielder. O Dark-hued Lord, scion of the Kakuthstha clan! You know to melt this sinner’s heart! You who always slept on a soft bed must now be learning to sleep on a bed of rocks under the shade of a deep forest tree, Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top