(478)
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
பதவுரை
| மாயனை |
– |
மாயச் செயல்களையுடையவனும் |
| மன்னு வடமதுரை மைந்தனை |
– |
(பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப்பெற்றுள்ள வடமதுரைக்குத் தலைவனும், |
| தூய பெரு நீர் |
– |
பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தையுடைய |
| யமுனை துறைவனை |
– |
யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையயவனும், |
| ஆயர் குலத்தினில் தோன்றும் |
– |
இடைக்குலத்தில் விளங்காநின்றுள்ள |
| அணி விளக்கை |
– |
மங்களதீபம் போன்றவனும் |
| தாயை குடல் விளக்கஞ்செய்த |
– |
தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச்செய்தவனுமான |
| தாமோதரனை |
– |
கண்ணபிரானை, |
| நாம் |
– |
(அடிச்சியோமாகிய) நாம் |
| தூயோம் ஆய் வந்து |
– |
பரிசுத்தியுள்ளவர்களாய்க்கிட்டி |
| தூ மலர்கள் தூய் |
– |
நல்ல மலர்களைத் தூவி |
| தொழுது |
– |
வணங்கி |
| வாயினால் பாடி |
– |
வாயாரப்பாடி |
| மனத்தினால் சிந்திக்க |
– |
நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு) |
| போய பிழையும் |
– |
(சேஷ சேஷிபாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும், |
| புகுதருவான் நின்றனவும் |
– |
பின்பு (தன்னை அறியாமல்) வரக்கூடிய பாவங்களும் |
| தீயினில் தூசு ஆகும் |
– |
நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம்; (ஆன பின்பு) |
| செப்பு |
– |
அவ்வெம்பெருமான் திருநாமங்களைச் சொல்; |
|
ஏல் ஓர் எம் பாவாய்! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நோன்பு நோற்கும் பெண்களில் ஒருத்தி, ‘நாம் நோன்பு நோற்று எம்பெருமானை அநுபவிக்க இலையகலப் பாரியா நின்றோம்; இஃது அழகியவாறே; ‘ச்ரேயாம்ஸிபஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி” என்று மேலையார் செய்யும் நற்சிரிசைகட்கும் பல இடையூறுகள் மிடைதரமென்று நூல்கள் கூறும்; இராமபிரானை முடிசூட்டுதற்காகச் சம்பராந்தகனான தசரத சக்கரவர்த்தி பாரித்தான்; பிரமவிருடியான வசிட்டன் முஹூர்த்தமிட்டான்; ஸாக்ஷாத் தரும்மெனப்பட்ட இராமன் முடிசூட நின்றான்; பிராட்டியோடே கூடிப் பெரியபெருமாளைத் தொழுதிறைஞ்சினான்; நாடடங்கலும் இவ்வபிஷேக மங்களத்தைப் பிரார்த்தித்து மங்களாசாஸநம் செய்யாநின்றது; இங்ஙனம் அமைந்திடவும் அந்த மங்கள காரியத்திற்குமன்றோ இடையூறு மிடைதந்தது; நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க இன்று செய்யக்கருதிய நற்கிரிசை நன்னர் நிறைவேறுமோ?’ என்று கேட்க; நாம் பகவந்நாம ஸங்கீர்த்தநம் பண்ணவே பாவங்களனைத்தும் தீயிலிட்ட பஞ்சுபோல உருமாய்ந்தொழியுமாதலால் அத்திரு நாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணக்கடவையென்று அவளை நோக்கி மற்றொருத்தி உரைக்கும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.
ஸர்வேச்வரன் பரமபத நிலய்னாயிருந்து வைத்துத் திருவாய்ப்பாடியிற் கண்ணபிரானாய் அவதரித்துக் கோவலர்க்கும் கோக்களுக்குந் தான் எளியனாய், வெண்ணெய் களவுகாண்பது, மாதரைக் களவுகாண்பதாய்ச் செய்த ஆச்சாரியச் செயல்களின் அளவின்மையை நினைத்து “மாயனை” என்றது. “சூட்டுநன் மாலைகள்” என்ற பாசுரமுங் காண்க. திருவடமதுரையில் ஸித்தாச்ரமத்தில் ஸ்ரீவாமநனாய்த் தவம்புரிந்திருந்தமையாலும் ஸ்ரீசத்ருக்நாழ்வான் படையெடுத்துப் பகையறுத்துத் தனக்குப் படைவீடாகப் பெற்று நெடுநாள் அரசாண்டமையாலும், கிருஷ்ணனாய் வந்து பிறந்தமையாலும் இவ்வாகைகளாலே மதுரைக்குப் பகவத்ஸம்பந்தம் நித்தியமாயிருக்குந் தன்மைபற்றி மன்னு என்று வடமதுரைக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.
மைந்தன் – மிடுக்கை யுடையவன்; மைந்து – மிடுக்கு, “தந்தைகாலிற் பெருவிலங்கு தாளவிழ நள்ளிட்கண், வந்தவெந்தை” என்றபடி கண்ணபிரான் தான் பிறக்கும்போதே வஸுதேவ தேவகிகளின் காலில் விலங்கு இற்று முறியுமாறு பிறந்த மிடுக்கைக் கூறியவாறு; பருவம் நிரம்புவதற்குமுன்னே கஞ்சன் குஞ்சி பிடித்துதைத்த மிடுக்கைக் கூறியவாறுமாம்.
கண்ணன் திருமதுரையிற் பிறந்தவாறே வஸுதேவன் கம்ஸனிடத்துள்ள அச்சத்தினால் அப்பிள்ளையைத் திருவாய்ப்பாடியில் ஒளிந்து வளர்க்கக் கருதி எழுந்தருள்வித்துக்கொண்டு செல்ல, வழியிடையிற் பெருவள்ளமாய்ப் பெருகிக்கொண்டிருந்த யமுனையாறு தன்னை முழந்தாளளவாக வற்றுவித்து வழிதந்தமையால், அவ்வாற்றிற்கு இதனை ஒப்புயர்வற்ற தூய்மையாகக் கருதித் தூய பெருநீர் என விசேஷிக்கப்பட்டது. இங்கு, “யமுநாஞ்சாதிகம்பீராம் நாநாவர்த்தஜஷாகுலாம் – வஸுதேவோ வஹந் க்ருஷ்ணம் ஜாநுமாத்ரோதகோயயௌ.” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம் நோக்கத் தக்கது. பிராட்டி சரணம்புகவும் ராவணபயத்தாலே, அஞ்சியிருந்த கோதாவரி போலன்றியே கம்ஸன் மாளிகை நிழற்கீழே வற்றிக்கொடுத்ததே தூய்மையாம். பெருநீர் – அஞ்சுலக்ஷங்குடியிற் பெண்களும் கண்ணனுங்கூடி ஜலக்ரீடை பண்ணுவதற்கும், பெண்கள் விரஹதாபந்தீரக் குளிக்கைக்கும் பரியாப்தமான நீரையுடைய வென்றபடி. பெருமை பொருந்திய நீரையுடைய வென்றுமாம். கவிபாடுவார்க்கு ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால், “வடமதுரை மைந்தனை” என்று ஊரும், “தாமோதரனை” என்று பேரும், “யமுனைத்துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன. “முத்துப்படுந்துறை, நவமணி படுந்துறை” என்னுமாபோலே, கண்ணபிரானுக்கு எமுனையாறு பெண்கள் படுந்துறையாகையால் “யமுனைத்துறைவனை” எனப்பட்டது.
“ஆயர்கலத்தினிற் பிறந்த” என்னாது, “தோன்றும்” என்றது, “தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடியொற்றியென்க: கீழ்த்திசையில் உதிக்கின்ற ஆதித்தியனுக்கு அத்திசையிற் பற்றுண்டாவதென்ற கருத்துத் தோன்றக் கூறினான் முனிவனென்பர். ஆகில், “கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்” “மன்னு நாரணன் நம்பி பிறந்தமை” “பிறந்தவாறும்” என்றிப்புடைகளிலே கூறப்பட்டுள்ளவற்றுக்குப் பொருந்த மெங்ஙனே யெனில்; ஸம்ஸாரிகள் பத்து மாதம் கர்ப்பவாஸம் பண்ணினால், “பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால்” என்றபடி தான் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாஸம் பண்ணுகையாலும், பெற்ற தாய்க்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவுபடுகையாலும், தன்னைக்கட்டவு மடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் அங்ஙன் கூறப்படுகின்றதெனக் கொள்க. இனி, வடமதுரையிற் பிறந்த கண்ணபிரானை ஆயர; குலத்தினிற் பிறந்தனனாகக் கூறுவானென்னெனில்; முலைப்பால் குடித்து அழுதவிடமே பிறந்த இடமாதல் பற்றி யென்க. அன்றி, மதுரையில் மறைந்திருந்து ஆய்க்குலத்தில் வெளிப்பட்டமை பற்றியுமாம்.
உடலை நீக்கித் தலையையும், தலையை நீக்கி உடலையுங் கழுவுமவர்களான இடைச்சிகள் “தூயோமாய்” என்கிறார்களே, இவர்கட்குத் தூய்மையாவதென்? எனில்; எம்பெருமானிடத்தில் ஸம்பந்தவுணர்ச்சிக்கு மேற்பட வேறொரு சுத்தியும் ஆத்மாவுக்கு இலதாதலால் அத்தூய்மை கூறப்படுகின்றது. “மமசாப்யந்தராத்மாயம் சுத்தம் வேத்தி விபீஷணம்.” என்று – ஸுக்ரீவ மஹாராஜர; இராமபிரானிடத்து விபீஷணழ்வானைச் சுத்தனென்றது, மேற்கூறிய தூய்மையைக் கருதியன்றோ.
தூமலர்கள் – மலர்க்குத் தூய்மையாவது – ஒரு பிரயோஜநத்தை விரும்பி இடப்படாதொழிகை. தூய் என்ற சொற்போக்கால், எம்பெருமானது திருவடிகளில் மலர்களை மிக்க ஆதரத்துடன் ஸமர்ப்பிக்கவேணுமென்றொரு நியதியில்லை; அடைவு கெடத்தூவிலும்மையு மென்பது போதரும். தொழுது, பாடி, சிந்திக்க என்று மனமொழி மெய்களாகிற முக்கரணங்களினுடையவும் வியாபாரங்கள் கூறப்பட்டன.
இனி, தொழுகை, பாடுகை, சிந்தனையாகிய இக்காரியங்களினாற் பெறும் பேறு கூறுவன், கடையிரண்டடிகள். எம்பெருமானை யடிபணிவதற்கு முன்பு செய்யப்பட்ட பிழைகள் – போய பிழை; (பூர்வாகம்) எனப்படும். அடிபணிந்த பின்னர் பிரகிருதி வாஸனையினால் அப்புத்தி பூர்வமாகச் செய்யும் பிழைகள் – புகுதருவான் நின்றான்; உத்தராக மெனப்படும். இவையிரண்டும் தியிலிட்ட தூசுபோல உருமாய்ந்தொழியுமென்று பலன் கூறிற்றாயிற்று.
‘நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க, இன்று செய்யக் கருதிய நற்கிரிசை நன்னர் நிறைவேறுமோ?’ என்று வினவியவளை நோக்கியது, செப்பு என்ற முன்னிலை வினைமுற்று! இங்ஙன் ஒருத்தியை முன்னிலைப்படுத்திக் கூறியவிது அனைவரையும் நோக்கிக் கூறியவாறே யாமெனக் கொள்க; உபலக்ஷணமென்க. செப்ப என்று பிரிக்கவுமாம்.
English Translation
If we come pure and strew fresh flowers, with songs on our lips and feeling in our hearts, and offer praise with joined hands to our Lord Damodara, the prince of Northern Mathura who haunts the clean banks of the great river Yamuna, who was born as the light of the cowherd clan, and who was the jewel of his mother’s womb, then he will forgive our past misdeeds, and even what remains will disappear like cotton unto fire. So come, let us praise him!
