(650)

(650)

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி

ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்

பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

பதவுரை

மாவீனை வாய் பிளந்து உகந்த மாலை

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை

கடல்போன்ற வடிவையுடையவனாய்
ஏன் கண்ணணை

என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று

(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக்காலத்திலே
வல் குன்றம் ஏந்தி

வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட

பசுக்களைக் காப்பாற்றியருளின
ஆயர்  ஏற்றை

இடையர்  தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை

நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அத்தமிழின் இன்பம் பாவினை

அழகிய தமிழ்ப்பாஷையாலாகிய ஆநந்தமயமான அருளிச்செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை

அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து

ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே

அரவு அணையில் பள்ளிகொள்ளும்,

கோவினை

ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற

நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி

துதித்து
என் தன் கைகள்

என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய்

(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல்

அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ளவந்த கேசியென்னு மசுரனைக் கொன்று தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும், கடலைக் கண்டாற் போலே வடிவைக்கண்டபோதே தாபத்ரயமும் தீரும்படியிருப்பவனும், அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும் பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து  ‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம் என்றைக்கு  வாய்க்குமோ என்கிறார். எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார்.

(பற்றற்றார்கள் பயிலரங்கம்) “சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.

English Translation

The adorable Lord, the ocean-hued-one, reclines on a serpent-bed in Arangam. In the yore, he ripped the horse Kesin’s jaws; he lifted a mountain and gave protection to cows against a hailstorm. Sweet as the Tamil songs sung by freed souls, and praised by Vedic seers, he is my Krishna, dear to me. O, when will I worship him with flowers plucked with my own hands, and praise him till my tongue swells?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top