(685)

(685)

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்

அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

பதவுரை

செடி ஆய

செடிபோல் அடர்ந்துள்ள
வல்வினைகள்

கொடிய கருமங்களை
தீர்க்கும்

(ஆச்ரிதர்க்குப்) போக்கியருள்கிற
திருமாலே

ச்ரிய:பதியான பெருமானே!
நெடியானே

பெரியோனே!
வேங்கடவா

திருவேங்கட முடையானே!
நின் கோயிலின் வாசல்

உனது ஸந்நிதியின்உள் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து

பாகவதர்களும் மற்றைத் தேவர்களும் அப்ஸரஸ் ஸ்த்ரீகளும் இடைவிடாது ஸஞ்சரிக்கப் பெற்ற படியாய்ப் பொருந்தி
உன் பவளம் வாய் காண்பேன்

உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “ நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேனாவேனே “ என்று திருமலைக்கு வழியாகத் தானாகவேணுமென்று அபேக்ஷித்தவர் சிறிது ஆராய்ந்ததில் அது தன்னிலும் ஓர் குறை கண்டார்; வழியென்பது அவரவர்களுடைய ஸௌகரியத்துக்குத் தக்கபடி மாறுபடும் கீழ்த்திருப்பதியிலிருந்து திருமலைக்குப் போகும் வழி மிக வருத்தமா யிருக்கிற தென்று யாத்திரிகள் சந்த்ரகிரி வழியாகப் போகக்கூடும்; ஓரிடத்திற்கு ஒன்று தான் வழியென்று சொல்ல முடியாதாகையாலும், வழியானது விலகி நிற்பதாகையாலும், வழியாக வேணுமென்று விரும்புவதிற் காட்டிலும் எம்பெருமானது திருவருள் நோக்கம் பதியுமாறு அவன் கண்முகப்பிலே மெய்யடியாரோடு பிறரோடு வாசியற எல்லாரும் இடைவிடாது ஸஞ்சரிக்கும்படியான ஓர் அசேதநப் பொருளாகி, அதிலே உன் பவளவாய் காணும்படியானதொரு சைதந்யத்தையும் பெறக்கடவே னென்று தமது விசேஷமான விருப்பத்தை விண்ணப்பஞ் செய்கிறார் இதில்.  இப்பாசுரத்தை அடியொற்றியே விஷ்ணுவாலயங்களிற் கோயிலினுள் வாசற்படி “ குலசேகரப்படி “ என்று இவர் பெயரையிட்டு வழங்கப்படும் என்பது ஸம்ப்ரதாயம்.

English Translation

Lord who ends the misery of overgrown-like-weed Karma! Eternal Lord of Venkatam hills! O, for a glimpse of your coral lips constantly, I wish to lie on the doorstep at the portals of your temple, where devotees, celestials and Rambha stand and wait.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top