(619)
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
பதவுரை
| தந்தையும் |
– |
“தகப்பனாரும் |
| தாயும் |
– |
தாய்மாரும் |
| உற்றாரும் |
– |
மற்றுமுள்ள உறவினரும் |
| நிற்க |
– |
இருக்கும்போது |
| தனி வழி |
– |
(இவள்) தான்தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்“ என்கிற வார்த்தையானது |
| வந்த பின்னை |
– |
உலகில் பரவின பிறகு |
| பழிகாப்பு அரிது |
– |
அப்பழியைத் தடுப்பது முடியாது (நான் தனிவழி போகாதிருக்கவும் முடியவில்லை, ஏனென்றால்) |
| நந்தகோபாலன் |
– |
நந்தகோபருடைய |
| கடைத்தலைக்கே |
– |
திருமாளிகை வாசலிலே |
| மாயவன் |
– |
ஆச்சர்யசேஷ்டிதங்களை யுடையனான கண்ணபிரான் |
| வந்து |
– |
எதிரேவந்து |
| உருகாட்டுகின்றான் |
– |
தன் வடிவைக் காட்டி இழுக்கின்றானே (இப்போது நீங்கள் செய்யவேண்டிய தென்னவென்றால்) |
| கொந்தளம் ஆக்கிபரக்கழித்து குறும்பு செய்வான் ஓர்மகளை பெற்ற |
– |
(பெண்களைக்) குடிகெடுத்துக் குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான |
| நள்ளிருட்கண் |
– |
நடுநிசியிலே |
| என்னை உய்த்திடுமின் |
– |
என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தாய் தகப்பன்மார் சுற்றத்தார் முதலானோர் இருக்கும்போது, அவர்களைக்கொண்டு தனக்குற்ற நன்மைகளைத் தேடிக்கொள்ளவேண்டியது தகுதியாயிருக்க, ஒருபெண்பிள்ளை அவர்களையெல்லாம் திரஸ்கரித்துவிட்டுத் தான்றோன்றியாகத் தானே புறப்பட்டாள் என்று சிலர் பழிக்கத் தலைப்படுவர்க் அப்பழியானது என்னளவிலே நில்லாமல் இக்குடிக்கே பெருத்த பழிப்பாய்த்தலைக்கட்டும். அப்போது இப்பழியைப் பரிஹரிக்க நீங்கள் முயலாதிருக்கப்போகிறதில்லை. ஆனால் அப்போது உங்களுடைய முயற்சி பயன்படமாட்டாது. பழிவிளைவதற்கு முன்னே அதனைப் பரிஹ்ஹரிக்கப் பார்க்கவேணுமேயல்லது பழிவிளைந்து பரவினபின்பு அது பரிஹரிக்கப்போமோ? பழிவிளைவதற்கு ப்ரஸக்தியில்லாமல் அடங்கியிருக்க என்னால் முடியிவில்லை, இப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் செய்யத்தக்கது யாதெனில், தான்தோன்றியாய் நானாகப்படி கடந்து புறப்பட்டுப்போனேனென்கிற வார்த்தைக்கு அவகாஸமில்லாதபடி என்னை நீங்களாகவே விரும்பி அழைத்துக்கொண்டுபோய்க் கண்ணபிரானருகில் சேர்த்துவிடுங்கள், அப்படிச் செய்யுமளவில் என் மநோரதமும் நிறைவேறி நானும் வாழ்ந்தேனாகிறேன், நீங்களும் புகழ்பெற்றுப் போகிறீர்கள். பழிக்க நினைப்பார்க்கும் அவகாஸமில்லாமே போகிறது. இந்த ஔசித்யத்தை நீங்கள் நன்று கண்டறிந்து இப்படிச் செய்து முடிப்பீர்களென்று நம்பியே நான் விரைந்து புறப்படாதே நிற்கின்றேன் என்கிறாள்.
தாய் தகப்பனார் முதலானவர்களைத் திரஸ்கரித்தாகிலும் தான் புறப்பட்டுப்போயே தீரவேணுமென்கைக்குக் காரணஞ்சொல்லுகிறாள் மாயன்வந்து உருக்காட்டுகின்றான் என்று, என்னைக் கண்ணபிரானுடைய திருவுருவம் கொள்ளைகொள்ள நிற்கும்போது உங்களைப்பார்த்து நான் எங்ஙனே ஆறியிருப்பேன் என்கிறாள்போலும். கண்ணபிரானுடைய வேணுகானம் செவிப்பட்ட போது “கோவலர் சிறுமியரிளங்கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்தெங்கும் காவலுங்கடந்து கயிறாமாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே“ என்றபடி பெண்களெல்லாரும் பதறி ஓடினபடி உங்களுக்கு தெரியாதா, நானும் அப்படிக்காவல்கடந்து ஓடவேணுமென்று உங்களுக்கு ஆசையா? என்கிறாள்போலும்.
தன்னைக் கொண்டுபோய் விட வேண்டுமிடத்தைக் கூறுகின்றாள் பின்னடிகளில். * மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம்புக்குக், கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறி, நிச்சலுந்தீமைகள் செய்பவனாய், * ஆற்றிலிருந்து விளையாடுவோர்களைச் சேற்றாலெறிந்து வளை துகில் கைக்கொண்டு, காற்றில் கடியனாய் ஓடி நந்தகோபாலனுடைய திருமாளிகை வாசலிலே என்னைக் கொண்டுபோய்ப் படுக்கவையுங்களென்கிறாள். நந்தகோபாலன் கடைத்தலையென்றால் வைத்யர்களின் வீட்டுவாசல்களில் நோயாளிகள் படுகாடுகிடக்குமாயோலே கண்ணபிரானால் புண்பட்ட பெண்கள் படுகாடு கிடக்குமிடமென்று ப்ரஸித்தமாயிருக்கும்“ என்று பட்டரருளிச்செய்வராம்.
“கொந்தளம் – சிலுகிடுகை, பரக்கழிகை – பழிவிளைக்கை“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி அதாவது – “கண்ணன் பெண்களைப் புண்படுத்தினவாறு என்னே!“ “நோவுபடுத்தினவாறு என்னே“ என்று அனைவரும் மனம் நொந்து பழிக்கும்படிக்கீடான குறும்புகளைச் செய்யுமவனென்கை.
நள்ளிருட்கணென்னையும்த்திடுமின் – நாலுபேர் கண்ணிலே தென்படும் படியான மையத்திலே நீங்கள் என்னை அங்கே கொண்டுபோனால் அவன் தாய் தங்கையர்க்கு வெட்கப்பட்டு முகம்நோக்காதேயிருப்பன், ஆதலால் ஒருவர்க்கும் வெள்காமல் உடனே அவன் எனை அணைக்கும்படி நடுநிசியிலே கொண்டு போங்கள் என்கிறாள்.
English Translation
They say I have strayed from the trodden path discarding mother, father, kith and kin I cannot guard against slander anymore-the stranger’s face haunts me everywhere. In the dead of the night, leave me at the portals of Nanda’s mansions, where broken hearted maidens lie groaning while the son plays with them ruining their reputation.
